Thursday 28 December 2017

மருத்துவ நெறிகளில் குடிகளைக் காக்கும் தலையரசு

சவுதி அரேபியா:
சட்டப்படி அது  முடியரசு!
மருத்துவ நெறிகளில் 
குடிகளைக் காக்கும் தலையரசு!!

ஒரு காலத்தில் இந்தியத் திருநாட்டிலும்
மருத்துவம் தொண்டாயிருந்தது! 
தொண்டு மெல்லத் தொழிலானது
தொழிலும் கொழிக்கக் கொழிக்க
துட்டும் கமிஷன் வெட்டும்
தானே பரிவட்டம் கட்டிக் கொண்டன


















இப்போது இந்தியத் திருநாட்டில்
மருத்துவம் வலைப் பின்னலாயிற்று
மருத்துவர் மருந்துக் கடை
ஸ்கேன் மையம் மருத்துவமனை
சோதனை மையம் எனயெல்லாமும்
வலிமையான வலைப் பின்னலாயிற்று
மக்களிடமும் அரசிடமும் கறந்து
பகிர்ந்து கொள்ளும் பின்னலாயிற்று

சவுதியில் சிசேரியன்
என்பதே இல்லையாம்
எல்லாமே சுகப்பிரசவமாம்**
என்பது மருத்துவ சாதனை


தேவையில்லாது கீறினால் தண்டனை
என்பதே அரச முத்திரை

                                   
                                
                        நலந்தா செம்புலிங்கம்
                         28.12.2017

**https://www.facebook.com/permalink.php?story_fbid=1958447717753977&id=100007663039148


Saturday 9 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 7)

தவமும் தவமுடையார்க்கு ஆகும்!
                                               


காரைக்குடி கண்ட இமயங்களைக் கொண்டாடுவோம்
 எனப்பெயர் சூட்டி வள்ளல் அழகப்பருக்கும் வ.சுப.மாணிக்கனாருக்கும் ஒரு விழா எடுத்தோம். இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்த விழைந்தோம், மகிழ்வோடு இசைந்தார்கள், ஈடுபட்டோடு வேலை பார்த்தார்கள்
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய நீதியரசர் மகாதேவன் அவர்களுக்கு மூன்று வகையான வரவேற்புகள் அளிக்கப்பட்டன
முதலில் பூங்கொத்து வரவேற்பு. இதே பள்ளியில் காலையில் பூங்கொத்து தயாரிக்கும் போட்டி நடந்தது, அதில் வெற்றி பெற்ற மாணவர்களோடு ஆசிரியர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

பூங்கொத்து வரவேற்பினைத் தாண்டிய பிறகு மூன்று வகை சீருடைகளோடு மாணவர்கள் மாற்றி நின்று கொண்டிருந்தார்கள். முதலில் பள்ளிச் சீருடையில் ஒரு மாணவன் நின்றான் அடுத்தடுத்து Scout மற்றும் JRC சீருடையிலும் இரண்டு மாணவர்கள் நின்றார்கள். இதைப் போல 7 அல்லது 8 மூவர் அணியினர் நின்றனர். பள்ளிச் சீருடையில் நின்ற மாணவன் வணக்கம் சொல்லி வரவேற்றான். Scout மற்றும் JRC சீருடை மாணவர்கள் அந்தந்த முறைப்படி ஆங்கிலத்தில் வரவேற்றார்கள். நீதியரசர் வணக்கம் சொன்ன மாணவனுக்கு பதிலுக்கு வணக்கம் சொன்னார். ஆங்கிலத்தில் வரவேற்ற மாணவர்களுக்கு பதிலுக்கு THANK YOU சொன்னார்.
இந்த இரண்டு வரவேற்புப் படலங்களையும் மகிழந்து நீந்திக் கடந்த பிறகு தான் உச்சகட்ட நெகிழ்வு வரவேற்புக் காத்திருந்தது.
இவ்விழா இரண்டாம் மாடியில் உள்ள அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த நீதியரசர் மகாதேவன் அவர்கள் மாடிப் படியேறிய போது இரண்டு படிக்கு ஒரு மாணவர் நின்று கொண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை கொடுத்து திருக்குறள் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் மாணவன் முதல் திருக்குறளைக் கொடுத்ததும் அது யார் எழுதிய உரை என்பதை நீதியரசர் பார்த்துவிட்டு இது பெரியண்ணன் உரையா? அவரிடம் தான் நான் படித்தேன் என ஒரு உறவு இளவலிடம் பேசுவதைப் போல சொன்னார்.
வரவேற்பில் மாணவர்களை வைத்து ஆசிரியர் அசத்தினார்கள் என்றால் விடைபெறும் போது நீதியரசர் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.



