Wednesday 22 April 2020

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா?

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா? 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


உண்மையின் கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு, பொய்மை அதன் மேல் கொலை முயற்சி புகார் கொடுக்குமாம்.  ஊடகம் எனும் பஞ்சாயத்து தலைவரும் விசாரணையின்றி உண்மையைத் தண்டிப்பாராம்.

அப்படி வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு இப்போது அவலாகக் கிடைத்திருக்கிறது கச்சா எண்ணெய் விவகாரம்.
கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வந்துள்ளது.

மோடி இன்னும் பெட்ரோலை 72 ரூபாய்க்கு விற்கிறார் 

"இது, அராஜாகம், இது மக்களை வாட்டி வதைக்கும் கொடுமையான அரசு"

என சமூக வலைத் தளங்களில் அனல் பறக்கிறது.

உண்மை மீது கட்டிவிடப்பட்ட  களங்களைக் களந்து உண்மையின் உண்மையைப் பார்ப்போம்.
  
1. கச்சா எண்ணெயின் மைனஸ் விலை, அது, சர்வதேச மார்க்கெட்டில் நடந்த உண்மை தான். அது பார்வர்டு டிரேடிங் சந்தையில் சூதாட்டத்தில் குதித்தவர்களால் ஏற்பட்ட பொருளாதார கொரோனா.

 2. இது ஆன் லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரை வேரோடு சாய்க்கும். அசல் சந்தையிலும் இதன் தாக்கம் லேசாக இருக்கும். கடைக்கோடி நுகர்வோருக்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

3. சூதாட்ட வணிகர்கள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யயை  சேமிப்பதற்கு உரிய தூக்குச் சட்டி இல்லாமல் பல்லாயிரம் பேரல் கச்சா  எண்ணெய்யயை   ஆன் லைனில் வாங்குவார்கள்.
ஆன் லைனில் வாங்கிய  சரக்கை ஒப்புக் கொள்ள வேண்டிய நாளில் கச்சா எண்ணெய்யயை  உள்ளபடியே பயன்படுத்தும் (சுத்திகரிக்கும்) நிறுவனத்திற்கு விற்று விடுவார்கள். சில நேரங்களில் ஒப்பந்தத் தேதி விலையை விட சரக்கு ஒப்படைப்புத் தேதி விலை குறைவாக இருக்கலாம். அப்போது நஷ்டம் ஏற்படும். அந்த நஷ்டத்திற்கு அவர்கள் கைக் காசைக் கொடுப்பார்கள். இது தான் இதுவரை நடந்தது.

4. கொரோனா முடக்கத்தால் கச்சா எண்ணெய் பயன்பாடு சுருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு குறைந்த விலைக்கும் ஆன் லைனில் கச்சா எண்ணெய் வாங்கிய சூதாடிகளிடம் வாங்குவதற்கு ஆளில்லை.

5. ஆகவே ஆன் லைன் சூதாட்ட வணிகர்கள், சேமிப்பு கிடங்கு வசதியுள்ள அசல் சந்தை வணிகரிடமோ, சுத்திகரிப்பாளிரிடமோ அல்லது உற்பத்தியாளரிடமோ விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

6. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஆன் லைன்சூதாடிகளிடம் அசல் சந்தை வணிகர்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய ஒரு பைசா கூட விலை கொடுக்கவில்லை. கரும்பைத் தின்ன கூலியும் வாங்கிவிட்டார்கள்.

7. வரலாற்றில் முதல் முறையாக விற்பவன் வாங்குபவனுக்கு விலை கொடுக்கிறான். ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு தலை கீழ் விலை 3 முதல் 4 அமெரிக்க டாலர்.

8. மூன்றாவது பத்தியை மீண்டும் வாசித்தால் இது இயற்கை நீதி என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.



9. இதனால் அசல் சந்தையில் பெரிய நன்மை ஏற்படாது. ஆனால் லைன் சந்தையில் மாட்டிக் கொண்டவர்களை மட்டுமல்ல ஆன்லைன் சந்தையையே புரட்டிப் போட்டுவிடும்.



10. பாரதம் போன்ற நாடு அன்றாடம் ஆன் லைன் விலை பார்த்து விலை வீழ்ச்சியடையும் நாள் வரை காத்திருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாது. 

11. முறையாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன் கொள்முதல் ஒப்பந்தம் செய்யும் போது, கச்சா எண்ணெய் பல மாதங்களுக்கு முந்தைய விலையில் (ஒப்பந்த விலையில்) தான் வந்திறங்கும்.
நலந்தா செம்புலிங்கம்
22.04.2020

Thursday 16 April 2020

இயலார் அயலார் அல்ல!!


இயலார் அயலார் அல்ல!!

      வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கு 10 இயல்களை உடையது.  உலகக் கடன் என்பது பத்தாம் இயல். அதில் மாணவர், செல்வர் ,ஆசான்கள் என ஒவ்வொரு தரப்பினரும் வள்ளல் அழகப்பருக்கு  எப்படி நன்றி செலுத்த வேண்டும் என எடுத்துரைப்பார். அதில் கொடை நன்றி என்ற தலைப்பில் ஒரு  பாட்டு

“காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த//
 தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் //
கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து //
காட்டுவோம் நன்றிக் கடன்”

நாமும் கொடை செய்வது தான்வள்ளல் அழகப்பருக்கு  செலுத்தும் நன்றிக் கடனாகும் என்கிறார் வ.சுப.மா.

   ஒவ்வொருவரும் கொடைஞராகவேண்டுமென்ற வ.சுப.மாணிக்கனாரின் கனவு நனவாகும் சுழலை கொரோனா நெருக்கடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொடை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் பல நல்ல உள்ளங்களில் ஊற்றெடுத்து, உடனடியாக கொடையளித்தும் வருகிறன்றனர்.  கொடையாளிகள் பொருள்களை  பயனாளிகளுக்கும் கொடுக்கும் படத்தை சமூகஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.  அந்தப் படங்கள் தான் இந்தக் கொடை மனப்பான்மையைத் தொற்றாக எட்டுத் திசையிலும் பரவ வைத்திருக்கிறது, மகிழ்ச்சி.  ஆனால் பயனாளிகள் படத்தை வெளியிடலாமா? என்றொரு நெருடலும் மெல்ல எழுகிறது.

    இந்த நெருடலுக்கு இடமளிக்காமல் தேவகோட்டை கலவைச் சோறு அமைப்பினர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து உதவி வருகின்றனர். அவர்களை இந்த தொண்டு அமைப்பினர் பயனாளிகள் என்று கூட குறிப்பிடவில்லை. இயலார் அயலார் அல்ல என்றே சுட்டுகிறார்கள். 

    கலவைச் சோறு அமைப்பினரும் பொருள் தொகுப்புகளை வழங்கும் படங்களை வெளியிடுகிறார்கள், மிகுந்த அக்கறையோடு பயனாளிகளின் முகம் தெரியாமல் படம் வெளியிடுகிறார்.  இவர்களின் படங்களில்அந்த பயனாளிகளின் முகத்தை மறைப்பதிலும் ஒரு கலைநயம் மிளர்கிறது, ஆம் அந்த பயனாளிகளின் முகத்தின் மேல் ஒரு நட்சத்திரத்தைச் சூட்டியுள்ளார்கள்.

     
      நட்சத்திரக் கொடையாளர்கள் வாழிய!!
நலந்தா செம்புலிங்கம்
16.04.2020

குறிப்பு: கலவைச் சோறு ஒரு மொழிப் பண்பாட்டு அமைப்பாகும்.  இளம் படைப்பாளிகளை வெளிக் கொணர்வதில் இவ்வமைப்பு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது.  தலைவர்: எபினேசர் மனோகரன்  (அலைபேசி 9865274849) செயலர்: இமயம் சரவணன்   (அலைபேசி 9585313161) பொருளாளர்: திருக்குறள்தாசன் இராசேந்திரன் (அலைபேசி 9363124665)




Tuesday 14 April 2020

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாளும் கோளும்
வானியலும் தேர்ந்தவர்
கண்ட. கொண்டாடிய
சித்திரைப் புத்தாண்டு
நன்னாளில் வாழ்த்துக்கள்!



