Tuesday 30 October 2018

பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் வந்துவிட்டார்கள்!!


 
பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் வந்துவிட்டார்கள்!!
^^^^^^   /////////    ^^^^^^   /////////    ^^^^^^   /////////

    சுடு ஒரு சுவை என்பார்கள்.  ஒரு உணவுத் திருவிழாவைப் பற்றிய செய்திகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பதிவு செய்யலாமாஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடாதா?

         கஞ்சியிலும் சுவை, சத்தெல்லாம் இருக்கிறதல்லவா? இப்போது சில மேட்டுக்குடி சூப்பர் மார்க்கெட்டுகளில் அழகான பாக்கிங்கிற்குள் (PACKING) பழைய கஞ்சியே மூன்று இலக்க விலையில் விற்கப்படுகிறது.

        காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் உணவுத் திருவிழா பற்றிய தகவல் முதலில் தொலைபேசியில் வந்தது.  அது என்ன கேட்டரிங் கல்லூரியா என்ன? உயர்நிலைப் பள்ளி தானே? எதற்கு உணவுத் திருவிழா நடத்துகிறார்கள்? என்று எண்ணங்கள் அலை அலையாய் எழுந்தன.  சற்று நேரத்தில் அழைப்பிதழே வந்தது.  அழைப்பிதழ் ஒரு விரிவுரைக்குத் தூண்டியது.  
 
        இந்த உணவுத் திருவிழா அழகப்பா பல்கலைக் கழகம் (சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறை) இராமநாதன் செட்டியார் பள்ளி மற்றும் காரைக்குடி பேக்கரி சங்கம் இணைந்து அழைப்பதாக இருந்தது. 

            அழகப்பா பல்கலைக் கழகமும் பேக்கரிகள் சங்கமும் நேற்றைக்கோ இன்றைக்கோ ஒரு ஒரு-நாள் நிகழ்ச்சிக்காக மட்டும் கைகோர்த்ததாக நான் நினைக்கவில்லை.  அதன் உறவின் வேர் நவீன காரைக்குடியின் ஆதிவேர், பழைய வரலாறு.

           வள்ளல் அழகப்பர் தம் கல்லூரி மாணவர்களுக்கு தரமான பேக்கரி உணவுகள் வழங்க விழைந்ததன் விளைவாகவே காரைக்குடியில் அந்தக் காலத்திலேயே, வள்ளல் அழகப்பர் காலத்திலேயே பேக்கரிகள் காலூன்றின.  கல்வி நிலையங்களுக்கு வெளியில்  வள்ளல் அழகப்பர் படத்தை வைக்கும் பழக்கத்தையும் பேக்கரிகள் தான் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

            காரைக்குடியின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சிக்கு வித்திடும் இராமநாதன் செட்டியார் பள்ளியுடன் இவர்கள் கைகோர்ப்பது தான் இன்றைய தலைப்புச்செய்தி. 

           இராமநாதன் செட்டியார் பள்ளிக் கட்டிடத்தின் முன்பகுதியில் இரண்டாவது மாடியில் கூட்டங்கள் நடைபெறும்.  சுமார் 100 அடி நீளமும் 18 அடி அகலமும் கொண்ட அந்த அரங்கில் முதல் 10அடிக்கு மேடை ஆகவும் எஞ்சிய 90 அடி பார்வையாளர் பகுதியாகவும் அமைக்கப்படும் .  இந்த உணவுத் திருவிழாவில் அந்த பார்வையாளர்கள் பகுதியில் நான்கு நீள வரிசைகளில் நீள மேசைகளில் மாணவர்கள் தத்தம் உணவுத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி நின்று கொண்டிருந்தார்கள்.  எப்படியும் 150 மாணவர்கள் 150 வகை உணவுகளை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.  இவை போக மேடைப் பகுதியை ஒட்டி ஒரு அகல மேசையில் காய்கறி பழங்களாலான அலங்கரிப்புகள்.  மேலும் அரங்கில் எதிர் மூலையில் ஒரு குடிசையில் கிராமிய உணவு தயாரிக்கப்படும் காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.  அந்த அரங்கைப் பார்த்து வியந்து ஒரு ஆசிரியையிடம் பாராட்டைத் தெரிவித்தேன்.  அவர் பெருமிதத்தோடு இது மட்டுமில்லை சார், 16 வகுப்பறைகளிலும் உணவுக் கண்காட்சி நடக்கிறது, 400 மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்றார். அப்போது  தான் இந்த உணவுத் திருவிழாவின் பிரம்மாண்டம் எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. சற்று முன்னர் காதில் விழுந்த ஒரு  முன்னுரையும் நினைவுக்கு வந்தது.

