Thursday 28 February 2019

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

         எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!

         
கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது, செயற்பாட்டில் சாத்தியமா?

         
எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறதல்லாஅதனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாம் என எவ்வளவு பெரிய மேதை எப்படி விளக்கினாலும் அது கோட்பாட்டின் விளக்கம் தான்.  உள்ளபடியே 5, 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் கூட ஆலோசனை நிலை வரையில் தான் அனவரும் பங்கேற்கலாம், முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடம் மட்டும் இருந்தால் தான் அமைப்பு சீராக இயங்க 
முடியும். கணவன் மனைவி இடையே கூட யாராவது ஒருவர் விட்டு கொடுத்துப் போகவேண்டும் என்றே வழிகாட்டப்படுகிறது.  ஆகவே "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!" என்பது ஒரு சிறந்த கோட்பாட்டின் அலங்கார முழக்கம் தான். 

         ஆனால் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே" என்ற அந்த அலங்கார முழக்கத்தையே அச்சுப் பிசகாமல் அமலாக்கிவருகிறது ஒரு அதிசய வகுப்பறை!!        

       
அது தான் நாட்டின் முன்மாதிரிப் பள்ளிகளுள் ஒன்றாகத் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் இந்த ஆண்டிற்கான சிறந்த வகுப்பறை விருதினைப் பெற்ற 9A வகுப்பறை.

       இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா 21.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பள்ளியின் பல்வேறு சாதனையாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   சிறந்த வகுப்பறைக்குரிய விருது விருதுகளின் விருது என்றே அறிமுகப்படுத்தப்பட்டது..  21 வகுப்புகளில் 7A & 9A  ஆகிய இரண்டு வகுப்புகள் மட்டுமே தேர்வு நிலையை (NOMINATION) எய்தியிருந்தன.  இந்த இரண்டு வகுப்பறைகளைப் பற்றியும்  ஒலி ஒளிப் பதிவுகள் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டன.

           இந்த வகுப்பறை எங்கும் பொன்மொழிகள் எழுதி வைக்கப் பட்டுள்ளது. 
ஆனால் அவை வெறும் சுவர் அலங்காரமாக இல்லை. ஒவ்வொன்றிற்கும் 
  உள்ள  பின்னணியையும், அவற்றை மாணவர்கள் அணுகும் முறையையும், ஒலி ஒளிப் பதிவில் விளக்கினார்கள்.  அந்தப் பொன்மொழி அட்டைகளுள் ஒன்று MAGIC WORDs  இந்த மாயச்  சொற்களைப் பயன்படுத்தினால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மாயமாகும் என்கிறார்கள் அந்த சொற்கள்.Excuse Me, Sorry. Please, Thank you, Welcome. என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்கிறது 9A  வகுப்பறை.
       
            இந்த வகுப்பறையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர்  Brother  Sister என்று அழைத்துக் கொள்கிறார்கள்.  இது போன்ற அணுகுமுறைகள்  நற்பண்புகளை உரிய பருவத்தில், பதின்பருவத்தில் இருக்கும் இந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே
விதைக்கிறது.

            உடல் நலம் பேணுதலில்  நீர் அருந்துதலுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. இந்த வகுப்பில் மாணவர்கள் ஒழுங்காக நீர் அருந்துகிறார்களா  என்பது  கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது.  பல மாணவர்கள் குறிப்பாக மாணவியர் பள்ளியில் இருக்கும் பொழுது ஓய்வு அறைக்குச் செல்லத் தயங்குவார்கள்.  இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணி்க்கை மிக மிக அதிகமாக இருப்பதால் ஒய்வு அறை பயன்பாட்டிற்கே வகுப்புவாரி நேர ஒதுக்கீடு உள்ளது.  இந்த நெருக்குடி காரணமாக தயக்க மனப்பான்மை உள்ள மாணவர்கள் ஒய்வு அறைக்கு செல்லவதை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  ஆனால் 9 A வகுப்பு ஆசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி அதற்கு துரும்பு அளவும் இடமளிப்பதில்லை

         தம் மாணவர்களின் மாணவியர்களின் உடல் நலத்தையும் குறிப்பாக பதின்பருவ நிலையையும் கருத்தில் கொண்டு வகுப்பு ஆசிரியயை ஜாக்குலின் கனிமொழி மாணவர்கள் இவற்றை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாணவர்களுள் ஒருவர் மூலமாகவே கண்காணிக்கிறார்.  அவரே கண்காணிப்பதை விட மாணவர் ஒருவர் மூலமாக கண்காணிக்கும் போது தயக்கங்கள் எளிதில் கரைந்துவிடும்.

