Monday 24 September 2018

கோவைக்குப் பெருமை சேர்க்கும் ஜெகன்னாதன் மாஸ்டர்!

கோவைக்குப் பெருமை சேர்க்கும் ஜெகன்னாதன் மாஸ்டர்!
 ^^^^^^^^^^^^^^^^^^^   /////////////////////////      ^^^^^^^^^^^^^^^^^^^   ////////////////////////    ^^^^^^^^^^^^^^

              கோவைக்குப் புகழ் சேர்க்கும் பாரம்பரியமிக்க கிக்கானி பள்ளியில்  அண்மையில் (19.09.2018)   ஒரு விழா கோலாகமாக நடைபெற்றது. 

            அந்த விழா, சமூக நலம் விழையும் கூட்டமா?, இலக்கியம் இயம்பும் தமிழ்க் கூட்டமா? நெகிழ்வு மழையில் திக்குமுக்காட வைத்த குடும்பக் கூட்டமா? என வகைப்படுத்துவது எளிதல்ல. 

            நமது பெருமைக்குரிய பண்பாட்டிற்கு அடிவேரான குடும்பப் பாசம் தான் அந்த விழாவின் அடிநாதம்.  அவ்விழாவில் இலக்கியப் பொழிவுகள் கவரி வீசின. நல்லாசிரியர்களைக் கொண்டாட வேண்டும் எனும் சமூக நலம் தான் அந்த விழாவைஅலங்கரித்த சிம்மாசனம். அது தான்  தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் நினைவு விருதின் முதலாண்டு விருது வழங்கும் விழா.


ஜெகன்னாதன் மாஸ்டர்
                    
              கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் 1936 ஆம் ஆண்டில் பிறந்த  தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன்  தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளி, கிக்கானி பள்ளி, டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளி, சி.பி.எம் சகுந்தலா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியராக, உதவித் தலைமை ஆசிரியராக, தலைமை ஆசிரியராக  . எனப் பல நிலைகளில் பல ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்அவரிடம் 30, 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்றவர்களும் அவர் தம்முள் ஏற்படுத்திய தாக்கத்தை மகிழ்வோடு எடுத்தியம்புகின்றனர்.



              ஜெகன்னாதன் மாஸ்டர் என்று இன்றும் அன்போடு அவரது பழைய மாணவர்களால் நினைவு கூரப்படும் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் இந்த ( 2018 ஆம்) ஆண்டு பிப்ரவரி மாதம் தமது 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். அந்த இறுதி நாட்களிலும் குறிப்பாக அவர் நினைவிழந்த பொழுதிலும், அவர் இயல்பாக இருப்பதாகவே கருதி அவரிடம், அவர் குடும்பத்தினர்,  காட்டிய அணுக்கத்தை ஒரு மருத்துவர் விவரித்த போது மெய் சிலர்த்துப் போனேன்.


                அந்தப் பாசப் பிணைப்பை அவருடைய மகனும் மகள்களும், அவர் காலத்திற்குப் பிறகும்  அவருடைய நெஞ்சுக்கினிய வழியிலேயே வெளிபடுத்த தீர்மானித்தனர்.  தலைமை ஆசிரியர் ஜெகன்னாதனின் நெஞ்சுக்கினயது கல்வியும் கற்பித்தலும் தானே?

டாக்டர் பால வெங்கட்


             இன்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் நிலை ஒரு திரிசங்கு நிலை தான்.  பள்ளிக் கல்வியில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் எனும் இரு துருவங்களுக்கிடையில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  

             தனியார் பள்ளிகளில் முறையாக கல்வி அளிக்கப்படுவதாகவும். அவை நல்ல தரமாக இருப்பதாகவும் ஒரு தோற்றம் மக்கள் மனதில் வலுவாகப் பதிந்துள்ளது. ஆனால் கட்டணங்கள் தான் வரம்பு மீறும்.  உயர் நடுத்தர வகுப்பினருக்கே கையைச் சுடும்.
        
               அரசுப் பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு கொட்டிக் கொடுப்பதற்கு  நிகராக அவை கல்விச் சேவை அளிப்பதில்லை என்று ஒரு நிலை. அதனால் தான் வசதி வாய்ப்பு இல்லாத அடித்தட்டு மக்களுக்கும் கூட ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் தான் தம் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமெனத் தவிக்கின்றனர்.  இந்த இருள் நிலையிலிருந்து நாம் மீண்டு விடுவோம் என அங்காங்கே ஒரு சில நல்லாசிரியர்கள் அரிய நட்சத்திரங்களாக நம்பிக்கை அளிக்கிறார்கள்.  