      இந்த கண்காட்சியை பல்கலைக் கழகப் பதிவாளர் திறந்து வைப்பதற்கு முன்னர், இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் பேக்கரி சங்க கெளரவச் செயலருமான  திரு காளீஸ்வரன் முக்கிய பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அழகப்பா பல்கலைக் கழகத்தின் இத்துறையின் சோதனைக் கூடத்தில் மாணவர்களே பல புதிய உணவுகளைத் தயாரித்தது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.  எத்தனையோ வகை சிறுதானியங்களில் ஒவ்வொரு சிறுதானியத்திற்குப் பல வகை உணவுகள் தயாரிக்கப்பட்டாக  புள்ளி விவரங்களை  சொல்லிக் கொண்டிருந்தார். 

           இன்னும் 15 வகுப்பறைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் மலைப்பும் தோன்றியது.  அரை குறை மனத்தோடு அந்த  இரண்டாவது மாடி அரங்கை விட்டு வெளியேறினேன்.  ஐந்து வகுப்பறை மட்டுமே பார்க்க நேரம் இடம் கொடுத்தது.  

          இது ஒரு மிகப் பெரிய கூட்டுமுயற்சி, மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், பள்ளி, பல்கலைக் கழகம் பேக்கரி சங்கம் இணைந்து உருவாக்கியது என்றாலும் இத்தனை வகையான உணவுகளை ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் பஃபே (buffet) விருந்தில் கூடப் பார்க்க முடியுமா? என வியக்கிறேன்.

        நான் பார்த்தவரையில் மூலிகைகள் சார்ந்த உணவுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.  பேக்கரி உணவுகளுக்குள்ளும் சிறுதானியங்கள் அதிக அளவில் இடம் பெற்றன.  இந்த வகை உணவுகள் கடைகளில் பார்க்காதவை. செட்டிநாட்டு உணவுகளும்  ஓரளவு இடம் பெற்றிருந்தன.  ஒரு மாணவர் மீதமாகிய சோற்றில் அல்வா தயாரித்திருந்தார். ஒரு மாணவர் யூ டியூப் பார்த்து வெஜிடபுள் கார்விங் (VEGETABLE CARVING) கற்றுக் கொண்டதாகச் சொன்னார்

          இந்த உணவு எண்ணிக்கையும் வகைப்பாடுகளும் ஒரு பக்கம் வியக்க வைத்தது. மற்றொருபுறம்   உணவின் மூலப் பொருட்கள், அவற்றின் சத்து, அவற்றின் பலன், எந்த வயதினருக்கு ஏற்றது, எந்த நோய் அல்லது குறைபாட்டிற்கு இவை மருந்தாகும் என ஒவ்வொரு உணவைப் பற்றிய விவரங்கள் அந்தந்த உணவைக் காட்சிப்படுத்திய மாணவர்கள் பட்டியலிட்டு திகைக்க வைத்தார்கள்.  
           
          இந்த வகை வகையான உணவுகளையெல்லாம் தயாரிக்க எல்லா மாணவர்கள் வீடுகளிலும் அம்மாக்கள் தான் உதவியிருக்கிறார்கள், ஒரு மாணவி மட்டும் நான் எங்க அம்மாவிற்கு உதவினேன் என்றாள், அந்த அறிவாளியின் பெயரை மறந்துவிட்டேன். ஒரு வீட்டில் கூட அப்பா உதவி செய்யவில்லை
என்பது என் ஆய்வு முடிவு.  ஆண்கள் சமைப்பதாகச் சொல்லி அதை வைத்து எள்ளி நகையாடும் மேடைப் பேச்சாளர்கள் குறிப்பாக பட்டி மன்றப் பேச்சாளர்கள் பார்வைக்கு என் ஆய்வு முடிவை சமர்பிக்கிறேன்.

           இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு எத்தனையோ முறை சென்றிருக்கிறேன்.  சாதாரண முறையில் சென்றிருக்கிறேன், விழாக்களில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறேன், பேசுவதற்காகச் சென்றிருக்கிறேன், ஒரு முறை அப்பள்ளியின் மின் நூலகத்தைப் பார்ப்பதற்காகவே போய் ஒரு மணிநேரம் மின் நூல்கைளப் படித்தேன்.  ஆனால் ஒரு முறை கூட மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடவில்லை.  இந்த உணவுத் திருவிழாவில் தான் மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடினேன்.

                நான் பார்த்த நீண்ட அரங்கு மற்றும் ஐந்து வகுப்பறைகளில் நாற்பது மாணவர்ளிடமாவது அவர்களுடைய விளக்கவுரைக்கு இடையே குறுக்குக் கேள்விகள் துணைக் கேள்விகள் எல்லாம் கேட்டேன்.  சொல்லி வைத்தார்போல எல்லா மாணவர்களும் என் கேள்விகளுக்கு சரியோ தவறோ உடனுக்குடன் பதிலளித்தார்கள் (தவறான பதில்கள் நான்கு அல்லது ஐந்து தான்) இவைகளை என் கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்ல, அவர்களுடைய ஆர்வமுமாகவும்
ஆற்றலாகவும் கருதுகிறேன்.  பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதிற்கு இது சின்னஞ்சிறிய முன்னோட்டடம்.   

                       காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் உணவுத் திருவிழாவில்உணவுகள் மட்டும் தயாரிக்கப்படவில்லை, விழிப்புணர்வு விளக்கையும் ஏற்றப்பட்டிருக்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
30.10.2018


Sunday 21 October 2018

தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (5) .....
^^^^^^^^^^^^^^^^^ //////////////// ^^^^^^^^^^^^^^^^^^^^
சுந்தர் பிச்சை, 2015 ஆம் ஆண்டு அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆனார். அத்தோடு நமது பெருமித அடையாளமும் ஆகிவிட்டார். அவருடைய படிப்பு, சாதனைகள், பதவிகளைவிட அவர் நம் ஊர்க்காரர் என்ற அடையாளத்தைத் தான் நாம் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்வோம். அதன் மூலம் அவருடைய பெருமைகளில் எல்லாம் நமக்கும் ஒரு பங்கு உரிமையாகிவிடுகிறது. (அவருடைய சின்ன ஊதியத்திலும் ஒரு துளி பங்காவது கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.)
தெற்கு பிகார் மின் பகிர்மான நிறுவனத்தின் தலைவரான I A S அதிகாரி திரு ஆர். லெட்சுமணனின் சொந்த ஊர் தேவகோட்டை தான். அவர் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியை நிறுவிய வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் நெருங்கிய உறவினர். தேவகோட்டையின் இரண்டாவது I A S அதிகாரியான திரு ஆர். லெட்சுமணன், சுந்தர் பிச்சையைப் போலவே தாய் மண்ணான தேவகோட்டைக்குள் ஒரு சிலர்ப்பை ஏற்படுத்துகிறார்.
அவர் தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் ஒரு நாள் (01.10.2018) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு உயர்நிலைப் பிரமுகரைப் பார்க்கும் மனநிலையில் தான் சென்றேன். பல ஆண்டுகள் பீகாரிலேயே பணியாற்றிதால் தமிழில் பேச சிரமப்படுவார். ஆனால் சொந்த மண்ணைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் நெகிழ்வாக பேசுவார் என்று மட்டும் தான் எதிர்பார்த்தேன்.


