Thursday 30 August 2018

என் செல்லக் கண்ணனே!!


கண்ணனைக் கொஞ்சும் இந்த வண்ணத் தமிழைக் கேட்க ....



அந்த அற்புதமான பாடல் வரிகள்:::


கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ....

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழை தரையா உள்ளம்
பிசுப்பிசுப்பைப் பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண

நீ ராதை இடம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலைப் பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன் ....

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததைப் போல்
எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் ...


நலந்தா செம்புலிங்கம்
31.08.2018







Wednesday 29 August 2018

REDME உலகப் புகழ் பெற்ற ஐஸ் க்ரீம்

REDME உலகப் புகழ் பெற்ற ஐஸ் க்ரீம் ********************************************************     
       
             REDME அது ஜப்பானிய மொழிச் சொல்லா கொரிய மொழி என்பதிலேயே பலருக்கு ஐயம், அதன் பொருளும் தெரியாது, அந்தப் பெயரில் விற்கும் ஐஸ் க்ரீமை யாருக்குத் தெரியாது? 

             REDME  ஐஸ் க்ரீமிற்கு பல ஊர்களில் கிளையில் உள்ளது.  ஐஸ் க்ரீமின் சுவை  அருமையாகயிருக்கும் விலை அதைவிட அதிகமாயிருக்கும். அதன்  தொலைக்காட்சி விளம்பரம் படு அசத்தலாகயிருக்கும். 
 
            ராமுவின் வீட்டிற்கு அருகிலேயே அந்த ஐஸ் க்ரீம் கடை ஒன்று இருந்தது.  ஆனால அவனுடைய அப்பாவிடம் ஐஸ் க்ரீம் என்று பேச்சே எடுக்க முடியாது.  அதற்கும் அப்பா தான் காரணம் அவர் இதே ஐஸ் க்ரீம் கம்பெனிக்கு முகவராகத் தொழில் செய்து நஷ்டப்பட்டதும், அதிலிருந்து மீள நானோ என் குடும்பத்தினரோ  REDME  ஐஸ் க்ரீம் என்றில்லை எந்த ஐஸ் க்ரீமையும் தொடமாட்டோம் என்று குலதெய்வச் சன்னதியில் சத்தியம் செய்ததும் தான் காரணம்.
         ராமுவால் முடிந்ததெல்லாம், அந்த REDME  ஐஸ் க்ரீம் கடையைக் கடக்கும் போதெல்லாம் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்வது தான்.   முகத்தைத் திருப்பத் திருப்ப மனம் அதன் மீதே லயத்தது.  

          அம்மாவிடம் ஒரே ஒரு நாள் ஒரு ஐஸ் க்ரீமிற்கு ராமு மன்றாடினான்.  அப்பாவின் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை என்று  சொல்லி அம்மாவும் மறுத்துவிட்டார்
           அம்மாவிடம் ஒரே ஒரு ஐஸ் க்ரீமிற்கு மன்றாடியும் அம்மாவும் மறுத்ததால் ராமு சோர்ந்து போனான். பாடத்தில் கவனம் கொள்ளமுடியவில்லை.  வேறு எதிலும் கவனம் கொள்ள முடியவில்லை.  முகமே வாடியது.
             
            நினைந்தூட்டுபவள் தானே தாய்.  ராமுவின் மனவாட்டம் உணர்ந்து ஒரு நாள் அவன் கேட்காத போது, ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்தாள்.

       அம்மா,  மறுநாள் ராமு பள்ளிக்குச் சென்ற பின் அப்பாவிடம் ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்ததைச் சொன்னாள். அப்பா கோபப்படவில்லை. 
   
          ராமு ரொம்ப ஏங்கிப் போயிட்டான். நானே ஜஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கலாம் சில நேரம் நினைச்சியிருக்கேன். நான் பண்ண சபதத்தை நானே மீறுறதா? என்கிறதா எண்ணம் தான் என்னை தடுத்துருச்சு எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு    உண்டு என அப்பா,  அம்மாவைப் பாராட்டி னார்.

நலந்தா செம்புலிங்கம்
29.08.2018   .

Saturday 18 August 2018

66 காசு பெட்ரோலும் ஐந்து இலக்க பண வீக்கமும்


66 காசு பெட்ரோலும் 

ஐந்து இலக்க பண வீக்கமும்




        66 காசுக்கு ஆமாம் வெறும் 66 காசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு நாட்டில் விற்கப்படுகிறது என்றால் அதுவும் ஒரு உண்மையான தகவல் என்றால் அச்செய்தியை என்னவென்று சொல்வது?

          வயிற்றெரிச்சலில் பெட்ரோலை வார்க்கும் செய்தி என்று தானே சொல்ல வேண்டும்?

