Tuesday, 18 June 2019

எஸ். எஸ். கோட்டை: காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்




எஸ். எஸ். கோட்டை: 

காமராசர் மனம் குளிரும் கல்வித் தலம்



           " சம்முகவேல் நல்ல படிக்கறவே(ன்) "  என்று வட்டார வழக்கிலேயே அந்த சண்முகவேல் சொன்ன போது அரங்கமே கரவோலிகளால் அதிரந்தது.   

                ஒருவன் தன்னைத் தானே நன்றாகப் படிப்பவன் எனும் போது அவன் தன்னிலையைத் தான் வெளிப்படுத்துகிறான்.  அதில்
உணர்ச்சிகரமான வெளிப்பாடோ எழுச்சி முழக்கமோ இல்லையே? ஒரு சாதாரண தன்னிலை வெளிப்பாட்டிற்கு அவ்வளவு பரவசம் ஏற்படுமா? அன்று அந்த அரங்கில் ஏற்பட்டது! எப்படி ஏற்பட்டது?  வாருங்கள் அந்த அரங்கிற்கே செல்வோம்.


                 அந்த  அரங்கில் இருந்தவர்களில் சரி பாதியினர் அந்த சண்முகவேலை விட ஒரிரு ஆண்டுகள் இளையவர்கள், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.  இன்னொரு பாதியினர் அவன் பெற்றோரை போன்றவர்கள்.  அது  08.06.2019 அன்று முன்னுதாரணப் பள்ளியான காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "தேர்வுகள் இனி இன்பமயமே!" எனும் கருத்தரங்கம்.

                    அந்தக் கருத்தரங்கின் நாயகன் 2018-19 கல்வியாண்டின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 490/500 மதிப்பெண்கள் பெற்றிருந்த சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாணவன் எனும் பெருமைக்குரிய  செல்வன் சண்முகவேல் தான்.

                      சிற்றூரன எஸ். எஸ். கோட்டையிலுள்ள அரசு மேனிலைப் பள்ளியின் மாணவனான சண்முகவேல் மாவட்டத்தின் முதல் மாணவனாக வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சியையும் அதைவிட கூடுதலாக வியப்பையும் ஏற்படுத்தியது.

                    15 ஆண்டுகளுக்கு முன்னர் பிள்ளை பிறந்த நொடியிலிருந்தே,  தங்கள் கனவுகளை இறக்கி வைக்க இவன் பிறந்தான்/இவள் பிறந்தாள் என்ற உவகையோடு எண்கணிதம் பார்த்து மிகவும் மாறுபட்ட பெயர் சூட்டப்பட்டி, இரண்டு வயதிலேயே பள்ளியில் தள்ளப் பட்டு, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் செலவழித்து படிக்க வைத்து, பத்தாம் வகுப்பு நெருங்கும் வேளையில் கூடுதலாக இரண்டு மூன்று தனிப் பயிற்சிகளுக்கும் (டியூஷனுகளுக்கும்) அனுப்பப்படும் மாணவனோ மாணவியோ தான் மாவட்ட தரவரிசை (ரேங்க்) பெற முடியும் என்ற எண்ணம் நம் பொது புத்தியில் பதிந்த நிலையில் அந்த சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் பிறந்து வளர்ந்து படித்த சண்முகவேல் முதல் மாணவன் என்ற அலங்காரப் பெருமைக்குள் மட்டும் நிற்பவனா?
பொது புத்தியில் கல்வி குறித்துப் பதிந்துள்ள மாயக் கணக்குகளை வேறரத்த வெற்றி வீரனுமாவான்.

                       அவன் 490 மதிப்பெண்கள் பெற்றதை, நம்பியே ஆகவேண்டிய அதிசயமாக அந்த அரங்கம் கருதியது. கடின உழைப்பைத் தவிர வேறு வழி என்ன இருந்திருக்க முடியும்?  அதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்று அந்த அரங்கில் கூடியிருந்த முத்தரப்பினரும் அவனுடைய கடின உழைப்பைக் கேட்கவே கூர்மையாக செவிகளைத் தீட்டிக் கொண்டிருந்தார்.  

                         அவனுடைய உரையின் முற்பகுதியில்  எங்கள் ஊரில் (அதுவே சிற்றூர்) யாருக்கும் என்னைத் தெரியாது, என் பெற்றோர்களையும் தெரியாது என் தாத்தாவை மட்டும் தான் தெரியும் ஆனால் இப்போது நான் 490 மதிப்பெண்கள் பெற்றதால், சண்முகவேல் என்பவன் நன்றாகப் படிப்பவன் என்று எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றான்.

                            உணவு, உடை, உறையுள்ளிற்கு பிறகு மனிதனின் இன்றியாமையாத தேவை அடையாளம்.  அடையாளம் என்பது புகழின் விதை.

                             கல்வி என்பது அறிவு மட்டுமல்ல அடையாளமும் ஆகும் தன்னையே சான்றாக்கி ஒரு வெற்றி மாணவன் உரைக்கும் போது அவனைப் போன்ற மாணவர்கள், அவன் பெற்றோரைப் போன்றவர்கள்  எப்படி மெய்சிலர்க்காமல் இருக்க முடியும்?

                           சண்முகவேலுக்கு நல்ல மதிப்பெண்களால் இந்த உள்ளூர் அடையாளம் மட்டும் தான் கிடைத்ததா?  அவன் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவன் எவரும் எதிர்பாராத ஒரு சிற்றூர் அரசுப் பள்ளி மாணவன் தானே, அந்தச் சாதனையும் குடத்திலிட்ட விளக்காகத் தான் இருந்திருக்கிறது.  அவனது மதிப்பெண் பட்டியலை முதலில் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் காட்டியிருக்கிறார்கள்.  அவர் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்திருக்கிறார்.  மாவட்ட ஆட்சியரும் சண்முகவேலை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.  சண்முகவேல் தான் ஆட்சியரைப் பார்த்தப் பெருமையை விட அத்தகைய வாய்ப்பை தன் பெற்றோருக்கும் ஏற்படுத்திக் கொடுத்ததைத் தான் மிகப் பெரிய பலனாக் கருதுகிறான். நல்ல மார்க் வாங்குனதால தான் என் பெற்றோருக்கு கலைக்ட்டர் சாரை பாக்கற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன் எனப் பெருமையோடு சொன்னான்.

                         அந்தப் பெருமையைச் சொல்ல வாய்த்த இடமும் பெருமைக்குரிய பள்ளியல்லவா? காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி!
 ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்திய அரசுப் பள்ளி  தில்லியில் பேசப்பட்ட பள்ளி எனப் பல பெருமைகளை உடைய பள்ளி.