அவரிடம் அவருடைய பதவியை வெளிப்படுத்தும் எந்தப் புற அடையாளமும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எளிய தோற்றத்தை தேடிப் பிடித்து தம் மீது வலிந்து ஏற்றிக் கொண்டிருந்தார். நடு வயதினரான அவர் கல்லூரி மாணவரைப் போலத் தான் இருந்தார். பீகாரிலேயே பல ஆண்டுகள் இருப்பதால் என் உரையாடலில் என்னையும் இந்திச் சொற்கள் வந்துவிடுகிறது என்ற அந்த இளம் I A S அதிகாரி வேட்டி உடுத்திவந்தார்.
நான் எதிர்பார்த்ததைப் போலவே தமிழில் பேச சிரமப்பட்டார், ஆனால் அது ஆரம்ப நிமிடங்களில் மட்டும் தான். கொஞ்சம் குடும்பம் சார்ந்த நெகிழ்வுரை அதுவும் நான் எதிர்பார்த்ததைப் போல அமைந்தது. இதுவரை என் கணிப்பு பலித்தது. சரி இனிமேல் வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுவார் என நான் நினைத்துக் கொண்டிருந்த போது தான் கருத்தாழமிக்க பேச்சை சலனமில்லாமல் தொடங்கினார். விபத்துப் போலத் தான் தனக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது என்ற செய்தியோடு அவருடைய உரை வேர் பிடித்தது. தமது வாசிப்புத் திறனும் நூல் தேர்வுகளும் எப்படி வளர்ந்தன என தொடர்ந்து விவரித்தார்.
புனை கதைகளைப் படிக்கும் போது நம் மனதில் ஒரு காட்சி விரியும். இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற அனுபவம் தான். அதற்கு ஒரு படி மேல் அவர் ஒரு படி சென்றார். அது தான் அவருடைய (கருத்தை) எடுத்துரைக்கும் திறனை வெளிப்படுத்தியது. அவர் வாசித்த THE DA VINCI CODE எனும் புனை கதை திரைப்படமாகியிருக்கிறது. ஆனால் அந்தத் திரைப்படம் இவர் மனத்திரையில் விரிந்த காட்சி போல சிறப்பாக அமையவில்லை என்றார். இதன் மூலம் புனைகதை வாசிப்பு வாசகரின் கற்பனைத் திறனை வளர்க்கும் என்பதை மிக உறுதியாக நிலைநாட்டினார். அதுவரை அவருடைய உரையை பதிவு செய்ய வேண்டுமெனத் தோன்றவில்லை. இந்தத் தருணத்திலிருந்து தான் அவரை உரையை எனது அலைபேசியில் பதிவு செய்தேன். கருத்தாழமிக்க அந்த உரை உணவுப் பழக்கம், சுற்றுப் புறச் சுழல் எனப் பல திசைகளில் உரை உலாவந்தது.
இவருடைய ஐயா (தந்தையாரின் தந்தையார்) லெ. கண்ணப்பச் செட்டியாரின் மேதைமையும் இவரிடம் வெளிப்பட்டது. இவரது தந்தையாரின் தாய்வழிப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் ஆசியும் இவருக்கு மேடையிலேயே கிடைத்தது.
அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் ஆசி இந்தக் கொள்ளுப் பேரனுக்கு எப்படி கிடைத்ததென்றால், கோவிலூர் ஆதினம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞானசுவாமிகள் வடிவத்தில் கிடைத்தது.
அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியார் இலுப்பக்குடி வயிரவரை அனுதினமும் உச்சாடானம் செய்பவர். வயிரவரின் அருளால் விஷகடிக்கு உள்ளனவர்கள் குறிப்பாக நாய்கடிக்கு உள்ளானவர்கள் குணம் பெறச் செய்வார். அவர்கள் வீட்டு முகப்பில் தெற்குத் திண்ணையிலிருக்கும் முதல் தூணருகிலிருந்து பூசை செய்வார்கள். அந்தத் தூணில் வயிரவரின் மந்திர சக்தி உருயேறியது. அந்தப் பாட்டனார் ஊரில் இல்லாத நிலையில் நாய்கடிக்கு உள்ளனவர்கள் அந்தத் தூணை வலம் வந்து வணங்கிச் சென்று குணமடைந்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை கவிஞர் அரசி இவ்வாறு பதிவு செய்கிறார்
தூணில் மந்திரம் துலங்கும் இல்லம்
நாயின் வாயால் நலிவுற்றோர்கள்
கோயில் சேர்ந்தால் குணம் பெற்றுய்வர்


புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நிரலின் படி, இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை சிறப்பு விருந்தினர் உரை அதற்குப் பிறகு சுழலும் சொல்லரங்கமும் நன்றியுரை மட்டுமே திட்டமிடப் பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னர் புத்தகத் திருவிழாவில் கோவிலூர் ஆதினப் பதிப்புத் துறை அமைத்திருந்த ஸ்டாலை கோவிலூர் சுவாமிகள் பார்க்க வந்தார்கள். புத்தகத் திருவிழா அமைப்பாளர்களும் நகரத்தார் பள்ளிகளின் நிர்வாகிகளும் வேண்டிக் கேட்டு்க் கொண்டதற்கிணங்க கோவிலூர் சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று லெட்சுமணைனயும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த அனைவரையும் ஆசிர்வதித்தார்கள்.
எத்தனையோ பேர்களின் நலிவை நீக்கிய அந்தப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாரின் புண்ணியத்தால் தான் சமூக அக்கறை மிக்க ஞானத் துறவியான கோவிலூர் சுவாமிகள் நிகழ்ச்சி நிரலில் திட்டமிடப்படாத நிலையிலும் தேவேகாட்டைக்கு வந்து லெட்சுமணனை ஆசீர்வதித்திருக்கிறார்.
லெட்சுமணனுக்கும் நன்றி அவரது கொள்ளுப் பாட்டனார் சேவு. லெ. சேவுகன் செட்டியாருக்கும் நன்றி

Tuesday 2 October 2018

தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (1--- 4)

தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (1).........
^^^^^^^^^^------------^^^^^^^^^^
ஒரு தொடக்கப் பள்ளியின் நாடகத்தில் 10 காட்சிகள், அவற்றுள்ளும் ஒரு போர்க் காட்சி, "சந்திர லேகா" பாணியில் நடனக் காட்சியெல்லாம் சாத்தியமாகுமா?

இது என்ன கின்னஸ் சாதனை முயற்சியா என்ன?   தேவகோட்டைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்பார்கள்.
ஏனென்றால் தேவகோட்டைக்காரர்களுக்கு அது நகரத்தார் தொடக்கப் பள்ளியின் பாணி என்பது நன்றாகத் தெரியும்.





தேவகோட்டை புத்தகத் திருவிழா முதல் நாள் (27.09.2018) நிகழ்ச்சியில் நகரத்தார் தொடக்கப் பள்ளியின் சிவகங்கைப் பேரரசி வேலு நாச்சியார் நாடகம் அப்பள்ளியின் தனி அடையாளமான திருத்தமான ழகர உச்சரிப்புடன் மிளர்ந்தது. வேலு நாச்சியார் ஏழு மொழிகளை அறிவார் என்பது பன்மொழி வசனங்களால் மெய்ப்பித்த உத்தி அருமை. 3, 4 மொழியில் வசனம் பேசிய "வேலு நாச்சியார்" உச்சகட்ட நடனக் காட்சியில் வாள் ஏந்தி நின்ற கோலம் என்றென்றும் மனதில் நிற்கும் வீரக்கோலம். முதல் பரிசை ஒருவருக்குத் தான் கொடுக்க வேண்டுமா என்ன? "வேலு நாச்சியார்" "குயிலி" "உடையாள்". இரண்டாம் பரிசு மற்ற அனைவருக்கும் (3+27 ஆக இருக்கலாம்) கொடுக்கலாம், கொடுக்க வேண்டும்!! . நலந்தாவும் கொடுத்து மகிழும்


தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (2).........

^^^^^^^^^^------------^^^^^^^^^^
பாக்யராஜ் ஒரு பத்திரிக்கையில் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது கோயமுத்தூர்கார்கள் கெட்டிக்காரர்கள்   என்றார்.  இதனை லேனா தமிழ்வாணனிடம் ஒரு வாசகர் (அனேகமாக கோயமுத்தூர்கார்) பாக்கியராஜ் கோயமுத்தூர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறியுள்ளாரே என ஒரு மடக்குக் கேள்வியாகக் கேட்டார். 

            ஆம் என்றால் மற்ற எல்லா ஊர்க்காரர்களையும் குறைத்து மதித்த பொல்லாப்பு வரும்.  இல்லை என்றாலோ கோயமுத்தூர்காரர்கள் வெகுண்டெழுவார்கள்.
              