           அண்மையில் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கும் நாடுகளையும்  அந்தந்த நாட்டில் நிலவும் பெட்ரோலின் விலையை ரூபாய் மதிப்பிலும் தந்தி தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது.

5     நைஜீரியா                ரூ 23.97
4    குவைத்                      ரூ 23.38
3     சூடான்                       ரூ 22.66
2     ஈரான்                         ரூ 19.33
1    வெனிசுலா               ரூ  0.66  (ஆம் 66 காசு தான்)

கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தை குறைந்தாலும் நமக்கு என்னவோ பெட்ரேரல் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.  ஆகவே நாம் வயிற்றெரிச்சல் படாமல் இருக்க முடியாது.

           இந்த ஐந்து நாடுகளும் கச்சா எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் தான்.
அதனால் அவர்கள் குறைவான விலையில் விற்க முடியும் .  19 ரூபாயிலிருந்து 24 ரூபாய் வரையிலான விலை என்பது அந்தந்த நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பொருத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.  

          மற்ற நான்கு எண்ணெய் வள நாடுகள் சாராசரியாக 22 ரூபாய் 34 காசுக்கு விற்கும் போது வெனிசுலா மட்டும் வெறும் 66 காசுக்கு விற்கிறது? அதாவது மற்ற எண்ணெய் வளநாட்டு விலையில் 33 இல் ஒரு பங்கு விலைக்கு வெனிசுலா பெட்ரோலை எப்படி விற்க முடியும்?          

          வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாய் கணக்குப் படி 66 விற்கப்படுவது உண்மை தான்.  நம் நாட்டில் 81 ரூபாய் மதிப்பிலுள்ள பெட்ரோல் வெனிசுலா நாட்டில் நமது ரூபாய் 66 காசுக்கு விற்கப்படுகிறது ஆகவே அங்கு 122 பங்கில் ஒரு பங்கு விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என நாம் நம்பினால் அது மாயை. 


Flag of Venezuela
          உலகெலாம் நிலவும் பெட்ரோல் விலை நிலவரத்தை ஆய்வு செய்யும் தந்தி தொலைக் காட்சிக்கு அந்த வெனிசுலா நாடு உலக ஊடகங்களில் எந்தக் காரணத்திற்காக தலைப்புச் செய்தி ஆகிறது என்பது தெரியாதா? எனக்கே வெனிசுலா ஐந்து இலக்க பணவீக்கத்திற்காகத் தான் தலைப்பு செய்தி ஆகிறது என்பது தெரியும் போது தந்தி தொலைக்காட்சிக்குத் தெரியாதா?
20000 Bolivar Currreny

         வெனிசுலா 34714 % பணவீக்கத்தில் வதைபடும் நாடு

.           
              17.08.2018 தேதியன்று, எகனாமிக் டைம்ஸ் இணைய தளத்தின் விவரப்படி ஒரு அமெரிக்க டாலரை வெனிசுலா நாட்டு பணமான Venezuelan Bolivar (VEB) கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு அந்த வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும் தெரியுமா? 24,88,32,029  வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும்.  ஆம் 24 கோடி 88 லட்சம் 32 ஆயிரத்து 29 வெனிசுலேவியன் போலிவர் கொடுக்க வேண்டும்.
       
                 இந்திய ரூபாய் கொடுத்தது ஒரு டாலர் வாங்க வேண்டுமென்றால் 70 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும்.

                                     
USD 1.0   =  VEB   24,88,32,029.6600 

    Rs 70/-   =  VEB   24,88,32,029.6600

    Rs 0.66 =  VEB  23,46,130.56



ஆக ஒரு வெனிசுலேவியக் குடிமகன் இந்தியக் காசு 66 காசுகளை  அவன் நாட்டு போலிவர் கொடுத்து வாங்க வேண்டுமென்றால் அவன் 23 லட்சம் 46 ஆயிரம் 130 போலிவர் கொடுத்து வாங்க வேண்டும்.



                     மேற்சொன்ன கணக்குப்படி ---
                               "காசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு நாட்டில் விற்கப்படுகிறது " --

என்ற செய்தியை வேறு மாதரியாகவும் சொல்லலாம்

                   "கச்சா எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில்                
                  அந்நாட்டு நாணய மதிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோலின் 
                   விலை 23 லட்சும் போலிவர்"  ---- 

                         தந்தி தொலைக்காட்சி சொல்லுமா? ஒரு போதும் சொல்லாது.  அப்படிச் சொன்னால் வெனிசுலா நாட்டில் வேண்டுமானால் மக்கள் அரசின் மீது கோபப்படுவார்கள், இந்தியாவில் எந்தச் சலனமும் ஏற்படாதே?
                               