                  உதவி       வரைத்தன் றுதவி உதவி
                செயப்பட்டார் சால்பின் வரைத்து (திருக்குறள் 105)


என்ற குறளின் உட்பொருளாய், சண்முகவேலும் இராமநாதன் செட்டியார் பள்ளியின் அங்கீகாரத்திற்குத் தகுதியானவன் எனத் தனனை நிலைநாட்டிக் கொண்டான்.
அவன் பேசப் பேச அந்தப் பள்ளி மாணவர்களின் முன்மாதரி மாணவனாகப் (ROLE MODEL STUDENT) பரிணமித்தான். இனிவரும் காலங்களில் எல்லா மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வான்.

                            சண்முகவேல் உரையாற்றுவதற்கு முன்னர் பேசிய ஒரு சமூக ஆர்வலர், பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பெற்றோர்களும் கூட கட்டுபாடாக அலைபேசியை உரையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.  அந்தக் கருத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை அப்போது எழுந்த கரவோலி உறுதிப்படுத்தியது.

                       அலைபேசிகளும் அதனூடாக நாம் பார்க்கும் சமூக வலைத் தளங்களும் சில பல எதிர்விளைகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் முதலில் காலவிரயத்தை ஏற்படுத்திவிடுகின்றன.  இதில் யாருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியும்?  ஆனால் அலைபேசி என்ற அறிவியல் அதிசியத்தையே தீமைக் கருவி எனலாமா? அது கருவி தான் அதனை நன்மையாக்குவதும் தீமையாக்குமவதும் அதனைப் பயன்படுத்துபவன் தான் எனும் மிக நுட்பமான கருத்தை சண்முகவேல் மிக எளிதாக நிலைநாட்டிய போது நான் மலைத்துபோனேன்.  

                  இந்த வாதத்திலும்  அவன் தன்னே சான்றாக்கினான்.  போனைப் பயன்படுத்தக் கூடாதுன்னாங்க பயன்படுத்தலாம் நான் போன்ல தான் பாடசாலை டாட் நெட் பார்ப்பேன் என்றவாறு பாடசாலை வலைத் தளத்தைப் பற்றி எடுத்துரைத்தான்.  

                    இராமநாதன் செட்டியார் பள்ளியில் மாணவர்களுக்கு பல நவீன வசதிகள் உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள், அதைவிட சிறப்பானது  மின் நூலகத்தை முதன்முதலில் பெற்ற பள்ளியும் இராமநாதன் செட்டியார் பள்ளி தான்.  அந்த முன்னோடிப் பள்ளியில் பாடசாலை வலைத்தளத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை சண்முகவேல் நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.  ஆனால் சண்முகவேல் பாடசாலை வலைத்தளத்தை அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற்றவனாக அந்தப் பள்ளியில் நின்று கொண்டிருந்தான் என்றால் அவரது உயரம் வெறும் 149 சென்டி மீட்டர் தானா?  உலகம் அவனை அண்ணாந்து பார்க்கும் நாள் தொலைவில் இல்லை
                     
                   தன்னைச் சான்றாக்கி பேசுவது  தான் சண்முகவேலின் பாணி.  கடந்த வந்த வெற்றிப் பாதையைத் தான் தன்னைச் சான்றாக்கிச் சொல்லமுடியும்.  எதிர்காலப் பலனை எப்படிச் சொல்வது? ஒரு இலக்கை குறிக்கோளைச் சுட்டிதான் எதிர்காலப் பலனைச் சொல்ல முடியும்.  அதையும் சண்முகவேல் விட்டுவைக்கவில்லை.  உங்கள் பெற்றோரின் வறுமையை மாற்ற வேண்டுமென்றால் நீங்க படிக்கணும் என உறுதியாக உரைத்தான்  

              சண்முகவேல் உரையாற்றிய பிறகு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என முத்தரப்பினரும் கேள்வி கேட்ட சண்முக வேல் பதிலுரைக்கும் பகுதிக்கு வருகிறோம். ஆசிரியர்கள் கேள்விக்கு முன்னர் ஒரு சின்னப் பாரட்டடோடு தம் சார்பில் கேள்வி கேட்காமல் தன் பிள்ளையின் கண்ணோட்டத்தில் தான் கேள்வி கேட்டார்கள்.  மாணவர்களின் கேள்விகளில் ஆர்வமும் தன்னிலைப்பாடுகளும் வெளிப்பட்டது.  ஒரு தாய் தன் மகனுக்கு வாசிக்கத் தெரிகிறது ஆனால் வேகமாக வாசிக்கத் தெரியவில்லை அதனால் தேர்வுகளில் கேள்வித் தாளைப் படித்துப் புரிந்து கொள்ளவதற்கே அதிக நேரமாகிறது இதற்கு என்ன வழி எனக் கேட்டார்.  அவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் படிக்கத் தன் பிள்ளை சிரமப்படுவதாகவும் வேறு கூறினார்.

               தனக்கு முன்னர் பேசிய சமூக ஆர்வலரின் அலைபேசி குறித்த கருத்தில் உடன்படாத சண்முகவேல் அப்போது தனது மாற்றுக் கருத்தை மென்மையாகத் தான் சொன்னான்.  ஆனால் இப்போது ஒரு தாய் தன் மகனுக்கு தமிழும் வாசிக்கச் சிரமமாகயிருக்கிறது ஆங்கிலமும் வாசிக்கச் சிரமமாக இருக்கிறது என்றபோது 
        
                  " தமிழ் வாசிக்கத் தெரியான்னு சொல்றது  தப்பு அம்மா " என  தீர்ப்புரைக்கும் ஒரு நீதிபதி போல ஆணித்தரமாக உரைத்தான்.

                ஆங்கில வாசிப்பில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடைப்  பொறுத்தவரை அவன் பயிற்சியையும் விடாமுயற்சியும் பயிற்சியும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தான் தீர்வு என்றான்.  அதற்கும் சான்றுரைத்தான்.  இதற்கு  அவன் சான்றாக முடியாதே?  தன் பள்ளித் தோழனைச் சான்றுரைத்தான்.  ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி வாசிக்கவே சிரமப்பட்டு ஒன்பதாம் வகுப்பில் முதல் முறை தோல்வியடைந்து மறு ஆண்டில் ஒன்பதாம் வகுப்புத் தேறி பத்தாம் வகுப்பு வந்த மாணவனே பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதைச் சான்றாக்கினான்.