               லேனா தமிழ்வாணன் அந்த வாசகரின் கேள்விக்கு ஆம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை, தேவகோட்டைக்காரர்கள் கெட்டிக்காரர்கள் என்று பதிலளித்தார்.  

              அது லேனா தமிழ்வாணனின் கூர்த்தமதிக்கு  நல்ல சான்று எனினும் மிகவும் தற்செயலாக   நிகழ்ந்த (எழுத்து வடிவிலான) சமயோசித உரையாடல் தான்.   லேனா தமிழ்வாணனின் அந்த வாக்கிற்கு ஒருவர் மிக ஆழமான விரிவுரையை நல்கியுள்ளார்.  ஆனால் அந்த விரிவுரையை நல்கியவர், தேவகோட்டைக்காரர் அல்லர்,  புதுவயல்காரர்.


               
                    அவர் தான் திருவாடானைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் மு. பழநியப்பன்.
 தேவகோட்டை புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நிகழ்ச்சியில் (28.09.2018) அவருடைய சிறப்புரையின்  தலைப்பு என்னவோ உள்ளூர் இலக்கியம் தான், ஆனால் அது   பல கிளைக் கதைகள் நிறைந்த மகாபாரதம்  போல் எங்கெங்கோ சென்றது, எல்லாம் புள்ளி விவரங்கள்.  அலங்காரப் பேச்சு அரைகுறைத் தகவல் என்றெதுவுமில்லை.  19 ஆம் நூற்றாண்டைச் சேர்நத சிந்நய செட்டியாரில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டு முகநூல் எழுத்தாளர் முத்துமணி வரையிலான நெடிய பட்டியலை எடுத்துரைத்து தேவகோட்டையின் இலக்கியச் செழுமையை நிலைநிறுத்தினார்.   

                    புத்தகத் திருவிழாப் பேருரை என்பதாலோ என்னவோ பேராசிரியர் மு. பழநியப்பன், தனது  தகவல் மழையில் பெரிய பகுதியை பதிப்புத் துறைக்கே ஒதுக்கினார்.  சின்ன அண்ணாமலையே கதாநாயகராக வலம் வந்தார். முத்தாய்ப்பாக   சின்ன அண்ணாமலை வெளியிட்ட 300 நூல்களும் மீண்டும் வெளிவர வேண்டும் என்ற தனது தமிழாசையை பதிப்பாளர்கள் முன் வைத்தார்

தேவகோட்டை புத்தகத் திருவிழாவில் (3) .......
^^^^^^^^^ /////////////  ^^^^^^^^^^^^ ////////////   ^^^^^^^^^^^

              பதிப்புத் துறையில் வெற்றி பெற பெரிதும் தேவைப்படுவது உழைப்பா? அதிர்ஷ்டமா? என ஒரு பட்டி மண்டபம் நடுத்தி அதில் என்னை நடுவராக நியமித்தால் நான்  தலைப்பை விட்டு விலகி பதிப்புத் துறையில் ஈடுபடுவதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும் எனத் தீர்ப்பளிப்பேன்.

       புத்தக விற்பனையாளனாகி நான் பதிப்பாளர்களைப் பற்றி இப்படி பெருமையாகப் பேசுவதிற்கு உள்நோக்கம்  தான் காரணம் என்று நினைப்பீர்கள்.  என் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை தான்.  ஆனால் சில நிமிடங்கள் ஒதுக்கி இப்பதிவுப் படித்துவிட்டு என் தீர்ப்புக்கு  தீர்ப்பு நல்க வேண்டுகிறேன்.
              


    தமிழகமெங்கும் பல ஊர்களில் புத்தகத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன.  சில பதிப்பகங்கள், சில விற்பைனயாளர்கள் தனியாக புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார்கள்.  தன்னார்வ அமைப்பினர் சில ஊர்களில் நடத்துகிறார்கள்.  இலக்கிய அமைப்புகள் சில ஊர்களில் நடத்துகிறார்கள். அரசுத் துறையின் பெருமித நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே நெய்வேலியில் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.