                    அந்த நாட்டின் மிக மிக மோசமான பண வீக்கத்தை வைத்து கொண்டு போட்ட மாயக் கணக்கு தான் இந்த மாயத் தோற்றை ஏற்படுத்துகிறது.
                        
                         இது போன்ற மாயையைகளை அறுக்க வேண்டிய ஊடகங்கள்,  அவற்றை வளரக்கின்றன.

                         சமூக ஊடகங்கள் தான் பொய்யான செய்திகள் திரிப்பு செய்திகளை எல்லாம் வெளியிடுகின்றன என்று கருப்படுகிறது.  ஆனால் உண்மையின் அடிப்படையிலேயே மாயச் செய்திகளை உருக்குவதில் நாங்கள் தான் வல்லவர்கள் என்று தந்தி தொலைக்காட்சி நிலைநாட்டிவிட்டது.

நலந்தா செம்புலிங்கம்
17.08.2018


Wednesday 15 August 2018


சுதந்திரத்திற்கான போராட்டங்கள்: 

  

Many Jobs will be lost due to Artificial Intelligence 
Corruption dominates in politics & economy




















 நேற்று 
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற! 


இன்று

 ஊழலில் இருந்து விடுதலை பெற! 

                                        நாளை 
 இயந்திரங்களிடமிருந்து விடுதலை பெற!


                                                                                                          நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                                       15.08.2018












Sunday 12 August 2018

பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !

 பெரியார் கண்ணில் படாத சீர்திருத்தங்கள் !


                    உண்மையை நிலைநாட்டுவது எளிதல்ல.  உண்மை உண்மையாக மட்டுமே இருப்பதால்  அது எவருடைய நோக்கத்தையோ கோட்பாட்டையையோ வேட்டகையையோ நிறையேற்றும்  கருவியாக இருப்பதில்லை.  

                    ஆகவே உண்மையில்  நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் தான் நாம் நிலைநாட்டிக் கொள்கிறோம்.

                   ஆரியர்கள் பார்ப்பனர்கள் ஆகியோர் தம்மைக்  கடவுளின் பிரதிநிதிகளாக முன்னிலைபடுத்திக் கொண்டு திராவிடர்கள் தமிழர்கள் எனும் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் என்று கருத்து வலுவாக நிலைநாட்டுப்பட்டுவிட்டது. 




https://www.youtube.com/watch?v=akjWdelWzM8


                    எங்களூரில்  கோட்டையம்மன் கோவில் திருவிழா 23.07.2018 முதல் 06.08.2018 (ஆடி மாதம் 7ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை) கோலாகமாக நடந்தது.  இது எங்களூரின் மிக முக்கியமான திருவிழா. எங்களூரின் அருணகிரிப் பட்டிணம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவிலும்  ஆயிரக் கணக்கானோர் பூத்தட்டு, பால்க் குடம் எடுப்பார்கள். இதைப் போல நகரின் வெவ்வேறு பகுதிகளில் பல திருவிழாக்கள் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.  எங்களூர் என்றில்லை  தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் முத்துமாரியம்மன் திருவிழாக்களும் முனீஸ்வரர் திருவிழாக்களும் நடந்த வண்ணம் உள்ளன.

                     இது போன்ற திருவிழாக்களில் பொங்கலிடுவது, மாவிளக்கு வைப்பது போன்றவற்றோடு அருச்சனை செய்யவும் பக்தர்கள் அலை மோதுவார்கள்.  அருச்சனைக் கூடையை பூசாரியிடம் கொடுப்பதற்கே தள்ளுமுள்ளாக இருக்கும்.  அருச்சசனை செய்த பிறகு வாங்குவதற்கு அதை விடக் கூடுதலாக        சிரமப்படவேண்டியிருக்கும்.  

கோட்டையம்மன்
              அருச்சனையை எப்படிச் செய்வார்கள்? சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்வார்களா? ஒரு போதும் இல்லை, தமிழிலும் மந்திரம் சொல்ல மாட்டார்கள்.  பிறகு பிரஞ்சு மொழியில் தான் அருச்சனை செய்வார்களோ என கேட்காதீர்கள்.  பூசாரி ஒரு மொழியிலும் அருச்சனை செய்யமாட்டார்.    அருச்சனை மொழி மனமொழி தான், அதுவும் பக்தரின் மனமொழி தான்.  பூசாரி அரச்சனைக் கூடையில் உள்ள தேங்காயை உடைத்து சன்னதியில் படைத்து தீபம் காட்டிவிட்டு தருவார் அவ்வளவு தான்.  அந்தப் பூசாரி விபூதியை நீட்டினால், அதனை பவ்யமாக வலக்கையில் வாங்கிக் கொள்வதோடு பெரும்பாலான பக்தர்கள் அமைதி கொள்வதில்லை, நெற்றியையும் காட்டுவார்கள்.  பூசாரியும் பக்தர்கள் நெற்றியில் விபூதியைப் பூசிவிடுவார்.