                  சண்முகவேலின் வாழ்க்கை முறையும் திகைக்க வைக்கிறது.  காலை நான்கு மணிக்கே எழுகிறான்.  நள்ளிரவு வரை படிக்கிறான். தினமும் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்து போகிறான்.  பள்ளி தொடங்குவதற்கு முன்னரே வந்து விடுகிறான். முயற்சி மிக்கான். பயிற்சிச் சளைக்காதவன், மீண்டும் மீண்டும் படிக்கிறான், கணக்கைப் போட்டுப் போட்டுப் பார்க்கிறான்.  ஆசிரியர்களிடம் ஐயங்களைக் கேட்ட வண்ணமிருக்கிறான். அவன் பேறுகளிலெல்லாம் பேறு இவனது சளைக்காத கேள்விகளுக்குச் சலிக்காமல் பதிலுரைக்கும் ஆசிரியர்கள் தாம்.  பாடங்களோடு ஒன்றிய இந்த வாழ்க்கையில் ஆங்கில ஆசிரியர் அறிமுகப்படுத்திய நல்ல புத்தகங்களையும் வாசிக்கிறான்.  இதுவரை அக்னி சிறகுகளையும் இறையன்புவின் ஏழாம் அறிவையும் வாசித்திருக்கிறான். வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

                 ஒரு பக்கம்  அவன் பாடசாலை வலைத்தளத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளான் மற்றொரு ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறான், அத்தோடு வால்காவிலிருந்து கங்கை வரை நூலையும் வாசிக்கிறான். இவற்றிலிருந்தே அவனுடைய தேடலையும் வேட்கையையும் புரிந்து கொள்ளலாம்.

                   நானும் சண்முகவேலை பாரட்டுவதற்காகத் தான் அந்தக் கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன்.  அவனை அவனுடைய மதிப்பெண்களுக்காகத் தான் பாராட்ட நினைத்தேன், ஏனென்றால் நான் அவனிடம் அந்த 490 மதிப்பெண்களுக்கு மேல் வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளை அவன் கையாண்ட முறை என்னைத் திகைக்க வைத்தது.  பிசிறில்லாத சிந்தனைத் தெளிவு அவனுடைய உரை முழுவதும் விரவிக் கிடந்தது. இந்த சிந்தனைத் தெளிவு (CLARITY OF THOUGHT)   அவனுடைய I.A.S  கனவிற்கு நிச்சியமாகப் பெருந்துணையாகும்.  அல்லது இந்த சிந்தனைத் தெளிவு தான் I.A.S கனவிற்கே வித்திட்டதா?

      எது எப்படியாகினும் பொதுத் தேர்வில் அவன் பெற்ற 490 மதிப்பெண்கள்,  சண்முகவேலின் ஆளுமை எனும் மாபெரும் மாளிகைக்கான சின்னத் திறவு கோல் தான் என்பதை அவன் பேசிய பிறகு புரிந்து கொண்டேன்.  

             இதே கருத்தை காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா வேறு சொற்களில் கூறினார். எங்கள் பள்ளி பல ஆளுமைகள், சான்றோர்கள், சாதனையாளர்கள் உயர் பதவி வகிப்பவர்கள் பேசியிருக்கிறார்கள், அந்த நிகழ்வுகளை எல்லாம் விட இந்த கருத்தரங்கமே சிறந்த நிகழ்வு என்றார்.

           காமராசரின் மக்கள் கல்விக் கொள்கையின் வெற்றிக்கு சண்முகவேல் மிகப் பெரிய சான்றாவான். சண்முகவேலை உருவாக்கிய எஸ். எஸ் கோட்டை அரசு மேனிலைப் பள்ளி காமராசர் மனம் குளிரும் கல்வித் தலமாகும்.

            அதைவிட  இந்த கார்ப்பரேட் கல்விக் காலத்தில் காமராசரின் கல்விக் கொள்கை அரித்துக் கொண்டு போய்விடாமல் இருக்க இன்னும் பல சண்முகவேல்கள் வேண்டும்.  ஆசிரியர்கள் மனம் வைப்பார்களாக!

நலந்தா செம்புலிங்கம்
18.06.2019


Monday, 15 April 2019

காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்!


காதல் வனம்: முட்சாலையில் பனிச்சறுக்குப் பயணம்
********************
காதல் வனம்
ஆசிரியர் : தேனம்மை லெட்சுமணன்
பதிப்பாளர்:  படி வெளியீடு (டிஸ்வகரி புக் பேலஸ்)
சென்னை - 78        
அலைபேசி: 87545 07070 , 99404 46650
விலை ரூ.100/-
         எழுத்தாளரும் வலைப்
பதிவருமான திருமதி தேனம்மை லெட்சுமணன், சமூக வலைத்தளங்களில் தனக்கென  ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். இப்போது பல மேடைகளுக்கும் அழைக்கப்படுகிறார், மேடைகளில் மட்டுமல்ல நேரிலும் படபடவென வேகமாகப் பேசுவார்.  அந்த வேகத்தை அவரது பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் காணலாம் வேகத்திற்குக் காரணம் வேறொன்றுமில்லை, சுமையை அறிவுச்சுமையை இறக்கி வைக்கிற அவசரம் தான்.
              அவருடைய அண்மைப் படைப்பு காதல் வனம் எனும் நாவல்.  அந்த நாவல் அச்சசுப் புத்தகமாகவும் மின் புத்தமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த இரண்டு வடிவங்களிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அந்த நாவல் வெளிவந்திருப்பதே படைப்பையும், படைப்பாளியையும், பதிப்பாளரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. அது எளிதில் கை கூடக்கூடிதில்லை, அதற்குப் பின்னர் அயராத தேடலும் உழைப்பும் இருக்கிறது.
            மிகவும் நெருடலான கதைக் கரு.  அந்த நெருடல் கருவும் தானாக வளர்கிறது ஒன்றிற்கு மேல் ஒன்றாகக்  குவிகிறது.  இந்தக் கருக்களுக்கு அப்பாற்பட்டு ஒரு சிக்கல் வேறு முளைக்கிறது.  அதற்கு விஞ்ஞானம் மூலம் ஒரு தீர்வு தெரிகிறது, ஆனால் நடைமுறைப்படுத்த கயிற்றின் மேல் நடக்க வேண்டியுள்ளது.  முட்கள் நிறைந்த இந்தக் கதைச் சாலையில் பனிச்சறுக்கு போல கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் நாவலாசிரியர் தேனம்மை லெட்சுமணன்.  இது எப்படி சாத்தியமாகிறது?
     இந்தப் பனிச்சறுக்குப் பயணத்தைச் சாத்தியமாக்குவது தத்ரூபமான களக்காட்சிகள் தான்.  அதற்கு உயிரூட்டுபவை துல்லிமான
களத்தகவல்கள் தான்.
              தேனம்மை லெட்சுமணன் ஆயிரம் சாளரங்களை திறந்து வைத்து ஆழ்வார் இலக்கியத்தியிலிருந்து, பாட்டி வைத்தியம்,  கரு முட்டை தானம், கருப்பப்பை தானம்,  டாங்கோ நடனம் வரை அகிலத்திலின் சந்து பொந்துகளில் புதைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் சேகரித்த வண்ணம் இருக்கிறார் --   ஐந்து வகையான வலைப்பக்கங்களில் அவர் எழுதியுள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான வலைப் பதிவுகளே அதற்கு சான்று.
   
