Wednesday, 2 September 2020

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!

 

குறளுக்கு உரையாகும் காரைக்குடிப் பள்ளி!






          குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

           மடிதற்றுத் தான்முந் துறும். (1023)

 

        இந்தத் திருக்குறளிற்கு எத்தனையோ உரைகளைப் படித்திருப்பீர்கள். பரிமேலழகர் உரையோ பழைய உரையோ அவை யாவும் ஏட்டில் துலங்கும் இயல் தமிழ் தான்.

 


          இன்று இக்குறளிற்கு ஒரு உரை நம் கண் முன் செயல் வடிவம் பெறுகிறது. எங்கே? காரைக்குடியில், காமராசர், 1963 இல் திறந்த வைத்த பள்ளியில்!

       

       ஏராளமான அரசுப் பள்ளியில் மாணவர் பற்றாக்குறையில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் காரைக்குடியில் ஒரு வியத்தகு அதிசயம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

 

        2013-2014 கல்வியாண்டில் இராமநாதன் செட்டியார் நகராட்சி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுஅப்போது மாணவர் எண்ணிக்கை 218.  கடந்த 2019 -2020 கல்வியாண்டில் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1325.  ஆறு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கைஆறு மடங்கு  உயர்ந்திருக்கிறது.  

 

இப்பள்ளி மாணவர்கள் நடையிலும் உடையிலும் மிடுக்காகத் திகழ்வதோடு  வகுப்பறை கல்விக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள் இலக்கிய போட்டிகளில்  என பல்துறைகளில் சாதித்தும்   பொதுத் தேர்விலும்   வெற்றிக் கொடியும் நாட்டிவருகிறார்கள்இதனால் தான் காரைக்குடியினர் மட்டுமல்லாது வெளியூரில் உள்ளவர்களும் இப்பள்ளியில் தம் பிள்ளைச் சேர்க்க விரும்புகிறார்கள்அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்களும் அதிகரித்து வருகின்றது.

     


       ஜுன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டில் தம் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பிப்ரவரி மாதமே பள்ளியை அணுகுவர். 2018 - 2019 ஆண்டில் 95 மாணவர்களை மட்டுமே புதியதாகச் சேர்க்கக் கூடிய நிலையில் 300க்கு மேற்பட்டோர் இப்பள்ளியில் சேர முயன்றனர்மாணவர் சேர்க்கை முடிந்தது இனிமேல் விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்படமாட்டது என்று பிளக்ஸ் பேனர் வைக்கும் நிலை ஏற்பட்டதுபிறகு ஷிப்ட் முறையில் 6 ஆம் 7 ஆம் வகுப்புகளை நடத்த முடிவு செய்து அதன் பேரில் கூடுதலாக 200 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

 

        2019 - 2020 கல்வியாண்டின் தொடக்கத்தில் இப்பள்ளி வளாகத்திற்குள் இருந்த தொடக்கப் பள்ளி புதிதாகக் கட்டப்பெற்ற மற்றொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் இந்த உயர் நிலைப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்புறைகள் கிடைத்ததுஅதனால் ஷிபிட் முறையிலிருந்து இயல்பு முறைக்குத் திரும்பியோடு கூடுதலாக மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

 

       இந்த 2020 -2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17.08.2020 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது, 200 மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொள்ளக் கூடிய நிலையில் 700 மாணவர்கள் விண்ணப்பித்தனர்வேறு வழியில்லாமல் 500 மாணவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

 


       இத்தனை முன்னேற்றங்களுக்கு இடையில் இப்பள்ளியில் இட நெருக்கடியும், சுகாதார வசதி போதாமையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகளாகத் தொடர்ந்தனபெற்றோர் ஆசிரியர் கழகம் சளைக்காமல் கோரிக்கை மனுக்களைச் சமர்பித்த வண்ணம் இருந்ததால் படிப்படியாக தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 

       இப்பொழுது 500 மாணவர்கள் திருப்பிவிடப்பட நிலை எல்லா ஊடகங்களிலும் எடுத்துரைக்கப்பட்டதோடு சமூக வலைத் தளங்களில் இந்த அதிசியப் பள்ளியின் புகழ் காட்டுத்தீயாகப் பரவியதுதமிழக அரசு இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை தேவைகளை தானே உணர்ந்து, கொரோனா முடக்கத்திற்கு இடையிலும் site survey building plan approval, fund allocation என
 
மின்னல் வேகத்தில் களமிறங்கியுள்ளதுடிசம்பர் மாதத்திற்குள் ஐந்து வகுப்பறைகள் கிடைக்கும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறுகின்றனர்.