                         அந்தப்  பூசாரியும் -- இறை நம்பிக்கை இல்லாமல் வழிபாட்டு முறையிட்டீல் தலையிடுவோரின் அங்கீகரம் பெற்ற -- தமிழர் தான்.  இதன் மூலம் தமிழன் கருவறைக்குள் போய்விட்டான்.  சமஸ்கிரதம் வழிபாட்டு மொழியாக இல்லை.  

                         இவையெல்லாம் காமராசர் காலத்திலோ கலைஞர் காலத்திலோ அம்மா காலத்திலோ ஏற்றபட்ட சீர் திருத்தங்கள் அல்ல.  பெரியாரினால் ஏற்பட்ட சீர்திருத்தங்களும் அல்ல.  பெரியார் பிறப்பதற்கு முந்திய காலத்திலிருந்து வழக்கில் இருக்கும் நடைமுறை தான்.  ஏனோ இந்த சீர்திருத்தங்கள்  பெரியார் கண்ணில் படவில்லை.

சுத்தானந்த பாரதியார்

                              இந்த சீர்திருத்தங்களுக்கு மேலே ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம், தேவகோட்டை கோட்டையம்மன் கோவிலில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னரே அரங்கேறியிருக்கிறது.  அப்போது கோட்டையம்மனுக்கு ஆடு பலியிடும் பழக்கம் இருந்திருக்கிறது.  அதை நிறுத்தியவர் ஒரு பார்ப்பனர் தான். தமிழிற்கும்  சுதந்திரப் போராட்டத்திற்கும் பெரும்பணியாற்றிய சுத்தானந்த பாரதியார் தான் அந்தப் பார்ப்பனர்.  பல்லாண்டுகளாக வழக்கில் இருந்த பலிகடா வழக்கத்தை எப்படி அந்த ஒற்றை மனிதர் நிறுத்தினார்?  மிகவும் எளிதாகச் செய்துவிட்டார்.  பலி பீடத்தில் ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன் இவர் கழுத்தை நீட்டிவிட்டார்.  என் கழுத்தை வெட்டிவிட்டு ஆட்டை வெட்டுங்கள் என்றார். அத்துடன் ஆடு பலியிடம் பழக்கம் நின்றுவிட்டது.
சுத்தானந்த பாரதியார்

                           இந்தப் பதிவை 09.08.2018 அன்றே எழுதிவிட்டேன். சுத்தானந்த பாரதியாரின் படத்துடன் தான் இப்பதிவை வெளியிட வெளியிட வேண்டுமெனவும் உறுதி கொண்டேன். அவர் படத்தில் தேடுவதிலும் அல்லது தேட நேரம் ஒதுக்கமுடியாமல் காலம் கழிந்ததிலும் மூன்று நாட்கள் ஓடிவிட்டன.  

                   இந்த மூன்று நாட்களில் வெகுநாட்களாக நெஞ்சில் ஒரு பழைய சிந்தனையும்  ஒரு எதிர்பாராத படமும் கிடைத்தது.

                   அந்தப் பழைய சிந்தனை:  50 ஆண்டுகளுக்கு முன்னர்  தைப் பூசத் திருவிழாவிற்காக  செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பழநிக்குப் பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் சில நூறு பேர் தான்.  இன்று செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் நடக்கின்றனர்.  தமிழகமெங்குமிருந்து பல லட்சம் பேர் பழநிக்குப் பாத யாத்திரையாக நடந்து வருகின்றனர்.  இதைப் போல எல்லா வகையான வழிபாடுகளும் பல்கிப் பெருகியிருக்கின்றன.  இது திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு பிரச்சாரம் என்ற பேரில் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் எதிர்விளைவு எனக் கருதுகிறேன்.     

              என்னுடைய இந்த மாபெரும் ஆய்வு முடிவைத் தவிடு பொடி ஆக்கிவிட்டது இந்த மூன்று நாள் இடைவெளியில் எதிர்பாராமல் கிடைத்த படம்..  அந்தப் படம் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்களின் சமாதியில் பால் ஊற்றிய படம் தான்.  நான் இதுவரை பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் இந்து மதத்தினரிடம் தான் ஒரு பக்தி வேகத்தை ஊட்டியது என நினைத்திருந்தேன்.  கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் தாமே முன்வந்து பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் பகுத்தறிவு பிரச்சாரகர்களிடமும் பக்தி வேகத்தை ஊட்டியிருக்கிறது என சான்றளித்துள்ளார்.