       
           களத்தகவல்களால் அச்சு அசலாக நிதர்சன உலகத்தையே காட்டக் கூடியவர்கள் Arther Hailey யும்  பாலகுமாரனும்.  அவர்கள் கூட ஒரு நாவலில் ஒரு களத்தைத் தான் காட்டுவார்கள்.  தேனம்மை லெட்சுமணனின்  காதல்வனம் பல தளங்களைக் காட்டுகிறது.  கதையின் புதிர்முடிச்சு அவிழ்க்கப்படுகிறதா மேலும் முறுக்கேறுகிறதா? என்ற மயக்கத்தை கடைசிப் பக்கம் வரை சலனமின்றி தக்க வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறர்.
         நாவல் நெடுகிலும் ஆங்கில சொற்கள், சொற்றோடர்கள். நாவலாசிரியர் சற்று கவனம் செலுத்தியிருந்தால் 50% கலப்புச் சொற்களையாவது தவிர்த்திருக்கலாம்.
             
நலந்தா செம்புலிங்கம்
15.04.2019

பின் குறிப்பு: இது காலத்தால் தான் பின்குறிப்பு, ஆனால் உள்ளபடியே இது ஒரு முன்னேற்றக் குறிப்பு தான்.

        இந்த நூல் மதிப்புரை எழுதியதற்கு ஒராண்டிற்குப் பிறகு இந்த நாவல் ஒலி வடிவமும் பெற்றுள்ளது (ஆடியோ புக்). ஒலிப் புத்தகத்தின் இணைப்பு https://pocketfm.app.link/jioARE8WL5





Friday, 5 April 2019

கொடைவிளக்கின் பேரொளிகள்!!

கொடைவிளக்கின் பேரொளிகள்!!



கொடை விளக்கு, இருபதாம் நூற்றாண்டில் எழுந்த சங்க நூல்.  சங்க காலத்தில் கபிலர் பாரியைப் பாடினார்.  இருபதாம் நூற்றாண்டில் வ.சுப. மாணிக்கனார்


வள்ளல் அழகப்பரைப் பாடினார்.  171 வெண்பாக்களால் ஆனது கொடைவிளக்கு.  ஒவ்வொன்றும் தித்திக்கும் தேன் தான். 

           ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒரு நூலினை அறிமுகப்படுத்த, நூலைப் பரப்ப முழு நூலையும்   வாசிக்க முடியாது, ஒரு சிறு பகுதியைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும்.  அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்த பாட்டுடைத் தலைவனின் உள்ளத்தை மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கும் பத்து வெண்பாக்களை கொடை விளக்கில் பேராெளிகள் என தொகுத்துள்ளேன்

             
1.கம்பனொளி (ஒரு வெண்பா)
2. கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள்  (இரண்டு வெண்பாக்கள்)
3. கொடையொளிகள் (இரண்டு வெண்பாக்கள்)
4. புரட்சியொளி (ஒரு வெண்பா)
5. கடைமயுரைத்தல் (ஒரு வெண்பா)
6. வள்ளல் வாழ்த்து (இரண்டு வெண்பாக்கள்)
என ஒன்பது வெண்பாக்களை ஆறு தலைப்புகளில் தொகுத்துள்ளேன்.  பத்தாவது வெண்பா, வ.சுப. மாணிக்கனார் சூடிய தமிழ்த் தவம் என்ற தலைப்பையே சூடியுள்ளேன்.  தமிழ்த் தவம் தான் கொடைவிளக்கின் மணிமுடி எனக் கருதுகிறேன்.



கம்பனொளி
1. வெண்பா எண் 84
நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்றிக்குள்
கம்பனும் காணக் கலைநகராய்த் - தம்பொருளால்
எல்லோரும் கல்வியெழிலைப் பெறவைத்தான்
பல்லாரும் வாழப் பகுத்து

கண்ணைக் குளமாக்கும் சுடரொளிகள்

2. வெண்பா எண் 113
சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன்
ஓய்ந்த உடலன் உளம்வலியன்: - வாய்ந்தவோர்
ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான்
சேயர் பலருடையான் சீர்

3. வெண்பா எண் 121
அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச் 
சிரிக்குக் குலுங்கும் திறத்தன்: - திரித்தும்
இறைபழியா அன்பன்: இருந்தும் கொடாஅர்க்
குறைபழியாச் சான்றோன் குணம்

கொடையொளிகள்
4. வெண்பா எண் 54
பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் 
நேருவைக் கண்டு நிதியளித்தாள் - யாரும்
மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ
துடித்துக் கொடுத்தான் தொகை


5. வெண்பா எண் 55

எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த
அண்ணா மலையான் அமைத்தபெருந்த – திண்ணார்
கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான்
நிலைப்பல்  நிதியளித்தான் நேர்

புரட்சியொளி
6. வெண்பா எண் 146

மறப்பின்றிக் கல்வி வளர்த்தானை ஈண்டுப்
பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி
நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத்
தாம்பிறக்க வேண்டல் தகும்

கடமையுரைத்தல்

கொடைவிளக்கு நூலில் பாயிரத்தைத் தொடர்ந்து 10 அலகுகள் உள்ளன.  இறுதி (10 ஆம்) அலகின் தலைப்பு: உலகக் கடன். இதில் மாணவர் நன்றி, மாணவர் ஒழுக்கம், மாணவர் குறிக்கோள், ஆசான்கள், வணிகர், இந்திய மக்கள், புள்ளினங்கள், இளம்பெண்கள் என ஓரோருர் வகையினர் எப்படி அழகப்பருக்கு நன்றி பாராட்ட வேண்டுமென வ.சுப.மா வகுத்துள்ளார்.  அதில் இளம்பெண்கள் என்ற தலைப்பில் வரும் வெண்பா:


7. வெண்பா எண் 156

ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக்
கூரார் குவிமுலையீர் கூப்புமினோ – சீரார்
அழகனைக் போலவொரு அள்ளிக் கொடுக்கும்
குழகனைப் பெற்றுக் கொள



வள்ளல் வாழ்த்து

8. வெண்பா எண் 73
இலக்கியம் கற்றான்: இயல் சட்டம் கற்றான்:
கலக்கியல் வாணிகமும் கற்றான்: - இலக்கம்
அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ
கொடுக்கப் பயின்றான் கொடை


9. வெண்பா எண் 95

படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான்
கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான்
எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன்
படுத்தான் விடுத்தோம் பணிந்து.