           அரிதாக இருக்கும் அத்தகைய நம்பிக்கை நட்சத்திர ஆசிரியர்களை ஊக்குவித்தால் இன்னும் பல நம்பிக்கை நட்சத்திர ஆசிரியர்கள் உருவாகுவார்கள், அவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அரசுப் பள்ளிகள் மேன்மையுறும். அதன் விளைவாக சமூகத்திற்கு குறிப்பாக அரசுப் பள்ளிகளைச் சார்ந்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும்.  அதுவே தலைமை ஆசிரியர் ஜெகன்னாதனுக்கு பொறுத்தமான அஞ்சலியாக இருக்குமென அவரது குடும்பத்தினர் தீர்மானித்தனர்.  அத்தீர்மானத்தின் நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும்  அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் விருதும் 50,000 ரூபாய் பணமுடிப்பும் வழங்க முடிவு செய்தனர். அவ்விருதை இந்த ஆண்டே விருதை வழங்குவதென அதனையும் தலைமை ஆசிரியர் ஜெகன்னாதன் பிறந்த நாளான செப்டம்பர் 19 ஆம் நாளே வழங்குவதெனவும் முடிவு செய்தனர். முதலாண்டு விருதிற்கு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜாவும் திருச்சி மாவட்டம் பூவாளூர் திரு சதீஸ் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.


               இது வரை சொன்னது பாயிரம்! விழாவோ காவியம்!.
        
                                           
நேர்த்தியான அழைப்பிதழ்


         மிக நேர்த்தியான அழைப்பிதழே அமைப்பாளர்களின் அர்ப்பணிப்பையும் விழாவின் வீச்சையும் கட்டியம் கூறியது.   விழாவை ஜெகன்னாதன் மாஸ்டர் பணியாற்றிய கிக்கானி பள்ளியில் நடத்தியது ஒரு மூதாட்டி  தம் மக்கள் மருமக்கள் பேரன் பேத்தியரோடு தன் தாய் வீட்டிற்கு   பெருமித்தோடு வருதைப் போல அமைந்தது.  

          இந்த உவமை அழகை மெய்ப்பிக்கும்  வண்ணம்  ஜெகன்னாதன் மாஸ்டரின் பேத்தியர்களே  விநாயகர் துதியை மிக அருமையாகப் பாடினார்கள். அது  இறைவணக்கம்  என்ற நிலையைத் தாண்டி   குறுகிய கால அளவிற்குள் அமைந்த இசை நிகழ்ச்சியாகவே, இசைக் கருவிகள் துணையில்லாத  அற்புதமான இசை நிகழ்ச்சியாகவே களைகட்டியது.

திருக்குறள் நேசர் சி. ராஜேந்திரன் IRS


விருதாளர் பீட்டர் ராஜா

விருதாளர் சதீஸ் குமார்
திருமதி பர்வீன் சுல்தானா








            
             

                 
           

             விருது வழங்கும் விழாக்களில் பாராட்டுரை சிறப்புரை ஏற்புரைகளைத் தான் பார்க்கிறோம்  இந்த விழாவில் காணிக்கைவுரை என ஜெகன்னாதன் மாஸ்டரின் மூன்று மாணவர்கள் தம் ஆசரியருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அந்த பழைய மாணவர்களும் தத்தம் துறையில் உலக அளவில் பேசப்படும் டாக்டர் ராஜ சேகர் (பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்)  டாக்டர் ராஜசபை (ஆர்த்தோ மருத்துவர்) அன்ன பூர்ணா ஹோட்டல் குழுமத்தின் தலைவர் சீனிவாசன்  ( உலக உணவக அமைப்பின் தலைவர்) சாதனையாளராகத் திகழ்ந்தது விழாவிற்கு மேலும்மெருகேற்றியது.  இந்தப் பழைய மாணவர்களின் காணிக்கைவுரை விழாவை சமூக விழாவாகவும் உயர்த்தியது. 

           இந்த விழா அமைப்பாளர்களின் நண்பர்கள் தான் அரங்கில் பெரும்பான்மையினர், அவர்கள்  ஜெகன்னாதன் மாஸ்டரை அறிந்தவர்களாக இருப்பார்கள்.  மற்றவர்கள், குறிப்பாக, நிகழ்ச்சிக்கு திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரையை ஆவலோடு எதிர்பார்த்து வந்த சுமார் 500 மாணவர்களுக்கு  ஜெகன்னாதன் மாஸ்டரை அறிமுகப்படுத்த வேண்டாமா?  சுமார் 1000 பேர் கூடிய அரங்கில் வெகு சிலர் தானே விருதாளர்களை அறிவார்கள், மற்றவர்களுக்கும் விருதாளர்களை அறிமுகம் செய்ய வேண்டாமா?  இந்தத் தேடல்களுக்குத் தீர்வாக  நிகழ்ச்சியின் இடையில் ஜெகன்னாதன் மாஸ்டர் மற்றும் இரண்டு விருதாளர்கள் குறித்த ஆவணப் படங்களும் திரையிடப்பட்டன.