           
            கணித மேதை ராமானுஜம் எவ்வளவு சிக்கலான கணக்கிற்கு நொடிப் பொழுதில் விடை தந்துவிடுவார்.  பல கணித சூத்திரங்களைப் பயன்படுத்தி படிப்படிப்பாகத் தான் அந்தக் கணக்குப் புதிரை விடுவித்து விடையைக் கொண்டு வர முடியும்.  ஆனால் கணித மேதை அந்தப் படிநிலைகளையெல்லாம் விளக்காமல் நேரடியாக விடையைத் தருவார்.


              என்னை வெகு காலம் வாட்டிக் கொண்டிருக்கும் பகுத்தறிவு பிரச்சாரத்தின் விளைவு எனும் புதிருக்கான விடையை கவிப்பேரரசு கணித மேதையைப் போல நேரடியாக விடையளித்திருக்கிறார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றி.

              
நலந்தா செம்புலிங்கம்
12.08.2018

Friday 3 August 2018

சுயமரியாதைக்குச் சவால் விடும் சுயநிதிப் பள்ளி

சுயமரியாதைக்குச் சவால் விடும் சுயநிதிப் பள்ளி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^  ^^^^^^^^ ^^^^^^^^^^^ ^^^^^^^^  ^^^^^^^^ ^^^^^^^^^^^
             பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்றான் பாரதி.
              
             ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமத்திலும் (அல்லது ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும்) ஒரு  பள்ளி என தமிழகமெங்கும் ஆயிரக்கணக்காக  கோவில்களை  எழுப்பினார் காமராசர்.

               தமிழகத்தில் தொடக்கக் கல்வியின் இன்றைய  நிலை என்ன? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில பள்ளிகளே செம்மையாக இயங்குகின்றன.  பெரும்பான்மையான பள்ளிகளின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.  இந்த அவல நிலை தான் தனியார் பள்ளிகள்  வளர்வதற்கு செழிப்பதற்கு கொழிப்பதற்கு உரமாகின்றன.
https://www.youtube.com/watch?v=xpTQmPQTTDI

                  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகுதோடு, தனியார் பள்ளிகள் மாநகரங்கள் நகரங்கள் மட்டுமின்றி பட்டி தொட்டியெங்கும் வலுவாக காலூன்றிவிட்டன.

       காரைக்குடியில் கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்  கல்லூரி, பொறியியற்  கல்லூரி, பாலிடெக்னிக், உடற்பயிற்சிக் கல்லூரி என அனைத்துத் துறைக்  கல்லூரிகளையும் எழுப்பியவர் வள்ளல் அழகப்பர். அவர் 1947 ஆம் ஆண்டில் கலைக் கல்லூரியுடன் இந்தக் கல்வி வேள்வியைக் காரைக்குடியில் தொடங்கினார்..  உடற்பயிற்சிக் கல்லூரியை அவர் மரணப்படுக்கையிலிருந்து எழுப்பினார்.

         அதற்கு முன்னரே வள்ளல் அழகப்பர் பல பல்கலைக் கழகங்களுக்கும்  லட்சக் கணக்கில் (1935 -1947 கால கட்டத்தில்) வாரி வழங்கினார். 1943 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் இரண்டாம் மூன்றாம் பொறியிற்  கல்லூரிகளான  சென்னை ACCET கல்லூரியையும்    மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற்  கல்லூரியையும் தலா ஐந்து லட்சம் கொடையளித்து தோற்றுவித்தார்.   கல்வி கடைக் கோடி மாணவனுக்கும் கிடைக்க வேண்டுமென்பது  அந்த வள்ளலின் நோக்கம். 
          
                 இன்று பள்ளிகளை நடத்துவோரில்   பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளின் குறைபாடுகளைத் தொழில் வாய்ப்பாகக் கருதுபவர்கள் தாம்.  இவர்களிடம் கல்வியைப் பற்றிய சிந்தனையோ கடைக் கோடி மாணவனைப் பற்றிய அக்கறையையோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.  

             
           கல்வித் துறையில் வணிகம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அந்த வணிகமும்  பெரும்பாலும் வணிக நெறிப்படியும் கூட  நடப்பதில்லை.
          
            கல்வி நிறுவனங்களின் லாப நோக்கத்தைப் பொதுமக்கள் அறிந்திருந்தாலும்  தனியார் பள்ளி மோகம் சற்றும் குறைவதாகத் தெரியவில்லை.  பெற்றோர்கள் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கத்தை அறிந்தும் வரிசையில் நிற்பதால் தான் விதிமுறை மீறல்கள் சர்வ சாதாரணமாகவும் ஒளிமறைவின்றியும் அரங்கேறுகின்றன.