                  

            முன்னுதாரணமான தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்கள், அடித்தளமாகவும் அரணாக நிற்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் இந்த வெற்றி வரலாற்றின் முப்பரிணமானங்களாவர். இவர்களின் திருவினையும் தமிழக அரசின் செயல் வேகமும்  

 

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும் 

 

எனும் குறளை நினைவூட்டுகிறதுபரிமேலழகர், தன் குடியை உயரச் செய்வேன் என்று முயல்பவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துறும் என்பார்உள்ளபடி இப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் நன்முயற்சிக்கு தமிழக அரசு தனது அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முன் நிற்கிறது.

 

தமிழக அரசே முன் நிற்பதால், புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணி முடுக்கிவிட்ட நாளிலேயே கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கவும் அனுமதித்துள்ளதுஅதற்கேற்ப இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கையை 01.09. 2020  தொடங்கி முதல் நாளிலேயே  நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 

        கல்வி வணிகமயமாவதை எதிர் கொள்ள இதைப் போன்ற பள்ளிகளே சரியான தீர்வாகும். ஊருக்கு ஒரு இராமநாதன் செட்டியார் பள்ளி உருவாகட்டும்!

 

Thursday, 16 July 2020

பல நூறாண்டுகளும் சில ஆயிரமாண்டுகளும்......



அறிவியல் உலகம், அதாவது உலக அரசியல் அங்கீகரிக்கும் அறிவியல் உலகம் கொரோனாவிற்கு மருந்து இல்லை என்கிறது.

நான் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டவன்.  அதனால் முதலிலேயே 

கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை  
 கொரோனாவிற்கு மருந்து இல்லை

Siddha Dr Veera Babu
என மூன்று முறை சொல்லிவிடுகிறேன். எனினும்  அறிவியல் உலகின் பால் நான் கொண்டுள்ள நம்பிக்கையால் விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் எனவும் உறுதி கூறுகிறேன்
 
உள்ளபடியே ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கண்டுபிடித்து நோயை அடக்குவோம் என்ற  மருத்துவ அறிவு நமக்கு வெள்ளைக்காரன் தந்தது தான்.

அந்த அறிவின்படி அறிவியல் பூர்வமாக கொரோனாவிற்கு விரைவில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஐதிராபாத் நிறுவனத்தின் தடுப்பு ஊசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சோதனைக்கு வருகிறது, வேறு சில நிறுவனங்களின் தடுப்பு ஊசிகளும் வரவுள்ளதாக செய்திகள் வருகின்றன.  இந்த சோதனைகளுக்கு முடிவு சாதமாக இருக்கும் என நம்புவோம்.  ஆனால் முடிவு எப்போது வரும்?  சில பல மாதங்கள் ஆகலாம்.  தடுப்பு ஊசி வருமுன் காப்பதற்குத் தானே?    நோய் வாய்பட்டவர்களுக்கு  இது மருந்தாகவும் செயல்படுமா?

அதற்குள் இன்னும் எத்தனை லட்சம் மக்களுக்குப் பரவும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. உலக வரலாற்றில் மிகக் கோரமான ஹிரோஷிம்மா நாகாசாகி அணுகுண்டு வெடிப்பு கூட ஒரு எல்லைக்குள் நின்று விட்டது.  கொரோனா உலகம் முழுவதை வதைத்துச் சிதைக்கிறது.

நிற்க, வெள்ளைக்காரன் வருமுன்னர் நாம் அறிவில்லாமலா இருந்தோம்?  இல்லை இல்லவே இல்லை, பேரறிவோடு இருந்தோம்.

இரண்டாமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 

என திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அதில் அவர் காலத்திற்கு முந்திய நூற்களை மருத்துவ நூல்களை மேற்கோள் காட்டுகிறார்.

வெள்ளைக்காரனின் அறிவு பல நூற்றாண்டுகள் பழைமையானது.  நமது பாரம்பரிய அறிவு சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மையாது. 

நோயை எப்படி எதிர்கொள்வேண்டும் என்பதில் ஒரு விவாதம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.  நோய் கிருமியைக் கொல்லும் முறை அந்தக் கிருமியின் வடிவோமோ வீரையமோ மாறாமல் இருக்கும் வரை தான் எடுபடும்.  நோய்க் கிருமியின் வீரியம் வளர வளர மருந்தின் வீரயத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது.  பக்கவிளைவுகளும் அதிகரிக்கின்றன.  இந்த சிகிச்சை முறை சங்கிலித் தொடர நீடிக்கிறது.  அதற்குள் வணிகமும் செழிக்கிறது.