            ( ஆவணப் பட யூ டியுப் இணைப்பு  https://www.youtube.com/watch?v=arInmmcxBRM&feature=youtu.be)

              தலைமையுரையாற்றிய தென்மண்டல மத்திய கலால், சுங்க வரிகள் தீர்ப்பாயத் துணைத் தலைவர் திரு  சி.  ராஜேந்திரன், திருக்குறளில் மிகுந்த ஈடுபாடுமிக்கவர்.  அவருடைய தலைமையுரை திருக்குறள் இலக்கியப் பொழிவாகவே திகழ்ந்தது.  இன்றைய மாணவர்களின் அறிவுக் கூர்மைப் பாராட்டினார், அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றார்.  கல்வி சிறக்க குறிப்பாக பள்ளிக் கல்வி சிறக்க  எளிய வழிகளை முன்மொழிந்தார்.  கல்வியாளர்கள் அவரை வழிமொழிந்தால் நாடு பயனுறும்.  திரு சி. ராஜேந்திரன் அவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது (தினமலர் 23.09.2018, திருச்சிப் பதிப்பு பக்கம் 5)

             சிறப்புரையாற்றிய திருமதி பர்வீன் சுல்தானா அவையோரை தமிழால் கட்டிப் போட்டார், பின்வரிசைகளில் இருந்த மாணவர்களை சுண்டி இழுத்தார்.    ஜெகன்னாதன் மாஸ்டரின் பேராளுமையையும் அவரோடு தாம் பழகியதையும் நெகிழ்வோடு விவரித்தார்.


பார்வையாளர்கள் கரங்களில் "ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்" 


           இந்த விழாவை விஜயா பதிப்பகத்தார் எழுத்து வடிவிலும் ஆவணமாக்கினார்கள்.  ஜெகன்னாதன் மாஸ்டர் மற்றும் விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளோடு கல்விச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய  ஆசிரியர்களைக் கொண்டாடுவோம் என்ற சிற்றேடு இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

            ஒரு குடும்பம் தம் தலைவனின் நினைவை எப்படிப் போற்ற வேண்டும் என்பதற்கு இவ்விழா நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறது.  ஒரு ஆசிரியர் எத்தகைய வழியில் பணியாற்றினால் தலைமுறைகள் தாண்டியும் மாணவர்கள் நெஞ்சில் நிற்க முடியும் என்பதை இந்த விழா தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. நாடு உயர கல்வி உயர வேண்டும் கல்வி உயர நல்லாசரியர்களைக் கொண்டாட வேண்டும் என்பதை செயலில் காட்டியிருக்கிறார்கள்  ஜெகன்னாதன் மாஸ்டரின் மகன் டாக்டர்  ஜெ.  பால வெங்கட சுப்பிரமணியனும்  மகள்கள் ஆசரியை திருமதி ஜெ. மீனா மற்றும் ஆசிரியை திருமதி  ஜெ. பால விஜய லட்சுமி.  

            விழாப் பணிகளில் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்து  அழகுற செதுக்கிய டாக்டர் பால வெங்கட் ஒரு விஷயத்தை மட்டும் அனேகமாக இருட்டடிப்பே செய்துவிட்டார்.  அது தான் விருதாளர்களுக்கு வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு.  இதைப் பற்றி, விழா குறித்த அறிவிப்பிலோ அழைப்பிதழிலோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அது அவரது தன்னடக்கம், நான் இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வராவிட்டால் ஒரு நல்ல முன்னுதாரணம் பதிவாகமல் போய்விடும்.  பொறுத்துக் கொள்ளுங்கள், டாக்டர்!

நலந்தா செம்புலிங்கம்
24.09.2018






Sunday 16 September 2018

நெருப்பினுள் குடியிருந்த மாணிக்கம்!!