         சென்னை, மதுரை மற்றும் கோவையில் பதிப்பாளர்களின்   அமைப்புகளே பல ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்திவருகிறார்கள்
     
        தமிழ்ப் பதிப்புத் துறைக்கு பல முன்னோடிகளை வழங்கிய ஊர் தேவகோட்டை.. தமிழ் பதிப்புத் துறையின்
 முன்னணிப் பதிப்பாளர்களுள் பலர் தேவகோட்டைக்காரர்கள்.  அவர்கள் தம் பிறந்த மண்ணைப் போற்றும் வகையில் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பின் மூலம் தேவகோட்டையில் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள்.

              ஒரே துறையில் ஈடுபட்டிருப்போரிடையே தொழில் போட்டி ஏற்படுவது தான் இயல்பு.  ஒரு பொது பிரச்சனையை எதிர் கொள்ளத் தான் கூடுவார்கள்.  பதிப்பாளர்களோ தம்முள் மூத்தவர்களைப் பாரட்டுவதற்கும் கூடுகிறார்கள். பதிப்பாளர் அமைப்புகள் நடத்தும் புத்தகத் திருவிழாக்களில் மூத்த பதிப்பாளர்களைப் பாரட்டுவது இயல்பாகி மரபாகிவிட்டது. 

               அவ்வண்ணம் தற்போது தேவகோட்டையில் நடைபெற்று வரும் (27.09.2018 முதல் 07.10.2018 வரை) புத்தகத் திருவிழாவில் கோவை விஜயா பதிப்பகம்  அருணோதயம் திரு அருணன், விஜயா பதிப்பகம் திரு வேலாயுதம் முத்துப் பதிப்பகம் திரு லெட்சுமணன், பொன்முடி பதிப்பகம் பொற்கிழிக் கவிஞர் அருசோ மற்றும் காரைக்குடி செல்வி பதிப்பகம் திரு சிவராமன் ஆகிய ஐந்து பதிப்பாளர்கள் நீதியரசர் அரு. லெட்சுமணன் அவர்கள் தலைமையில் 30.09.2018 அன்று பாராட்டப் பெற்றார்கள்.

             இவர்களுள் அருணோதயம் அருணன் தான் மிகவும் மூத்தவர்.   அவர் தமது ஏற்புரையில் தமது வெற்றிக்கு கடின உழைப்பும் கறாரான அணுகு முறையும் தான் காரணம் என கணீர் குரலில் சூளுரைத்தார்.  அகவை 94 ஐ கடந்த அந்த மாமனிதரின் சூளுரை ஒரு கறாரான தந்தை மகனுக்கு ஆணையிடுவதைப் போல இருந்தது.  உள்ளபடியே தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்தவரும் சென்னைப் புத்தகத் திருவிழாவை நடத்தும் பாபாசி    அமைப்பின் செயலராகவும் பணியாற்றும் திரு அரு. வெங்கடாசலம்,  திரு அருணன் அவர்களின் மகன் தான்.  திரு அருணன் எல்லா பதிப்பாளர்களிடமும் கறாரான தந்தைப் போலவே பேசினார்.  அவர்களும் அவரைத் தந்தையைப் போலவே போற்றினர்.  இது ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நினைவூட்டவில்லையா? பதிப்பாளர்களுக்கு நூல்களை வெளியிடுவது தொழில் தான் என்ற போதும் அவர்கள் வெளியிடும் நல்ல நூல்களால் சமூகம் மேன்மையுறும் போது தொழிலே தொண்டாடுகிறது. மேலும் அவர்களுக்குக்குள் ஒரு கூட்டுக் குடும்பம் போன்ற உறவுகள் மலர்கிறதென்றால் அது பெரும் பேறுதானே?

தேவகோட்டைப் புத்தகத் திருவிழாவில் (4) ......
^^^^^^^^~~~~~~^^^^^^^
தேவகோட்டைப் புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் (29.09.2018) முனைவர் யாழ் சு. சந்திரா: அவர் பேசியது சங்கத் தமிழ்! பார்வையோ புதிய கோணம் ,ஆய்வோ காலத்தோடு ஒட்டிய பகுப்பாய்வு. பாய்ந்து புது வெள்ளம். நிச்சயமாக வாசகர்கள் யாழ் சந்திராவின் புதிய இலக்கிய வெள்ளத்தை அணை கட்டி வளம் பெறுவார்கள்