வரவேற்பு காண்டத்தில் அணி அணியாக வரிசையாவெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழியனுப்புக் காண்டத்தில் நீதியரசருக்குப் பாதை விட்டு இருமருங்கிலும் மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். நீதியரசர் இரண்டு மூன்று மாணவர்களைக் கடந்திருப்பார், நான்கவதாகவோ ஐந்தாவதாகவோ நின்ற மாணவன் THANK YOU FOR COMING TO OUR SCHOOL, SIR என்றான். நீதியரசர் புன்முறுவலோடு அந்த மாணவனோடு கை குலுக்கினார். உடனே அங்கிருந்த எல்லா மாணவர்களும் (30, 40) கையை நீட்டினார்கள். எல்லா மாணவர்களிடமும் மகிழ்வோடு கைகுலுக்கிவிட்டுத் தான் மகிழ்வுந்து ஏறினார் நீதியரசர்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும்!

                                                                                                              நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                   09.12.2017

Thursday 7 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 6)

முகம் பார்க்க விழைகிறோம் !

தூயருக்கும் சீலருக்கும்
திருக்குறள் போற்றும்
நீதியரசர் தலைமையில்
பெருமிதப் பள்ளியில்
பெருவிழா திருவிழா

அகமகிழந்து ஆர்வமுடன்
முகநூலில் ஆர்ப்பரித்தோரே
முகம் பார்க்க விழைகிறோம்
தமிழ் நெஞ்சினீரே வருக வருக



இராமநாதன் செட்டியார் நகராட்சி 
உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி  

08.12.2017  வெள்ளி   மாலை 5.30 மணி









  



































வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 5)

தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!























தொண்டால் பொழுது அளந்த தூயருக்கும் அவர் புகழைத் தமிழலால் அளந்த சீலருக்கும் கல்விக்குத் திருக்குறள் ஆரம் சூட்டிய தமிழ்நெறி போற்றும் மகாதேவர் தலைமையில் விழா எடுக்கிறோம்.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி // 08.12.2017 // வெள்ளி // மாலை 5.30 மணி
தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!






Tuesday 5 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 4)

கண்டிப்புமிக்க .சுப.மா 
கடன் வாங்கிய குழந்தை நாதன்

               .சுப.மாணிக்கனார் ஈடிணையில்லா தமிழறிஞர் என்பதோடு அவர் கொஞ்சமல்ல மிகவும் கண்டிப்பனானவர் என்பதும்  ஊரறிந்து தான். அவரிடம் ஒருவர் கடன் வாங்கினால் வட்டியோடு கடனைத் திருப்பாமல் தப்பிக்க முடியுமா?


               பேரா. சு. குழந்தைநாதன் கடனும் வாங்கினார்வாங்கிய கடனை சாதாரண வட்டியோடு அல்ல தாரளமான வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்.

                 .சுப,மா எங்கே வட்டித் தொழில் செய்தார்? என எதிர் கேள்வி கேட்பீர்கள்.

                பேரா சு.குழந்தைநாதன் கடன் வாங்கியது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணத்தையல்ல. அவர் .சுப.மா விடம் கடன் பெற்றது நற்றமிழ் சொற்களைத் தான்.
                  