நெருப்பினுள் குடியிருந்த மாணிக்கம்!!
      ^^^^^^^^   ********   ^^^^^^^^  ******** ^^^^^^^


பனி கொட்டுகிறது
குளிர் வாட்டியெடுக்கிறது

குளிர் காய்கிறோம்
நெருப்பில்
கவனமாக சரியான
இடைவெளியில்

பனிப் பொழிவு 
மெல்ல மெல்லக் கூடுகிறது
நெருப்புத் தொட்டியை
மெல்ல மெல்ல நெருங்கிறோம்

பனிப் பொழிவு
மேலும் மேலும் அதிகரிக்கிறது
தீயினுள் பாய முடியுமா?
பழகிக் கொள்கிறோம்
பனியைப் பழகிக் கொள்கிறோம்

காரைக்குடி இல்லம்: கதிரகம்
பனியுடன் 
பழக மறுத்தாரொருவர்
பொய்மைப் பனியுடன் 
பழக மறுத்தாரொருவர்

அவர் தான்
உண்மை நெருப்பினுள்
குடியிருந்த மாணிக்கம்!
அவர் வ.சுப. மாணிக்கம்!!

பொய்மைப் பனி 
நெருங்க முடியாத

நெருப்பு மாணிக்கம்!
   --நலந்தா செம்புலிங்கம்
16.09.2018

Thursday 13 September 2018

நேரிலே பார்த்தால்? நிலவு தேய்ந்து தான் போகும்!

நேரிலே பார்த்தால்? நிலவு தேய்ந்து தான் போகும்!
      ^^^^^^^^^    ***********   ^^^^^^^^^    ***********     ^^^^^^^^^^

உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை  நீ  பார்க்கின்றாயே
உன்னை  நான்  பார்க்கும்  போது  மண்ணை  நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ  பார்க்கின்றாயே
விண்ணை  நான்  பார்க்கும்  போது  என்னை  நீ  பார்க்கின்றாயே
நேரிலே  பார்த்தாலென்ன  நிலவென்ன  தேய்ந்தா போகும்

( படம்: வாழ்க்கைப் படகு )  




               இது கவியரசர் கண்ணதாசனின் சொல்லோவியத்தில் விரியும் நயமான காதல் காட்சி.   நாயகி நேருக்கு நேராக பார்க்க நாணுகிறாள். நாயகனோ நாயகி தன்னைப் பார்க்க மாட்டாளா எனத் தவிக்கிறான்.  நாயகியை நிலவு எனப் புகழ்ந்து , நிலவே நேரிலே என்னைப் பார்த்தால் தேய்ந்தா போய்விடுவாய்? எனக் கேட்கிறான்.

               காதல் காட்சியில் நேருக்கு நேர் பார்த்தால் நிலவே போன்ற முகமானாலும் சரி சாதாரண முகமானாலும் சரி தேய்ந்து போகாது தான்.

               புகைப்படக் காட்சியில் அப்படி இல்லை.  கேமராவையோ செல்போனையோ நேருக்கு நேர் பார்த்துவிட்டால் முகம் இறுகிப் போய்விடும்.

               கேமரா முகத்தைப் பார்க்க முகமோ கேமராவைப் பார்க்கா நிலையில் இருந்தால் தான் படம் இயல்பாக இருக்கும்,  எடுப்பாக இருக்கும்.

                ஆர்வமிகுதால் சில புகைப்படக் கலைஞர்கள்,  புகைப்படத்தை மெருகூட்டுகிறேன் என்ற பெயரில் படங்களை TOUCH செய்து படத்தில் இயல்பு நிலையை மாற்றிவிடுவார்கள்.

.               பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மற்றும் தமிழண்ணலுடன் நான் இருக்கும் படத்தை ஒரு அன்பர் மாற்றிவிட்டார். ஒரு திருக்குறள் வெளியீட்டு விழாவில் மாமனிதர் 
அப்துல் கலாமிடம் நான் திருக்குறளை 
பெற்றுக் கொண்ட காட்சியையும் ஒரு 
அன்பர் மாற்றிவிட்டார்.

     அண்மையில் ஒரு திருக்குறள் விழாவிற்கு பார்வையாளனாகத் தான் சென்றேன். மேடையேற்றி வாழ்த்துரைக்கவும் வாய்ப்பளித்தார்கள், .படமும் எடுத்தார்கள். படத்தை அவர்களாகத் தருவார்கள் என ஓரிரு வாரங்கள் காத்திருந்தேன், தரவில்லை. பிறகு மீண்டும் மீண்டும் நினைவூட்டி இரண்டு மாதங்களுக்குப் பிறகு வாங்கினேன்.  மிகவும் இயல்பான படம், ஆனால் அடிக்கடி நினைவூட்டியது உறவின் இயல்பை மாற்றிவிட்டது.

      இவ்வளவு கதையும்

1. ஒரு இயல்பான படத்திற்காகவும்

2..அப்படத்தை எடுத்து அனுப்பியவற்கு நன்றியுரைப்பதற்காகவும் தான்.