உயிர்க் கொல்லி
வைரஸ் கொரோனா !
நேர்மை கொல்லும்
வைரஸ் லஞ்சம் !
முன்னது தொற்றிக் கொல்லும்
பின்னது தொற்றித் தொடர்ந்து
நீங்காது நின்றும் கொல்லும்!
வாங்குபவனை மட்டுமல்ல
கொடுப்பவனையும் அடிமையாக்கும்
வினோத போதை வைரஸ்!



புதியதும் பழையதும்
வாட்டி வதைக்குது
சார்வரியே வா! வா!
வீறியெழு எனும் நற்றமிழ்
பெயர் கொண்ட புத்தாண்டே
பழைய புதிய வைரசுகளை
வழியனுப்பி நல்வாழ்வளிக்க
பீடு நடை போட்டு வா!!


நலந்தா செம்புலிங்கம்
14.04.2020

Sunday 5 April 2020

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!


  
நான் அறிந்தவரையில் அழகப்பர் பற்றி நூல்கள் மிகவும் குறைவு.  ஆங்கிலத்தில் இரண்டு தமிழில் உரைநடையில் வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழாக்க வரலாறு ஒன்று கவிதை நூல்கள் மூன்று உருவக வடிவ வாழ்க்கை வரலாறு ஒன்று. கொடைவிளக்கிற்கு உரை நூல் ஒன்று.

    இன்றைய காலத்திற்கேற்ற, கைபேசி வழயில் இலட்சக் கணக்கானோரை எளிதில் சென்றடையக் கூடிய இசை ஆல்பங்கள்  இரண்டு. கவிதாயினி வித்யா லட்சுமி மற்றும் உதவி இயக்குநர் இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்கள்.  

        கவிதைகள் நிறைய உள்ளன.  இப்பொழுதும் புதிது புதிதாய்ப் பூத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையில் அழகப்பர் இலக்கியத்தில் பூத்த புதுமலர் கவிஞர் கண்டனூர் அரசி பழனியப்பனின் அழகப்பர் திருத்தசாங்கம்.
   
        திருத்தசாங்கம் பத்துப் பாக்களால் ஆனது.  ஒவ்வொரு பாவிலும் ஒவ்வொரு உருவகத்தால் பாட்டுடைத் தலைவனைப் போற்றுவது தான் திருத்தசாங்கம்.  கவிஞர் அரசி பழனியப்பன் வள்ளல் அழகப்பரை


           


             1. நாமம்
             2. நாடு
             3. நகர்
             4. ஆறு
             5.  மலை
             6. தேர்
             7. படை
             8. பறை
             9. தார்
           10. கொடி



என்ற பத்து உருவங்களால் போற்றுகிறார்.

ஒரு மனிதனுக்கென ஆறு இருக்க முடியுமா? நாடு நகரத்திற்குத் தானே ஆறு இருக்க முடியும் ? அழகப்பருக்கென ஆறு இருக்கிறதாம் அது மாணவர்களின் அறிவு எனும் ஆறாம்.

மனம் தான் வள்ளலின் மலை என்கிறார்.  இதைச் சொல்ல ஒரு கவிஞன் தேவையில்லை. பிறகு, அரசி பழனியப்பன் எங்கே முத்திரையைப் பதிக்கிறார்? அழகப்பரின் மனம் எனும் மலைக்கு நிகரான ஓங்கிய மலை எங்கே? என்ற கேள்வியால் அழகப்பரின் மனம் தான் உலகிலேயே ஓங்கிய மலை நிலைநாட்டுகிறார்.

அழகப்பர் நடந்த மாபெரும் சபைகளிலெல்லாம் ஆயிரம் மாலைகள் சூட்டப்பட்டன, எனினும் அவருக்கான மாலை எது? பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு சூட்டும் பட்டங்கள் தான் அழகப்பரின் மாலையாம்.

அழகப்பர் ஈடுயிணைல்லா வள்ளல் பல் தொழில் அதிபர் கல்விமான்.  அவருக்குப் படையெல்லாம் தேவையா?  தேவையோ தேவையில்லையோ அழகப்பருக்கு ஒரு பெரிய படை இருந்ததாம் அது மாணவர்கள் எனும் வெற்றிப் படையாம்.

இவை எல்லாவற்றையும் விஞ்சுகிற உருவகம், கொடி எனும் உருவகம், இந்த தசாங்கத்தின் நிறைவுப் பாடலாக அமைகிறது.  இது  அரசி பழநியப்பனுக்கு கவிதா மண்டலத்திலும் குறிப்பாக அழகப்பர் இலக்கியத்திலும் தனித்த நிலைத்த இடத்தை பெற்றுத் தரும்.