தமிழ்த் தவம்

(இத்தலைப்பு வ.சுப.மா வின் தலைப்பு)
10. வெண்பா எண் 31
வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து
கொள்ளப் பிறந்த கொடையழகன் - உள்ள 
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்
மடமை தொலைக்கும் மகன்

நலந்தா செம்புலிங்கம்
05.04.2019

குறிப்பு: இந்த ஆக்கத்தினை அரசி. பழநியப்பன் ஒலி வடிவில் வழங்கவுள்ளார்கள்


Thursday, 4 April 2019

அழகப்பர் பதிவுப் படம் (STICKER)



அழகப்பர் பதிவுப் படம் (STICKER) 

       
          2015 ஆம் ஆண்டு கொடையின் கதை நூலின்  மூன்றாம் பதிப்பை வெளியிட்டோம். அந்த மூன்றாம் பதிப்பில் அழகப்பரைப் பற்றி அதுவரை வெளிவந்திருந்த  11 நூல்களின் பட்டியலை வெளியிட்டோம். அந்த 11 நூலைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் முகிழ்ந்தது. நூல் வெளியீட்டு விழாவில் 11 நூல்களையும் அறிமுகம் செய்வதற்காக எல்லா நூல்களையும் ஒரு சேர எழுத்து எண்ணிப் படித்தேன்.

        பேராரிசிரியர் ச. குழந்தைநாதன் எழுதிய கோடி கொடுத்த கொடைஞனும் அவற்றுள் ஒன்று.  ஆனால், நான், அந்த நூல்  எத்தனையாவது முறையாகப் படிக்கிறேன் என்று கணக்கெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.

         அந்த நூலில் இரண்டு பகுதிகள் என்னை பெரிதும் கவர்ந்த பகுதிகள் 

         அந்த நூலில் அழகப்பரின் பங்குச் சாதனைகள் ஓவியமாகவே தீட்டப்பட்டிருக்கும்.  ஒரு கட்டத்தில்  அவர் பால் பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி  திட்டமிட்டுப் பங்குச் சந்தையில் அவருக்குப் பேரிழப்பை ஏற்படுகிறார்கள். அது எனக்கே ஏற்பட்ட இழப்பை போல துடித்தேன், அது ஒரு புனைகதை போல என்னை சுண்டி இழுத்தது.
 அது தான் எழுத்தாளனின் வெற்றி.  

          172 ஆம் பக்கத்தில் அழகப்பர் கடைசி நாளில் கடைசி சில மணி நேரங்களில் தன் நினைவை இழந்தபோதும் கல்லூரி வளாகத்தினுள் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசியதையும் எழுதியிருப்பார், கண்ணீர் சிந்தாமல் அந்த 172 ஆம் பக்கத்தைக் கடக்கவே முடியாது.

           . ஒரு நூலை, அதன் ஆசிரியர்/நாயகன்/கருத்து பால் ஏற்பட்ட தாகத்தினால் வாசிப்பதற்கும்  நூலறிமுகத்திற்காகவோ மதிப்பீட்டிற்காகவோ வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  

            இம்முறை கோடி கொடுத்த கொடைஞனை நூலறிமுகத்திற்காக எழுத்தெண்ணி வாசித்த போது தான் 180 ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு சொற்றொடர் நெஞ்சில் தைத்தது.  அந்த சொற்றொடர் யார் எழுதிய சொற்றோடர்? எனப் பலரிடம் புதிர் போட்டேன்.  ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வ.சுப. மாணிக்கனார் என அடித்துச் சொன்னார்கள். ஒரேயொருவர் சொன்ன மாற்று விடையோ கண்ணதாசன் என்பதாகும்.

               வ.சுப. மாணிக்கனாரே எழுதியதைப் போன்ற மயக்கத்தைத் தந்த  அந்த சொற்றொடர் என்ன உறங்கவிடவில்லை.

                வள்ளல் அழகப்பரை இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் அச்சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருவாக்கி அழகப்பர் படத்தோடு அச்சொற்றொடரையும் பிரசுரம் செய்தோம். அந்தக் காவியச் சொற்றொடர்:

தொண்டால் பொழுதளந்த தூயர்!

அந்தப் பதிவுப் படம் (STICKER) தான் கொடைவிளக்கு புலனக் குழுவின் இலச்சினைப் படமாகத் திகழ்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
04.04.2019

குறிப்பு
 1. பதிவுப் படத்திற்கு விலை இல்லை. 
 
 2. விரும்புகிறவர்களுக்கு (ஒருவருக்கு 2 படங்கள்) பதிவுப் படம் அன்பளிப்பாக வழங்கப்படும். 
 
 3.  இந்தப் பதிவுப்படம் கிடைக்குமிடம் நலந்தா புத்தகக்    கடை  365/4 செக்காலை சாலை அண்ணா நாளங்காடி எதிரில் காரைக்குடி  அலைபேசி 9361410349 

Attachments area

Wednesday, 3 April 2019

பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!



பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!!

      அழகப்பர் நம் மண்ணின் மைந்தர் என்ற புவி சாரந்த வரையரைகளுக்கு அப்பாற்பட்ட காலத்தின் மைந்தர். அவர் 1909 ஆம் ஆண்டில் பிறந்தார், 1957 ஆம் ஆண்டில் புகழுடம்பு எய்தினார்.  அவர் இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கல்வி என்ற சொல் உள்ளவரை வாழ்வார்.
    
      பிறக்கும் போதே செல்வச் சீமானாகப் பிறந்தோரை ஆங்கிலத்தில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தோர் என்பர்.  ஆனால் வள்ளல் அழகப்பரை தங்கக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும், அத்தகைய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.  அந்தத் தங்கக் கரண்டியையும் பிளாட்டினம் கரண்டியாகப் பெருக்கினார்.

          ஒரே நாளில் எட்டு கார்களை வாங்கினார்,  ஒரு நாளில் எட்டு விமானங்களை வாங்கினார். ஐரோப்பியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர ரிட்ஸ் விடுதியை நினைத்த பொழுதிலேயே வாங்கினார்.