                   பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட 50%  முதல் 100% விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன.  சட்டத்திற்கு அப்பாற்பட்ட கட்டணங்கள் என்பதால் ரசீது என்ற ஒன்றிற்கு வேலையே இல்லை.  மாணவர்களின் பெற்றோர்கள் அதனையும் வரிசையில் நின்று கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.   அதாவது அத்துமீறலைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களே ஒத்துழைக்கிறார்கள்.

                 ஆசிரியர்களின் கல்வித் தகுதி,  ஆசிரியர்களின் ஊதியம், இடவசதி, கட்டிட விதிமுறைகள் என எல்லாவற்றிலும் விதிமுறை மீறல்கள் இயல்பாகிவிட்டன.

                   தனியார் பள்ளிகளுக்கிடையில் போட்டி நிலவத் தான் செய்கிறது.  இந்தப் போட்டியினால் மாணவர்களுக்கான சில வசதிகளும் திறன் வளர்ப்பு பயிற்சிகளும் சற்று கூடுமே தவிர கட்டணங்கள் குறைவதில்லை.  அதனால் அந்தப் போட்டிகளும் கூட மக்களுக்குப்  பெரிதாகப் பயனளித்துவிடவில்லை.
           
            அடுத்த வீட்டுக்காரன்  தன் பிள்ளையை லட்ச ரூபாய்  பள்ளியில் சேர்த்தால் நான், என் பிள்ளையை ஐம்பதாயிரம்  ரூபாய்  பள்ளியிலாவது சேர்க்க வேண்டுமென்ற   நுகர்ச்சி வெறி மக்களிடம்  வேர்விட்டது தான்  கல்வித் துறை சுயநிதி முதலாளிகளின் வேட்டைக் காடாகியதற்குப் பெரிதும் காரணம்.
            
            வேட்டைக்காடு என்றாகிவிட்டது, பிறகு அந்தக் காட்டின் ராஜா சர்வாதிகாரம் செய்யாமலா இருப்பார்?

             சென்னையில் ஏறத்தாழ ஒரு சுயநிதிப் பள்ளியில் அது தான் நடந்திருக்கிறது.
  
           ஸ்ரீமதி சுந்தரவல்லி  மெமோரியல் ஸ்கூல் மற்றும் ஸ்ரீ சாரதா செக்கெண்ட்டரி ஸ்கூல் என்ற பெயர்களில் சென்னை குரோம்பேட்டை, பெருங்களத்தூர் மற்றும் கோபாலபுரத்தில் மூன்று பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றுள் முதல் பள்ளி 1986 ஆம்  ஆண்டு தொடங்கியிருக்கிறது.  மூன்று பள்ளிகளிலும் மொத்தம் பத்தாயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள்.  

             இப்பள்ளிகளின் நிறுவனர் சந்தானம் சராசரிக் குடும்பத்தில் பிறந்தவர் தான்.  அவர் 1965 ஆம் ஆண்டில், தமது 19 ஆம் வயதில் ஆறு ரூபாய் நாள் சம்பளத்தில் தொடங்கியவர் தான்.  இவர் ரியல் எஸ்டேட் துறையிலும் வெற்றி பெற்றவர் தான்.

                தனியார் பள்ளிகள் புற்றீசல்களாக பெருக்கெடுத்த பிறகும், அந்தப் போட்டியின் காரணமாக அப்பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்க தவியாய்த் தவிக்கின்ற போதும், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களின் பார்வையில் நிலவரம் தலைகீழாய்த் தான் இருக்கிறது.

               தாம் விரும்பும் பள்ளியில் சேர ஏராளமான மாணவர்கள் முயற்சிப்பதாகவும்  இடம் கிடைப்பது அரிது என்றும் கருதி நமக்கு இடம் கிடைக்குமா என்ற தவிப்போடும் பதற்றத்தோடும் இருப்பார்கள்.
              இந்நிலையில்  பத்தாயிரம் பள்ளிகள் படிக்கும் இப்பள்ளிகளின் நிர்வாகி  திடீரென இந்தப் பள்ளிகளையெல்லாம் மூடி விடுவேன்  என்றால் பெற்றோர்கள் பதறாமல் என்ன செய்வார்கள்.  அவர் உள்ளபடியே பள்ளிகளை மூடுவதற்காகச் சொன்னாரா? அல்லது பெற்றோரகளை மிரட்டுவதற்காகச் சொன்னரா என்பது அவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே புரியும்.  (https://www.thehindu.com/news/cities/chennai/parents-protest-against-schools-demand-for-2-lakh-deposit/article24478296.ece)




         






  அந்த வெற்றிகரமான பள்ளிகளின் நிர்வாகி மிரட்டுமளவிற்கு அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?  அவர் ஒவ்வோரு மாணவரிடமும் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டார், அவ்வளவு தான். அந்தப் பெற்றோர்களில் சிலர் அந்தத் தொகையை கட்டாததோடு வீதியில் இறங்கிப் போராடவும் ஆரம்பித்துவிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் பள்ளிகளை மூடிவிடுவேன் என மிரட்டலைவிடுத்தார்.