                    1957 இல் .சுப.மா வள்ளல் அழகப்பர் மீது கொடை விளக்கு என்ற காப்பியத்தை இயற்றினார்அதில் 77 வது வெண்பாவாக இடம் பெற்றிருப்பது தான் புகழ் பெற்ற 

                 கோடி கொடுத்த கொடைஞன்  குடியிருந்த
                 வீடும் கொடுத்த விழுச் செல்வன்  தேடியும்
                 அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
                 வெள்ளி விளக்கே விளக்கு

                   1970 களின் பிற்பகுதியில் பேரா. சு. குழந்தை நாதன் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கை வரலாற்றை உரைநடையில்  எழுதினார்அந்த நூலின் பெயரே கோடி கொடுத்த கொடைஞன் தான்நூலும் அந்த வெண்பாவை மேற்கோள் காட்டி தான் தொடங்குகிறது.

                   இந்த கவிநயமிக்க வரி யாருடையது ? .சுப.மாணிக்கனாருடையது தானேஇதை பேரா. சு. குழந்தைநாதன் கையாண்டால் அது கடன் தானே?

                     இந்தக் கடனை பேரா. சு. குழந்தைநாதன் தமது நூலின் 180 வது பக்கத்தில் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்.

                                        ""முற்றிலும் நிறைவுடையவராகவே அவர்                                                                    வாழ்ந்திடவில்லைதம் குறைகள் பலவற்றை அவர்                                                 உணர்ந்திருந்தார் எனினும் தம்மிடையே   
                                          வியத்தகு நல்லியல்புகளை வளர்த்துக் கொண்டு                                                        முழுநிறை    மனிதராக ஆவதற்கு எப்பொழுதும்                                                          முயன்று வந்தார்ஒரு  காலத்தில் அழகாக உடுத்து                                                  நல்லுணவே கொண்டு ஆடம்பரச்  சுழலில் வாழ்ந்து                                                     பழகியவர் தமக்கென நூறு ரூபாய்களைக்                                                                     கூட தாரளமாகச் செலவழிக்க அஞ்சும் அளவுக்கு                                                       தேவைகளைக்  குறைத்துக் கொண்டார்இந்த                                                              நூறு ரூபாய்  இருந்தால் ஒரு ஏழைப் பையனுக்கு                                                        உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே எனக்   
                                          கசிந்துருகி கணக்குப் பார்க்கும் அளவுக்கு மனம்                                                           நிறைந்த மாமனிதாராய் தொண்டால் பொழுதளந்த                                                தூயராய் உயர்ந்தார்.""

      இந்த மேற்கோளின் கடைசி சொற்றொடர்  தொண்டால் பொழுதளந்த தூயராய் உயர்ந்தார்.   என்னை தூங்க விடாமல் செய்ததுஇந்த சொற்றொடரை பலரிடம் கேட்டு இது யார் எழுதிய வரியாக இருக்கும் எனக் கேட்பேன்எல்லோரும் ஏகமனதாக .சுப. மாணிக்கனாரின் வரிகளாகத் தான் இருக்கவேண்டும் என்ற ஊகித்தார்கள்.

              வள்ளல் அழகப்பர் இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் காவியச் சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருகவாக்கி அழகப்பர் படத்தோடு இந்த வரிகளை பிரசுரம் செய்துள்ளோம்.

               அப்பதிவுப்பட வெளியீட்டு விழாவிற்கு தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!
                                                                                      --  நலந்தா செம்புலிங்கம்


                                                                          05.12.2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 3)

நாளும் என் நெஞ்சில் வாழும் ச.மெய்யப்பனார் 






நலந்தா இலக்கியச் சாளரம் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டில் அவரைப் போற்றித் துதிப்பதற்கு மேலாக அவருடைய சிந்தனைகளை மறுபதிவு செய்வதற்கும் மேலாக அவருடைய கொள்கைகளின் தேவையை வலியிறுத்துவதற்கும் மேலாக ஏதனும் ஒரு பணி செய்ய விழைந்தது.


                   வ.சுப.மா அவர்களின் நெஞ்சுக்கனிய கொள்கை தனித்தமிழ் கொள்கையாகும்.  அதைப் பற்றிய விவாதத்தை மேற்கொள்ள விழைந்தோம்.    