          1947 ஆம் ஆண்டில் மருத்துவரும் கல்வியாளரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நெடுநாள் துணை வேந்தருமான டாக்டர் ஏ. எல். முதலியார் செல்வந்தர்கள் தான் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவி சுதந்திர இந்தியாவன் கல்விப் பணிக்கு தோள் கொடுக்க வேண்டும் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். வள்ளல் அழகப்பர் அந்தக் கூட்டத்திலேயே நான் எங்கள் மாவட்டத்தில் கல்லூரி தொடங்குவேன் என உறுதியளித்தார். உறுதியளித்த 45 நாட்களுக்குள் காரைக்குடியில் கலைக் கல்லூரியைத் தொடங்கினார்.  அந்தப் பொன்னான 1947 ஆம் ஆண்டிலிருந்து அவர் புகழுடம்பு எய்திய  1957 ஆண்டு வரை காரைக்குடியில் சங்கிலித் தொடராக கல்லூரிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் தொடங்கிய வண்ணம் இருந்தார்.  பல மாநில அரசுகள் போட்டி போட்ட மைய அரசின் மின் வேதியல் ஆய்வகத்தை (சிக்ரி) தமிழகத்திற்கு காரைக்குடிக்கு வென்று தந்தார்.  அழகப்பரின் வாழ்க்கையை மூன்று நிலைகளாக தொகுத்து அழகப்பரின் வரலாற்றை Dr. RM. Alagappa Chettiar: Life and Legacies of a Visionary எனும் நூலாக எழுதிய டாக்டர் கே. வயிரவன்
, இந்த 1947 -- 1957 காலவெளியை அழகப்பரின் கொடைக் காலம் என்பார். எனினும் அதற்கும் முன்னரே  கேரளப் பல்கலைக் கழகங்கள், தில்லி கல்வி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியில் துறையை நிறுவியது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி நிறுவியது என கல்விக்குக் கொடையளித்த வண்ணமிருந்தார் அந்தப் பிறவிக் கொடைஞர்.



                   அந்த 1947 -- 1957 காலகட்டத்தில்  வள்ளல் அழகப்பரின் சிந்தனை காரைக்குடியை மையம் கொண்டது. சிக்ரியை காரைக்குடிக்கு கொண்டு வருவதற்காக அவர் அளித்த கொடைகளை போலவே அதற்காக அவர் போராடியதும் மாணப் பெரிது.  குடியிருந்த வீட்டையும் கொடுத்தார்.  பிறவிக் கொடைஞரும் சிறந்த கல்வியாளருமான வள்ளல் அழகப்பர் மக்கள் நெஞ்சங்களில்  ஒரு தலைவனாகவும் திகழ்ந்தார். புலவர்களுக்கும் பாட்டுடைத் தலைவரானார்.

             வள்ளல் அழகப்பரை அன்றும் இன்றும் பாடாதவர்கள் இல்லை.  ஆனால் பாட்டுடைத் தலைவன் என்று பேசத் தலைப்பட்டால், வள்ளல் அழகப்பரை மிகச் சிறப்பாக கொண்டாடும் ஒரு பாட்டையோ, கட்டுரையையோ, வாழ்க்கை வரலாற்றையோ நூலையோ, படைப்பையோ இனம் கண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.

அழகப்பரின் கல்வி நிறுவனங்களில், நிறுவனர் வாழ்த்தாக  பாடப்படும், வெண்பா, 

           கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
           வீடும் கொடுத்த விழுத் தெய்வம் - தேடியும்
            அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
            வெள்ளி விளக்கே விளக்கு

வ,சுப, மாணிக்கனாரின் கொடைவிளக்கு நூல் இடம் பெற்ற புகழ் பெற்ற வெண்பாவாகும்.



Dr. V.Sp. M  (addressing the gathering) with Vallal Alagappar

           கொடைவிளக்கு, அழகப்பர் புகழ் பாடும் வ.சுப, மாணிக்கனாரின் முத்திரைக் காப்பியம்.  வ.சுப,மா வும் சங்கப் புலவரைப் போன்றவர் கொடை விளக்கும் சங்கத் தமிழ் நூலைப் போன்றது.  இதற்கு மேலும் பாட்டுடைத் தலைவன் ஆய்வு தேவையா?  

         ஒரு தடகளப் போட்டியில் தனித்தனியாக பல பந்தயங்களும் விளையாட்டுகளும் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவர் வெற்றி பெறுவார்.  அதிக நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர் தடகளப் போட்டியின் பெரும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

          ஒரு தடகளப் போட்டியில் பெரும் வெற்றியாளர் என ஒருவருக்கு மணிமுடி சூட்டப்பட்டாலும் தனித் தனி நிகழ்வுகளில் சில வெற்றியாளர்கள்  இருக்கக் கூடும்.  அத்தகைய தனி நிகழ்வு வெற்றியாளர்களின் சாதனைகள் நம் நெஞ்சைத் தொடும்.

         அழகப்பர் புகழ்பாடும் சீரிய பணியில் மணிமுடி நூல் கொடைவிளக்கு தான் மணிமுடி புலவர் வ.சுப. மாணிக்கனார் தான், அதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.  எனினும் தனித்தனியாக ஒரு எழுத்தாளரும் மற்றொரு கவிஞரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

           "தொண்டால் பொழுது அளந்த தூயர்" 

           என்றொரு அஞ்சலி. ஆனால் வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கில் இடம் பெறவில்லை என்பது மட்டும் உறதியாகத் தெரியும்.

        இவ்வளவு சிறப்பாக வள்ளல் அழகப்பருக்கு யாரால் அஞ்சலி செலுத்த முடியும்?  வ.சுப. மாணிக்கனாரே வேறு நூலில் எழுதியிருப்பாரோ?

          "தொண்டால் பொழுது அளந்த தூயர்"   எனும். இச்சீரிய சொற்றொடரை யார் எழுதினார் எனப் பலரிடம் புதிர் போட்டேன். 

         ஒருவரைத் தவிர அத்தனை பேரும் வ.சுப,மா என்றார்கள்.  ஒரேயொருவர் அளித்த வேறொரு பதில் கவிஞர் கண்ணதாசன்.  

          உள்ளபடியே இந்த கவித்துவமிக்க சொற்றொடரை எழுதியவர் கவிஞர் அல்லர். மிகச் சிறந்த பேரரசிரியரும் எழுத்தாளருமான ச. குழந்தைநாதன் தான்.   இந்த சொற்றொடர்  அவர் எழுதிய கோடி கொடுத்த கொடைஞன் நூலில் 180 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

            இது பேராசிரியர் குழந்தைநாதனின் சொற்றொடர் தான், ஆனால் அனைவரையும்  வ.சுப, மா. வின் வரி என மயக்கம் கொள்ள வைத்திருக்கிறதே! 