             33 ஆண்டுகள் சிறப்பாக நடந்த பள்ளியில், பெருமைக்குரிய பள்ளியாக  திகழ்ந்த பள்ளிக்கு  ஏன் கல்வியாண்டு தொடங்கிய பிறகு ஒவ்வொரு மாணவனிடமும் இரண்டு லட்சம் ரூபாய் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது?  இந்தப் பள்ளியின் செலவைவிட வரவு கூடுதலாக இருந்தது வந்ததால் தான் பள்ளி படிப்படியாக முன்னேறியிருக்கிறது.  இந்த ஆண்டு பள்ளிக் கட்டணம் குறைக்கப்படவில்லை, மாணவர் எண்ணிக்கை குறையவில்லை.  
             
               இந்தப் பள்ளியின் உபரி நிதி வேறு பக்கம் திசை திருப்பப்பட்டிருந்தால் தான் இப்படி ஒரு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்க கூடும்.

               இது ஒரு பள்ளி எதிர்கொள்ளும்  சிக்கல் தான் என்றாலும் மற்ற பள்ளிகளும் இந்தச் சிக்கலுக்கு ஆட்படக் கூடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

              இந்தப் பள்ளி நிர்வாகத்தின் போக்கிற்கு   மெல்ல மெல்ல எதிர்ப்பு பெருகியதும் அந்த உத்தரவு திரும்பப் பெற்றுக் கெண்டார். ஆனால் அது குறித்து  பெற்றோர்களுக்கு 23.07.2018 ஆம் தேதி எழுதிய கடிதத்தை (http://www.ssmetrust.in/pdf/letter_23072018.pdf)  அந்த நிர்வாகி      

Withdrawal of Enhancement of Refundable Caution Deposit Proposal, Refund of Caution Deposit already collected and Withdrawal of all existing facilities, both for Students and Parents that are not mandated in the Central / State Government Rules and Regulations – Intimation – Reg.        ( திரும்பப் பெறத்தக்க வைப்புத் தொகையை அதிகரிக்கும்  திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் மத்திய மாநில வழங்கச் சொல்லாத ஆனால் இதுவரை வழங்கிய வரும் அனைத்து வசதிகளையும் திரும்பப் பெறுதுல்.)  

என்று தான்  ஆரம்பிக்கிறார்.      
                 33 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறவர், சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன் வைப்புத் தொகையை அதிகரிக்கிறார்.  அதற்கு எதிர்ப்பு வந்ததும் அத்திட்டத்தை திரும்பப் பெறுகிறார்.  திரும்பப் பெறுகையில் இதுவரைக் கொடுத்து வந்த பல வசதிகளையும்  ஒழிக்கிறார்.

                  மொத்தம் 52 வசதிகளை ஒழிக்கப் போவது இக்கடிதத்தின் 6 வது பத்தியில் பட்டியலிடுகிறார்.

                  அந்த 52 வசதிகளும் அரசு மாணவர்களுக்கு வழங்கச் சொல்லும் குறைந்த பட்ச வசதிகளுக்கு அப்பாற்பட்டது தானாம். நாங்கள் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது என்றால் நாங்கள் ஏன் கூடுதல் வசதி கொடுக்க வேண்டும் என்பது அவருடைய வாதமாகத் தெரிகிறது.


                  இப்பொழுது நிறுத்தப்படவுள்ள அந்த 52 வசதிகளில் சில

19. Sloka recitation and award of certificate will be totally dispensed with.
35. The School Security arrangement will also be considerably reduced.
42. The School Fee will be collected only in cash, in the School Office on Monthly basis, on issue of receipt and not on quarterly basis or other means.
48. All the existing World-Class State-of-the-art toilet facilities will be at the minimal level as available in the Government Schools.   