ஒரு கொடி அதன் நிறத்தாலோ அது ஏந்திப் பட்டொளி வீசும் இலச்சினையாலோ அறியப்படுகிறது.  அழகப்பர் கொடியின் நிறத்தைப் பற்றியோ இலச்சினை பற்றியோ கவிஞர் அரசி பழநியப்பன் எதுவும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் கொடையறம் தான் அழகப்பரின் கொடியாம்.

இது நிச்சியமாக கவிஞரின் தந்தை அமரர் மகாகவி அரசியின் மனதை நிறைக்கும் தமிழ்ப் பா தான் ஐயமில்லை.

வள்ளல் அழகப்பர் திருத்தசாங்கம்
நாமம்
கூட்டை விரும்பாத கோலக் கிளியேநம்
பாட்டுடைய வள்ளல்பேர் மாண்புரைப்பாய் - போற்றும்
அலகில் கொடையால் அகிலம் புரந்த
அழகப்பர் என்பதுவே யாம்
நாடு
வண்ணப் பசுங்கிளியே! மாண்பார் அழகப்பர்
நண்ணிப் பிறந்ததிரு நாடுரைப்பாய்!- எண்ணில்
கொடைபுரிந்தார் நாடு குடியால்,பண் பாட்டு
நடையிலுயர் நல்லதமிழ் நாடு
நகர்/ஊர்
வான்பறக்கும் பைங்கிளியே! வள்ளல் அழகப்பர்
தான்பிறந்த நன்னகரம் தானுரைப்பாய் !- வான்தழுவு
கோட்டைகளால் ஓங்குசெல்வக் கோட்டையூர் செட்டிமக்கள்
நாட்டிலுயர் வள்ளல் நகர்
ஆறு
மழலை மொழிகின்ற வண்ணக் கிளியே!
அழகப்பர் ஆறதுவும் யாதாம்?- உளத்தே
செறிவாகி மாணவரின் சீரை உயர்த்தும்
அறிவுகளே வற்றாத ஆறு
மலை
மலைக்கும் அழகுடைய பைங்கிளியே! வள்ளல்
நிலைக்கு நிகர்மலையை நீசொல் !- உலகில்
இனிதோங்கு மாமலைதான் ஏதுநிகர்?வள்ளல்
மனமே உயர்ந்த மலை.
தேர்/ஊர்தி
கூரலகுப் பைங்கிளியே! கோமான் அழகப்பர்
தேரதனைச் சற்றே தெரிவிப்பாய் - காரைநகர்க்(கு)
அன்(று)ஈந்த கல்வி அறுவடைசெய் சோலைகளின்
தென்றல் அவரூரும் தேர்
படை
சாய்ந்து நடைபயிலும் தத்தையே! வள்ளலுக்கு
வாய்ந்த படையை மகிழ்ந்துரைப்பாய்! - வாய்ந்தசெல்வம்
ஆனவரை கல்விக்கே அள்ளிக் கொடுத்ததனால்
மாணவரே வெற்றிப் படை
பறை/முரசு
காண இனிய கவினார் பசுங்கிளியே!
தானக் கொடைஞர்பறை சாற்றிடுவாய்- ஞானமருள்
வேதங்கள் போலும் வியன்பல் கலைக்கழகப்
பாடங்கள் கொட்டு பறை

தார்
கொஞ்சுமொழி அஞ்சுகமே! கோமான் அழகப்பர்
நெஞ்சமகிழ் தாரெதுவோ நீயுரைப்பாய் !- விஞ்சுமுயர்
பட்டங்கள் மாணவர்க்குப் பல்கலையார் சூட்டுவதே
இட்டமலர்த் தாராம் இவர்க்கு
கொடி
பச்சைக் கிளியே! நம் வள்ளல் அழகப்பர்
மெச்சு புகழ்க்கொடியை விண்டுரைப்பாய்! - சற்றும்
தடையின்றிக் கல்விக்கே தாளாற்றித் தந்த
கொடையறமே ஏத்து கொடி.
அரசி .பழனியப்பன்
05.04.2020