            காரைக்குடியின் நெடுநாள் பள்ளியாம், 108 ஆண்டு பாரம்பரிமிக்க பள்ளியாம்  கார்த்திகேயன் பள்ளியின் ஆசிரியை திருமதி பா. லெட்சுமி, மேதகு அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏனோ நேரில் பார்க்கவில்லை. அவர் அப்துல் கலாமைப் பார்க்காததும் ஒரு தெய்வீக திருவினையாடல் போலும், அதனாலோ என்னவோ, அவர் இன்று அப்துல்  கலாமின் எழுத்துக்கள் மூலம் சிந்தனைகள் மூலம் தன்னுடைய மாணவர்களுக்கு  ஒவ்வொரு நாளும் அப்துல் கலாமை தரிசனம் செய்து வைக்கிறார்.  

      காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு பீட்டர் ராஜா அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எனக்கு  பேச வாய்ப்பளித்திருந்தார்கள்

. ஆசிரியை பா. லெட்சுமி அவர்களின் மகன் இறையன்பு அப்பள்ளியின் மாணவன், பல பரிசுகளை வென்ற மாணவன். 

         அவ்விழாவில் நான் பேசும் போது ஆசிரியை பா. லெட்சுமி அவர்கள் ஆறாவது அல்லது ஏழாவது வரிசையில் இருந்ததைப் பார்த்தேன். ஆனால் படம் எடுத்ததைப் பார்க்கவில்லை.  காலையில் 11  மணியளவில் நான் பேசினேன்.  நான் பேசிய காட்சியை  எனக்கு மதியம் 1 மணியளவில் அனுப்பிவிட்டார்கள்.

         குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அண்ணாமலை தன் படத்தை ஒரு முறை கூடப் போட்டுக் கொண்டதில்லை.  குமுதம் தான் தெரிய வேண்டும் நான் தெரிய வேண்டியதில்லை என்பாராம்.  அவருடைய தாக்கத்தால் தான் நானும் எங்கள் நலந்தா புத்தகக் கடையில் முகவரி அட்டையில் என் பெயரைக் கூட போடுவதில்லை.
                  
                         குமுதம் எஸ். ஏ. பி அண்ணாமலை  என்னுள்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை தான்.  ஆனால் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் தான் என் வழிகாட்டி.  அவர் புகைப்படங்களை பெரிதும் விரும்புபவர்.   அவரது புகைப்பட விருப்பம் வெளியில் தெரியும் சிப்பி, அந்த சிப்பிக்குள் இருக்கும் முத்து நல்ல படைப்புகளை நல்ல நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற பெருநோக்கம் தான். 


           என் நெஞ்சில் வாழும் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் அடிக்கடி சொல்லும் வார்த்தை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும்.  பீட்டர் ராஜாவிற்கு எடுக்கப்பட்ட பாராட்டுவிழா மிக முக்கியமான நிகழ்ச்சி, அதில் எனக்கு பேச வாய்த்தை ஆசிரியை லெட்சுமி  இயல்பாக பதிவு செய்துள்ளார், ச.மெ அவர்களின் தடத்தில் பயணித்த இரட்டிப்பு மகிழ்ச்சியும் நல்கியுள்ளார்

         
               ஆசிரியை லெட்சுமி சின்ன சின்ன உதவிக்கெல்லாம் ஒரு கோடி நன்றி கூறுவார்.  அவருக்கு நான் எத்தனை கோடி நன்றி சொல்வது? ஒரு முப்பது அல்லது நாற்பது கோடி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  ஒரு முழுத் தொகையாக ஐம்பது கோடி நன்றி சொல்லக் கூடாதா?  என நீங்கள் கேட்கலாம்.  அவர் எனக்கு இதுவரை முப்பது அல்லது நாற்பது கோடி நன்றி சொல்லியிருப்பார், அவ்வளவு தான் கையிருப்பு இருக்கிறது, அவ்வளவையும் கொடுத்துவிடுகிறேன்.

நலந்தா செம்புலிங்கம்
13.09.2018




Tuesday 11 September 2018

செயங்கொண்டான்! தமிழ் கொண்டான்!!

செயங்கொண்டான்! தமிழ் கொண்டான்!!

 மழையின்றி மக்கள் வாடியிருக்கிறார்கள்,  மழை வேண்டி ஒரு தமிழ்ப் பாவலன் பாடுகிறான், மழை பொழிகிறது. இன்னொரு நாள் மழை கொட்டித் தீர்க்கிறது, அதையும் மக்களால் தாங்க முடியவில்லை.  உடனே அந்தப் பாவலன் மழையை நிற்கச்  சொல்லிப் பாடுகிறான். மழை நின்றுவிடுகிறது.