               இப்பள்ளி ஏன் மேற்படி 19வது வசதியை  இதுவரை வழங்கி வந்தது என்பது தெரியவில்லை.  ஆனால் அது மிக முக்கியமான வசதி தான்..  அந்த ஸ்தோத்திரம் ஒப்புவித்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழ் வழங்கியிருப்பார்கள் போலும், அது நிறுத்தப்படும் என்கிறார்கள்.  ஒரு சான்றிதழ் தயாரிக்க எவ்வளவு செலவாகும்? 100 ரூபாய் செலவாகுமா?

                 மேற்படி அதிகப்படியான 52 வசதிகளைத் தொடர்வதற்கு  இரண்டு லட்ச ரூபாய் வைப்பு நிதி தேவை என்ற நிலையில்  மாணவர்கள்  அந்த வைப்பு நிதியை செலுத்தாத போது அவற்றைத் தொடர முடியாது தான். ஆனால் இந்த 19 ஆம் எண் வசதி மிகவும் முக்கியமானது என்பதாலும் அதற்கு 100 ரூபாய்க்குள் தான் செலவாகும் என்பதாலும் அந்தத் தொகையை வைப்பு நிதியாக அல்லாமல் கட்டணமாகவே வசூலிக்கலாம் எனக் கருதுகிறேன்.  அவ்வாறு ஸ்தோத்திரம் ஒப்புவித்தலுக்குரிய கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமாவது அந்த வசதியைத் தொடரவேண்டுமென நிறுவனரின் பாத கமலங்களில் பணிந்து வேண்டுகிறேன்.

48. All the existing World-Class State-of-the-art toilet facilities will be at the minimal level as available in the Government Schools.   

           இது ஒருபுறம் அரசுப்பள்ளிகளை கேலி செய்கிறது, நான் கேட்கும் பணத்தை தராதவர்களுக்கு அந்த வசதி போதாதா? எனப் பெற்றோர்களையும் கேட்கிறது. இதைக் கூட இவர் மென்மையாக     
        
            “ அரசுப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு தான் சுகாதார வசதிகளை வழங்குவோம்என்று கூட இவர்கள் சொல்லலாம்.

               ஆனால் இவர் தெளிவாகஅரசுப் பள்ளிகளில் உள்ள அளவு தான் சுகாதார வசதி வழங்கப்படும்என்கிறார்.  

               பல அரசுப் பள்ளிகளில் சுகாதார வசதி  அவல நிலையில்  இருக்கலாம்நானும் அரசுப் பள்ளிகளில் உள்ள சுகாதார வசதி ஒழுங்காக இருக்கின்றன என  உத்தரவாதம் தரமாட்டேன்.  ஆனால் ஒரு அடிப்படை வசதியை மறுப்பது, இதுவரை இருந்த அடிப்படை வசதியை மறுப்பது என்ன நியாயம்? என்ன மனிதாபிமானம்?  இது தான் இவரை நம்பி பிள்ளைகளை பெண்பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு இவர் காட்டும் நன்றியா?

              இந்த 14 பக்கக் கடிதத்தில் 3 பக்கத்தின் கடைசி பத்தியில்

The School will follow the rules and regulations of both the Central and the State Government and will run exactly similar to that of Panchayat Board / Municipality / Corporation / Government Schools in all respects, which cannot be unlawful at any stretch of imagination
                   என்கிறார். ,இது மக்களாட்சிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடத்தும் பள்ளிகளின் சுயமரியாதைக்கு நேரடியாக விடப்படும் சவால்.  இந்த சவாலை அரசு நடுநிலையோடு  எதிர் கொள்ள வேண்டும்.

                     அரசுப் பள்ளிகளின் குறைபாடுகள் தான் தனியார் பள்ளிக்கு உரமாகின்றன என்பது நாணயத்தின் ஒரு பக்கம் தான்.  தனியார் பள்ளிகள் புற்றீசல் படையெடுப்பு அரசுப் பள்ளிகளின் பாதையை மறிக்கின்றன என்பது நாணயத்தின் இன்னொரு பக்கம்.

                       மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுரண்டும் விதிமீறல்  தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கலாம்.   அப்பள்ளிகளின் மாணவர்களுக்கு கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம், ஆசிரியர்களுக்கு ஊதியத்தையும் கணிசமாகக் கூட்டலாம்.  இது களையெடுத்தலைப் போன்றது தான்.

                        அரசு களையெடுத்தால் மட்டும் போதாது, பயிரையும் வளர்க்க வேண்டும்.  அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும்  மேம்படுத்துவது, உலகத் தரத்திற்கு உயர்த்துவது தான் பயிர் வளர்ப்பதாகும். கடந்த சில மாதங்களாக கல்வித் துறையிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ள, இன்னும் பல நல்ல செய்திகள் வர வேண்டியுள்ளது, விரைவில் வரும் என நம்புவோம்!

                                                                                                                             நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                                                     03.08.2018