                     ஒரு புத்தகக் கடைக்காரன் வ.சுப.மா குறித்து விவாதம் நடத்துவதா? கட்டுரைகள் திரட்டுவதா? எனப் பலர் மனதிற்குள் நினைத்தார்கள். எம் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. ஏனெனில்  கட்டுரைகள் திரட்டுவது தொகுப்பது போன்றவற்றை ஒரு முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழமாகப்  பதிவாகிவிட்டது.


                அதைவிடக் கொடுமை தனித்தமிழ் பற்றி பேசுவதே தேவையற்றது எனச் சிலர் நேரில் வாக்குவாதம் செய்தனர்.  நாங்கள் மாற்றுக் கருத்தையும் நாங்கள் பிரசுரம் செய்யத் தயராக இருக்கிறோம் என்ற பிறகும் அவர்கள் கட்டுரை எழுதித் தரவில்லை. ஆகவே, தனித்தமிழ் ஆதரிப்பார் இல்லாவிடினும் கடைபிடிப்பார் இல்லாவிடினும் தனித்தமிழ்

நிற்கும் எனத் தெளிந்து மகிழந்தேன்.  இதுவே கருத்துப் பேழை அச்சேறும் முன்னரே கிடைத்த வெற்றியாகும்.







                      எல்லாம் நன்மைக்கே  நாங்கள் எதிர்கொண்ட இந்த நிலைகளால் தான்  தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை கண்ணாடி மாளிகைக்குள் அரங்கேறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் சமூகத்திற்கு பயன் தரும் கூட்டுச் சுரைக்காயாக அமைந்துள்ளது.


                      இந்தக் கருத்துப் பேழையில் இன்று பொறியில் பயின்றுவரும்  மாணவரிலிருந்து வ.சுப.மா அவர்களின் ஆரம்ப கால மாணவர் வரை பல தரப்பினர் எழுதியுள்ளார்கள்.


                 தாள், அச்சு ஊடகம் எல்லாம் மலையேறப் போகின்றன தனித் தமிழோ கலப்புத் தமிழோ எதுவும் நிற்காது மின்தமிழ் தான் நிற்கும் என்கிறார் ஒரு பொறியாளர்.  மொழியும் சிந்தனையும் இணைபிரியாதவை எனப் புதிய தளத்திற்கு விவாதத்தை எடுத்துச் செல்கிறார் நரம்பியல் மருத்துவர் திருப்பதி.  காட்டுக்குள் செடியும் கொடியும் விலங்குகளும் மட்டுமில்லை தமிழின் சொல் வளமும் இருக்கிறது என நிகண்டை மேற்கோள் காட்டி நீளப் பட்டியலிடுகிறார் வனத் துறையில் பணியாற்றிய கவிஞர் அரவரசன்.  முதலில் தமிழைப் பேசச் சொல்லுங்கள் பிறகு தனித்தமிழைப் பற்றியெல்லாம் யோசிப்போம் ஓங்கி அறைகிறார் ஒரு ஆசிரியர்.



                 மின் ஊடகத்திற்கு ஏற்ப எழுத்துச் சீர் திருத்தம் தேவை என்பதோடு சில முன்வரவையும் வைக்கிறார் வல்கனைசிங் தொழில் செய்து வரும் கல்லல் முத்தையா. நிறைவாக நாங்கள் எதிர்பார்த்தைவிட கருத்துப் பேழையின் வனப்பும் பரப்பும் விரிந்து செழுமை பெற்று களிபேருவுகை அளிக்கிறது.  இதில் குறையிருந்தால் அதற்கு நானே பொறுப்பு. ஏதேனும்  நிறை இருந்தால் ஆங்கில வழியில் படித்த என்னுள் நற்றமிழை விதைத்தரும் நாளும் என் நெஞ்சில் வாழ்கின்றவருமான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனாருக்கே உரியதாகும்.


                   தமிழ் நெஞ்சினீரே! தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை வெளியீட்டு விழாவிற்கு வருக! வருக!!