                மழையை வேண்டியும் நிறுத்தவும் பாடிய தமிழ் அருளாளர் தான் பாடுவார் முத்தப்பர்.  18 ஆம் நூற்றாண்டில் பிறந்த முத்தப்பர் நகரத்தார் குலத்தில் நேமம் கோவில் மரபில் பிறந்தவர்.  புலமைச் சமர்களில் எல்லாம் சிங்கமாய்த் திகழ்ந்தவர்.

                 அதே நேமங்கோவில் மரபில் தோன்றியவர் தான் காரைக்குடி வித்யாகிரி பள்ளியின் தமிழாசரியர் மெ. செயங்கொண்டான்.  

                 தமிழ் பற்றும் ஆற்றலும் மிக்க  செயங்கொண்டான் பள்ளி, கல்லூரிப் பருங்களிலேயே ஏராளமான பரிசுகளை வென்று சாதித்துள்ளார். 

  
 இன்று தமிழாசிரியாகத் திகழும் செயங்கொண்டானுக்கு   மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி அளிப்பது தான்   உயிர் மூச்சு.   தமிழக அரசு திருக்குறளை மாணவர்களிடையே பரப்புவதற்காக திருக்குறள் செல்வர் என்றொரு திட்டம் வைத்துள்ளது.  1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ. 10000/- (ரூபாய் பத்தாயிரம்) பணமுடிப்பும் சான்றிதழும்  வழங்கிவருகிறது.  அத்தகுதி மிக்க மாணவர்களை உருவாக்குவதை செயங்கொண்டான் தன் வாழ்க்கை முறையாக வரித்துக் கொண்டுள்ளார்.   தம் பள்ளி மாணவர் என்றில்லை எப்பள்ளி மாணவருக்கும் பேருவுகையோடு திருக்குறள் பயிற்சி அளிப்பார்.  இதுவரை 36 (முப்பத்தியாறு) திருக்குறட் செல்வர்களை உருவாக்கியுள்ளார்.

                        ஆசிரியப் பணி தமிழ்ப் பயிற்சி திருக்குறள் பயிற்சி சதுரங்கப் பயிற்சி என பணிமிகுந்த செயங்கொண்டானுக்கு உள்ளபடியே 24 மணி நேரம் போதாது. ஆனால் அவர் இவற்றோடு பல தமிழ், திருக்குறள், சதுரங்கக் கழகங்களிலும் தலையைக் கொடுத்து  கொண்டிருப்பவர். 

                        36 மாணவர்களுக்கு திருக்குறள் செல்வர் எனும் அரசு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த செயங்கொண்டானுக்கு இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இவருடைய எல்லைகள் நீத்த நட்பு வட்டம் இதனை பேருவுகையோடு கொண்டாடியது. மாணவர்களும் தாமே விருது பெற்றதைப் போல அகமகிழ்ந்தனர்.  பள்ளி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் உளம் குளிர்நதனர். குடும்பம் குதூகலித்தது, தாயார் ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தார்.

                        இவர்களையெல்லாம் விட இன்னொருவர் தான் இன்னும் அதிகமாக மகிழந்தார்!  அவர் தான் திருவள்ளுவர்!!

நலந்தா செம்புலிங்கம்
11.09.2018




Friday 7 September 2018

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிப்பவர்!

பெற்ற பிள்ளைகளைப் போல நூல்களை நேசிக்கும் சால்புடையவர் பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக ஆற்றலாளர் முனைவர் பழநி ராகுதாசன் ஐயா.

           அவர், பழைய புத்தகக் கடையில் புதிய புத்தகங்கள் அனைய புத்தகங்களையும்  (பாதி விலைக்குக் கிடைக்குமல்லவா?) புதிய புத்தகக் கடைகளில் பழைய பதிப்புகளையும் (தாள் பழுப்பேறியிருந்தாலும் விலை பல ஆண்டுகளுக்கு முந்தைய விலை அல்லவா?) தேடித் தேடி வாங்கும் புத்தகத் தேனீ.