          உரிய அளவு நீர் அருந்துதல், ஒய்வு அறை பயன்படுத்ததுல், இனிய சொற்களை கையாளுதல், சீருடையை முறையாக அணிதல், வீட்டுப்பாடம் செய்தல், பெற்றோர் ஒப்புகை பெறுதல், போட்டிகளில் பங்கேற்றல் .......    எனப் பல நற்பண்புகளை எல்லாம் இனம் கண்டு ஒவ்வொரு பண்பையும் எல்லா மாணவர்களும் கடைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பையும் ஒவ்வொரு பண்பிற்கு ஒரு மாணவர் என மாணவர்களிடமே ஒப்படைத்துள்ளார் வகுப்பாசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி.
           
           அந்தந்தப் பண்பைக் கண்காணிக்கும் மாணவர் அந்தந்தப் பண்பிற்கு உரிய தலைவர். அதன்படி ஐம்பது மாணவர்களும் தலைவர் ஆகிவிட்டார்கள்.  ஆகவே  9A  வகுப்பறையில் உள்ளபடியே எல்லோரும் அந்த வகுப்பறையின் மன்னராகிவிட்டார்கள்.

         மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகவே மாற்றிவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் வணிகமயக் கல்வியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையில் கற்றல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது, பண்பாடு மிகுதியாகவும் உள்ளது.

           மிகச் சிலவாக உள்ள மிக நல்ல பள்ளிகளில் தான் கற்றல் அப்பாலும் மாணவர்களை  ஏதேனும் ஒரு நல்ல தடத்தில் வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.  அப்பள்ளிகளும் மாணவர்களை  சுய முன்னேற்றப் பயிற்சிகள், கல்வி சார்ந்த போட்டிகள் விளையாட்டு சார்ந்த போட்டிகளில் வழிநடத்துகிறார்கள்.  
              காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையோ மேலும்  ஒரு படி உயர்ந்து நிற்கிறது. 9A  வகுப்பறையோ தம்  மாணவர்கள், நற்பண்பு மிக்க வாழ்க்கையை இந்தப் பருவத்திலேயே வாழ்வதற்கு வகுப்பறையையே உயர் களமாக் கொடுத்திருக்கிறது..

            என் அறிவிற்கு எட்டியவரை இந்த நடைமுறை பண்பாட்டுப் பயிற்சிக்கு முன்னுதாரணம் இல்லை. ஆகவே இந்த நன்முறையை ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை என்றே அழைக்கலாம்.

          ஒவ்வொரு ஜாக்குலின் மாணவரும் இன்னொரு பண்பாளரையாவது உருவாக்குவார்.  ஆயிரமாயிரம் ஜாக்குலின் மாணவர்கள் ஒரு முன்னுதாரணமான சமூகத்தை படைப்பார்கள்.


நலந்தா செம்புலிங்கம்


28.02.2019








5 comments:

  1. இப்படிப்பட்ட அரிய முத்துக்கள் எப்பொழுதாவது மட்டுமே கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் முத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
  2. ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை வாழ்க!வளர்க!பரவட்டும் பள்ளிகளெங்கும். .இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மென்மேலும் உயர்க!நல்ல பதிவுகளை நாள்தோறும் பதிவு செய்துவரும் நலந்தாவின் நற்பணி தொடரட்டும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Great.... Keep up the good works.

    ReplyDelete
  4. நல்ல பழக்க வழக்கங்கள்.. மற்ற பள்ளிகள், வகுப்புகள் கடை பிடிக்கலாம் .. எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. வெற்று முழக்கமல்ல. வெற்றி முழக்கம்..

    ReplyDelete