        வள்ளல் அழகப்பரை புலவர்களெல்லாம் கொடை, கல்வி எனும் இரண்டு தூரிகைகளால் வரைந்த போது தொண்டு எனும் அழகப்பரின் மற்றொரு சால்பைத் தூரிகையாக்கிய பேராசிரியரின் கவித்துவமான அஞ்சலியை சிறந்த அஞ்சலி என்றால், எவரையும் விட வ.சுப. மாணிக்கனாரின் நெஞ்சம் தான் அதிகமாக மகிழும்.

          வள்ளல் அழகப்பர் புகழுடம்பு எய்திய போது  மாணவர்கள், ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் செலுத்திய அஞ்சலிகள் ஒன்றை ஒன்று விஞ்சும், நெஞ்சை உருக்கும்.

            அந்த 1957 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல ஆண்டுகள் கடந்து, மாணவர்க்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.  அந்த நூல், தம் கல்விக் கூடங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தன் பிள்ளைகளாக வரித்துக் கொண்ட வள்ளல் அழகப்பருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.

          அந்த வள்ளலுக்கு பாடப்பட்ட அஞ்சலிகளெல்லாம் அவரின்  கொடை மனம் கொடைத் திறன் ஆற்றல் ஆளுமை சமூக அக்கறை இவற்றையெல்லாம் சுட்டி அந்த வள்ளலை இழந்து விட்டோமே என உலகம் அவரது இழப்பால் எப்படி வாடுகிறது என்ற கோணத்தில் அமைந்திருந்தன.

          ஆனால் அந்த மாணவர் கையேட்டு ஆசிரியரின் காணிக்கையுரையோ அழகப்பரின் இழப்பு உலக மாந்தருக்கு மட்டுமல்ல கல்வித் தெய்வத்திற்கே இழப்பு எனச் சுட்டி சிலிர்க்க வைக்கிறது.

         வள்ளல் அழகப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டாடும் கவிதைகள், படைப்புகள் ஆயிரம் ஆயிரம், ஆயினும் இந்தக் கவிதையில் தான் வள்ளல் அழகப்பருக்கான சிம்மாசனம் மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். 
Kavingar Maa. Kannappan

            பாரி கரம்பற்றிப் 
                 பறம்பு மலைகூறும்
            காரிகரம் பற்றிக்
                 கவிகூறும்! -  தேரின்
            அழகன் கரம்பற்றி 
                  யார் கூறும் - கூறும்
             கலைமகளின் மஞ்சள் கயிறு!

  
அந்த மாணவர் கையேட்டின் ஆசிரியர் ஒரு கல்லூரி பேராசிரியர், மாபெரும் கவிஞர், கண்ணதாசனை தன் கவிதைகளாலும் கவர்நத கவிஞர் அவர் தான் கவிஞர் மா. கண்ணப்பன்.

நலந்தா செம்புலிங்கம்
02.04.2019

"வள்ளல்" --- தவம் செய்த சொல்!

            தவம் செய்த சொல்!!

 நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.  
      
       ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார்  தான்.

        தவமிருப்பது   எந்தச் சொல் தெரிமா?



Dr. V.SP.M (addressing the gathering)  with Vallai Alagappar

                 வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம்.   அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.   

     ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை.  நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.  

       அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா   எடுக்கும்  வ.சுப.மா.  நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
      
       தமிழ் நெஞ்சினீரே வருக வருக

                       இனி,  வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா  (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)

                           வள்ளற்        றமிழ்சொல்      வணங்கித்                      தவஞ்செய்து
                          கொள்ளப்   பிறந்த                 கொடையழகன்           உள்ள
                          உடைமை   அனைத்தும்      ஒழித்தான்                     ஒழியார்
                          மடமை        தொலைக்கும்    மகன்

Monday, 4 March 2019

விண்ணில் கவிதை வரைவான்

விண்ணில் கவிதை வரைவான்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^







மீசை வைத்த பாரதி
பாரத மாதாவின்
இருபதாம் நூற்றாண்டு தவப்புதல்வன்
தமிழில் கவிதை புனைந்தான்
மனதில் உறுதி வேண்டும் என்றான்
ரெளத்திரம் பழக வேண்டும் என்றான்

அவனுக்கு ஒரு புதிய வாரிசு 
மீசை வைத்த அபிநந்தன்
விண்ணில் கவிதை வரைவான்
மனதில் உறுதி கொண்டான்
ரெளத்திரம் செய்து காட்டினான்
விசையுறு பந்தினைப் போல்
முன் தலைமுறை விமானத்தால்
புதிய தலைமுறையை வீழ்த்தினான்

அந்த அறுபது மணிநேரமும்
அகிலத்திற்கே தலைப்புச் செய்தியானான்
 
தன்னை மறைத்து தன்னலம் துறந்து
நாட்டைக் காக்கும் கடும்பணியாளன்

அவன் வீரத்தை போற்றுவோம்
அவன் தீரத்தைப் பாடுவோம்

நல்லோரும் அல்லோரும் துரத்துகிறார்கள்
செயல் ஒன்று நோக்கம் வேறு வேறு
அவன் தனிமை போற்றுவோம்
வலைத்தள ஆர்வலர் விலகியிருத்தலும்
ஊடக சோடனைகள் படரலாமலித்தலும்
அவன் பணி சிறக்க நம் கடனாகும்

அவன் தீரம் போற்றுவோர்
போலிகள் முகத்தை கிழிப்பதும்
துரோகிகள் சதியை முறிப்பதுமே
நன்றி மலர்களாகும்

நலந்தா செம்புலிங்கம்
04.03.2019

Thursday, 28 February 2019

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

         எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!

         
கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது, செயற்பாட்டில் சாத்தியமா?

         
எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறதல்லாஅதனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாம் என எவ்வளவு பெரிய மேதை எப்படி விளக்கினாலும் அது கோட்பாட்டின் விளக்கம் தான்.  உள்ளபடியே 5, 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் கூட ஆலோசனை நிலை வரையில் தான் அனவரும் பங்கேற்கலாம், முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடம் மட்டும் இருந்தால் தான் அமைப்பு சீராக இயங்க 
முடியும். கணவன் மனைவி இடையே கூட யாராவது ஒருவர் விட்டு கொடுத்துப் போகவேண்டும் என்றே வழிகாட்டப்படுகிறது.  ஆகவே "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!" என்பது ஒரு சிறந்த கோட்பாட்டின் அலங்கார முழக்கம் தான். 