             மதுரை புத்தகத் திருவிழாவில் பிரேம் சந்த வாழ்க்கை வரலாறு மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டியிருக்கிறது.  அந்த புத்தகத் திருவிழாவிற்கு ஆயிரமாயிரம் வாசகர்கள் தினந்தோறும்  வருகிறார்கள்.   விலை நெறுக்கப்பட்ட அந்த அருமையான புத்தகம் எல்லோர் கண்ணிலுமா பட்டது? கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் நெஞ்சில் பட்டது?  பழநி ஐயாவிற்கு நெஞ்சில் மட்டும் பட்டிருக்காது நெஞ்சில் சுருக்கென்றே தைத்திருக்கும்.  அவர் 12 பிரதிகள் வாங்கிவிட்டாராம்  (அவர் அந்தக் கடைக்குச் சென்ற போது 12 பிரதிகள் தான் இருந்திருக்கும், இருந்ததையெல்லாம் வாங்கியிருப்பார்)

                இந்த மதுரை க்கு ( "மதுரையில் புத்தகங்களுக்கு"  என்று வாசிக்க வேண்டுகிறேன் ) வந்த சோதனை பற்றி பழநி ஐயாவின் மகளும் திருவாடானைக் கல்லூரி பேராசிரியமான மணிமேகலை முகநூலில்  கீழக்கண்டவாறு பதிவு செய்துள்ளார்  \\\\\\\\\

                        
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு கேள்வி. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவுனர் பிரேம்சந்தின் வாழ்கை வரலாறு மதுரை புத்தகக் கண்காட்சியில் வெறும் மூன்று ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது அடுக்குமா????
அப்பா பன்னிரண்டு பிரதிகளை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.....
சரஸ்வதி ராம்நாத் மொழியாக்கம் செய்திருந்த பிரேம்சந்தின் "கோதான்" நாவலுக்கு ஒரு அற்புதமான முன்னுரை எழுதிய அப்பாவால் இந்த அவலத்தைப் பொறுக்கவே முடியவில்லை... \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அதற்கு நான் கீழ்க்கண்டவாறு 
சுருக்கமாகப் பதிலிட்டேன்

                   இன்னும் பல அவலங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


                         என்னென்ன அவலங்களுடன் வாழ்கிறோம் எனப் பட்டியிலிட ஆரம்பித்தால் பொன்னின் செல்வன் சிறிய நூலாகிவிடும்.  இரண்டே இரண்டு அவலங்களை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.  அதில் ஒன்று தன்னலம் சார்ந்ததே!  மற்றொன்று நூற்றிற்கு நூறு பொது நலம் சார்ந்தது.
                    
                   தமிழகத்தில் தமிழ் நூல்கள் விற்பைன குறித்து ஒரு ஊகக் கணிப்பு செய்துள்ளேன்.
                   
                   பள்ளி, கல்லூரி ஆண்டு விழாவிற்கான பரிசுப் பொருள்களுக்கென ஒரு கணிசமான விற்பைன வாய்ப்பு உள்ளது.  ஆனால் புத்தகங்களால் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்க ளோடு போட்டி போட முடியவில்லை. ஒரு வேளை  பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பொருட்களை வெற்றி கொண்டாலும் அந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ உள்ளுக்குள்ளேயே ஒரு பகுதி நேர பதிப்பாளரோ புத்தக விற்பனையாளரோ இருப்பார், அவரிடம் அந்தப் பள்ளியோ கல்லூரியோ ஒற்றை பைசா DISCOUNT  (நாங்க இதை மட்டும் இங்லீஷில் தான் சொல்லுவோம்) கேட்காமல் புத்தகங்களை வாங்கிவிடும்.

           நமது அறிவுத் தேடல், பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு ஊரில் ஒரு நாளில் 100 நூல்கள் விற்பனை ஆகவேண்டும் என ஒரு அளவு கோல் வைத்துக்கொண்டால். கோயமுத்தூரில் ஒரு நாளில் 51 நூல்கள் விற்பனையாகும் .  தமிழகத்தின் சராசரி 20 நூல்களாக இருக்கலாம்.  பல ஊர்களின் சராசரி 20 நூல்களைவிடவும் குறைவாக இருக்கலாம்.
   
நலந்தா செம்புலிங்கம்
07.09.2018




Wednesday 5 September 2018

மனதில் பதியும் .........

மனதில் பதியும் .......


கணினிகள் வகுப்பறைக்குள்
வகுப்பறைகளும் கணினிக்குள்
மாணவன் விரலிற்கு
ஆசிரியரின் கரம்
அடைக்கலம் நல்கி
மணலில் அகரம் எழுதிய
காலம் பழங்கதை தான்
மணலில் எழுதினால்
மனதில் பதியும்
ஓரிசா மணல் ஓவியர்
பத்ம ஸ்ரீ பட்நாயக்
நாளும் நாளும் பதிக்கிறார்
மணலில் எழுதினால்**
மனதில் பதியும்
எழுத்தும் பதியும்
ஏற்றமிகு பண்பாடும் பதியும்
(**மாண்டிசாரி கல்வி முறையில் மாணவர்களின் விரலைப் பிடித்து ஆசரியர் உப்புத் தாளால் உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் மேல் விளம்பும் பழக்கம் இன்றும் உள்ளது)
நலந்தா செம்புலிங்கம்
05.09.2018




Tuesday 4 September 2018

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

தென்னவன்:விருதுகளை விஞ்சிய வேந்தன்!

சிவபெருமான் இலக்கணத்தை மீறுவதும் புலவர் நக்கீரன் குற்றம் கண்டுபிடித்த அதிசயமும்  நடந்த மதுரையில் தான் ஒரு கல்வித் துறை அதிகாரி உண்மையை உள்ளபடியே சொல்ல பத்திரிக்கையாளர்கள் சின்ன வெற்றிக்காக பெரிய பின்னடைவுகளை ஒதுக்கித் தள்ளிய சம்பவமும் மதுரையில்  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்தது.

                  அது சரி, பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் என்ன?

                 ஒரு பிரமுகர்/அதிகாரி எல்லாப் பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியை வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ தெரிவிக்க எல்லாப் பத்திரிக்கைப் பிரதிகளை அழைத்து செய்தியை வெளியிடுவது.

                   அது பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டும் பிரமுகர்/அதிகாரியின் தன்னிலை விளக்கம்.  எந்தத் தன்னிலை விளக்கத்திலாவது எதிர் தரப்பினரின்  நியாயம் சொல்லப்பட்டிருக்குமா?  

                     எதிர்தரப்பினரின் நியாயம் வெளிப்பட வேண்டாமா? அதற்குத் தானே பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் அந்தப் பிரமுகரை/அதிகாரியை துருவித் துருவி கேள்வி  கேட்பார்கள்.

                   ஆகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டியவர் பூசி மெழுகுவார், பத்திரிக்கையாளர்கள்  அவர் பூசி மெழுகியதைப் போட்டு உடைப்பார்கள்.  இது தான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் இலக்கணம்.



                  இந்த இலக்கணம் மீறப்படுவதற்கு மதுரை ஒத்தக்கடையில் பீடுநடை போட்டுவரும்  ஒன்றிய தொடக்கப் பள்ளியும்  ஒரு காரணமாகும்.  மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் செய்தும் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என உண்மையை அந்த அதிகாரி தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்கள் ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளதை சுட்டிக் காட்டினர்.  அந்த அதிகாரி விதிவிலக்காக ஒத்தக்கடை பள்ளி போன்ற சில பள்ளிகளில் தான் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளது என அந்த அதிகாரி மறுவிளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

                 இத்தகைய புதுமைகளுக்கு காரணமாகிய ஒத்தக்கடை ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசரியருக்கு என்ன விருது கொடுக்கலாம்?

                        
                        1. கிராம சேவைகள்.                   
                        2. பழங்குடி மேம்பாடு
                        3. பெண்கல்வி 
                        4. செயல் ஊக்கம்
                        5. மொழித் திறன்
                        6. அறிவியல் விழிப்புணர்வு
                        7.  படைப்பாற்றல் 
                        8.  சிறப்புக் குழந்தைகள்
                        9.   புதுமை

என ஒன்பது பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்ன பிரிவிற்காக தலைமை ஆசிரியர் தென்னவனுக்கு விருது கொடுத்திருக்கும்? வேறு எதற்கு புதுமைக்குத் தான்.

                        இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளி, இதனைத் தேடி 5 வயது பிள்ளைகள் தான் வருவார்கள் என்றும் மட்டும் நினைக்காதீர்கள்.  ஒரு எழுபது ஆண்டு பழைமையான ஒரு கல்லூரியும் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளது.

                          மதுரையின் முதல் பெண்கள் கல்லூரியான லேடி டோக்கு கல்லூரியில்   INTERNATIONAL SERVICE LEARNING PROGRAMME 2018   பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது  அக்கருத்தரங்கில் பங்கேற்ற ஜப்பான், கொரியா மற்றும் சீனாவைச் சேர்ந்த 11 பயிற்சியாளர்கள் மூன்று நாட்கள் இப்பள்ளிக்கே வந்து தலைமையாசரியர் தென்னவன் கலந்துரையாடினர்.

                           தலைமை ஆசிரியர் தென்னவன், விருதுகளை விஞ்சிய வேந்தன் தான்.  புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா 05.09.2018 புதன் கிழமை ஒளிப்பரக்கிறது. 

நலந்தா செம்புலிங்கம்   .
03.09.2018