         ஆனால் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே" என்ற அந்த அலங்கார முழக்கத்தையே அச்சுப் பிசகாமல் அமலாக்கிவருகிறது ஒரு அதிசய வகுப்பறை!!        

       
அது தான் நாட்டின் முன்மாதிரிப் பள்ளிகளுள் ஒன்றாகத் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் இந்த ஆண்டிற்கான சிறந்த வகுப்பறை விருதினைப் பெற்ற 9A வகுப்பறை.

       இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா 21.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பள்ளியின் பல்வேறு சாதனையாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   சிறந்த வகுப்பறைக்குரிய விருது விருதுகளின் விருது என்றே அறிமுகப்படுத்தப்பட்டது..  21 வகுப்புகளில் 7A & 9A  ஆகிய இரண்டு வகுப்புகள் மட்டுமே தேர்வு நிலையை (NOMINATION) எய்தியிருந்தன.  இந்த இரண்டு வகுப்பறைகளைப் பற்றியும்  ஒலி ஒளிப் பதிவுகள் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டன.

           இந்த வகுப்பறை எங்கும் பொன்மொழிகள் எழுதி வைக்கப் பட்டுள்ளது. 
ஆனால் அவை வெறும் சுவர் அலங்காரமாக இல்லை. ஒவ்வொன்றிற்கும் 
  உள்ள  பின்னணியையும், அவற்றை மாணவர்கள் அணுகும் முறையையும், ஒலி ஒளிப் பதிவில் விளக்கினார்கள்.  அந்தப் பொன்மொழி அட்டைகளுள் ஒன்று MAGIC WORDs  இந்த மாயச்  சொற்களைப் பயன்படுத்தினால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மாயமாகும் என்கிறார்கள் அந்த சொற்கள்.Excuse Me, Sorry. Please, Thank you, Welcome. என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்கிறது 9A  வகுப்பறை.
       
            இந்த வகுப்பறையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர்  Brother  Sister என்று அழைத்துக் கொள்கிறார்கள்.  இது போன்ற அணுகுமுறைகள்  நற்பண்புகளை உரிய பருவத்தில், பதின்பருவத்தில் இருக்கும் இந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே
விதைக்கிறது.

            உடல் நலம் பேணுதலில்  நீர் அருந்துதலுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. இந்த வகுப்பில் மாணவர்கள் ஒழுங்காக நீர் அருந்துகிறார்களா  என்பது  கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது.  பல மாணவர்கள் குறிப்பாக மாணவியர் பள்ளியில் இருக்கும் பொழுது ஓய்வு அறைக்குச் செல்லத் தயங்குவார்கள்.  இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணி்க்கை மிக மிக அதிகமாக இருப்பதால் ஒய்வு அறை பயன்பாட்டிற்கே வகுப்புவாரி நேர ஒதுக்கீடு உள்ளது.  இந்த நெருக்குடி காரணமாக தயக்க மனப்பான்மை உள்ள மாணவர்கள் ஒய்வு அறைக்கு செல்லவதை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  ஆனால் 9 A வகுப்பு ஆசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி அதற்கு துரும்பு அளவும் இடமளிப்பதில்லை

         தம் மாணவர்களின் மாணவியர்களின் உடல் நலத்தையும் குறிப்பாக பதின்பருவ நிலையையும் கருத்தில் கொண்டு வகுப்பு ஆசிரியயை ஜாக்குலின் கனிமொழி மாணவர்கள் இவற்றை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாணவர்களுள் ஒருவர் மூலமாகவே கண்காணிக்கிறார்.  அவரே கண்காணிப்பதை விட மாணவர் ஒருவர் மூலமாக கண்காணிக்கும் போது தயக்கங்கள் எளிதில் கரைந்துவிடும்.

          உரிய அளவு நீர் அருந்துதல், ஒய்வு அறை பயன்படுத்ததுல், இனிய சொற்களை கையாளுதல், சீருடையை முறையாக அணிதல், வீட்டுப்பாடம் செய்தல், பெற்றோர் ஒப்புகை பெறுதல், போட்டிகளில் பங்கேற்றல் .......    எனப் பல நற்பண்புகளை எல்லாம் இனம் கண்டு ஒவ்வொரு பண்பையும் எல்லா மாணவர்களும் கடைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பையும் ஒவ்வொரு பண்பிற்கு ஒரு மாணவர் என மாணவர்களிடமே ஒப்படைத்துள்ளார் வகுப்பாசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி.
           
           அந்தந்தப் பண்பைக் கண்காணிக்கும் மாணவர் அந்தந்தப் பண்பிற்கு உரிய தலைவர். அதன்படி ஐம்பது மாணவர்களும் தலைவர் ஆகிவிட்டார்கள்.  ஆகவே  9A  வகுப்பறையில் உள்ளபடியே எல்லோரும் அந்த வகுப்பறையின் மன்னராகிவிட்டார்கள்.

         மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகவே மாற்றிவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் வணிகமயக் கல்வியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையில் கற்றல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது, பண்பாடு மிகுதியாகவும் உள்ளது.

           மிகச் சிலவாக உள்ள மிக நல்ல பள்ளிகளில் தான் கற்றல் அப்பாலும் மாணவர்களை  ஏதேனும் ஒரு நல்ல தடத்தில் வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.  அப்பள்ளிகளும் மாணவர்களை  சுய முன்னேற்றப் பயிற்சிகள், கல்வி சார்ந்த போட்டிகள் விளையாட்டு சார்ந்த போட்டிகளில் வழிநடத்துகிறார்கள்.  
              காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையோ மேலும்  ஒரு படி உயர்ந்து நிற்கிறது. 9A  வகுப்பறையோ தம்  மாணவர்கள், நற்பண்பு மிக்க வாழ்க்கையை இந்தப் பருவத்திலேயே வாழ்வதற்கு வகுப்பறையையே உயர் களமாக் கொடுத்திருக்கிறது..

            என் அறிவிற்கு எட்டியவரை இந்த நடைமுறை பண்பாட்டுப் பயிற்சிக்கு முன்னுதாரணம் இல்லை. ஆகவே இந்த நன்முறையை ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை என்றே அழைக்கலாம்.

          ஒவ்வொரு ஜாக்குலின் மாணவரும் இன்னொரு பண்பாளரையாவது உருவாக்குவார்.  ஆயிரமாயிரம் ஜாக்குலின் மாணவர்கள் ஒரு முன்னுதாரணமான சமூகத்தை படைப்பார்கள்.


நலந்தா செம்புலிங்கம்


28.02.2019