நோயை எதிர்கொள்ள நோயாளின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்பது அதிகரிப்பது என்பது எளிமையான உண்மை.  எளிமையான உண்மைகள் முக்காலத்திற்கும் பொருந்தும்.  


 

இதுவே அனேக பாரம்பரியமருத்துவங்களின் அடிப்படைத் தத்துவமாகும். இதற்கு சென்னை நகரில் மட்டும் ஓராயிரம் சான்றுகளை சித்த மருத்துவர் வீரபாபு உலகின் கண் முன் நிறுத்தியுள்ளார்.  அறிவியல் உலகம் கண் திறந்து பார்க்குமா?
நலந்தா செம்புலிங்கம்
16.07.2020

Wednesday, 27 May 2020

தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!


தொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு, இது புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, பல இளைஞர்களை புகழணியில் ஏற்றிவிட்ட நிகழ்ச்சியும் தான்.  இந்தக் கவித்துவத் தலைப்பு மிகவும் பிரபலமானதற்குக் காரணம் இது மாபெரும் உண்மையைப் பதிவு செய்தது தான்.  ஆம் தமிழர்களால் பேசாமல் இருக்கவும் முடியாது, மேடைப் பேச்சுக்களைத் துய்க்காமல் இருக்கவும் முடியாது.


           மேடைப் பேச்சு தமிழக அரசியலில் செயலுத்திய ஆதிக்கம் மாணப் பெரியது.  அரசியல் பிரச்சாரங்களுக்கு நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி எனத் தளங்கள் விரிந்து வந்தன, அண்மைக் காலங்களில் சமூக வலைத்தங்களில் அரசியல் பிரச்சாரம் பேராதிக்கம் செலுத்தி வருகிறது. 

       காலங்கள் மாறினாலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் பூத்த வண்ணம் இருந்தாலும்  அரசியல்  அரங்குகளிலும் இலக்கிய மன்றங்களிலும் நல்ல மேடைப் பேச்சுக்களுக்கு வரவேற்பு தொடர்கிறது.

       
உலகத்தையே முடக்கும் கொரோனா தொற்று நோய் பல சவால்களை மனிதகுலத்தின் மீது ஏவியுள்ளது.  ஒவ்வொரு தனிமனிதனும் எந்தவொரு மனிதனோடும் அணுக்கமாக இருக்கக் கூடாது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்பது இத்தொற்றினால் ஏற்பட்டுள்ள பெரிய தாக்கம்.  இதனால் கல்வித் துறை போக்குவரத்து தொழில் துறைகளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மேடைப் பேச்சு மன்றங்கள் மட்டும் கூட்டம் நடத்த முடியாது?   முடியாது என்பதல்ல விடை , கூடாது என்பது தான் சரியான சவால்.

      இந்த சவால் தமிழ் மன்றங்கள் தொழில் நுட்ப உதவியோடு எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது.  WEBINAR மற்றும் அதைப் போன்ற தொழில் நுட்பங்களின் வாயிலாக பல தமிழ் மன்றங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

     சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் go to meeting எனும் இத்தகைய தொழில் நுட்பச் செயலி வாயிலாக  28.05.2020 வியாழக் கிழமை சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை (இந்திய நேரம் மதியம் 2.30 முதல் 4.00 மணி வரை) புகழ் பெற்ற மேடைப் பேச்சாளர் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பேருரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

      இந்நிகழ்ச்சி அந்தக் கலைக் கழகத்திற்கு மட்டுமல்லாது அத்தொழில் நுட்பத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

          தொலைத் தொடர்புத் துறையும் கணிப்பொறி மென்பொருள் துறையும் மின்மயமான 21 நூற்றாண்டின் ஆம் நாயகர்கள் தாம்.

           சகல துறைகளிலும் அந்த வல்லவர்கள் கோலோச்சினாலும் அவர்கள் ஒரு தொழில்சார் வட்டத்திற்குள் அரியணையேகுபவர்கள் தான்.

          இப்போது தமிழ் மன்றங்கள் அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்வதாக பலர் நினைக்கிறார்கள்.

           உள்ளபடியே அத்தொழில்நுட்பங்களுக்குத் தமிழ் மன்றங்கள் தான் பெரிய மேடை அமைத்துக் கொடுத்து அத்தொழில்நுட்பங்களை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுபோய் சேர்க்கின்றன.

           அதிலும் இது தேவகோட்டை இராமநாதன் பேருரை, மிக மிக நேர்த்தியான தலைப்பும் அமைந்திருக்கிறது: இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ   இந்நிகழ்ச்சி உலகளாவிய கவனம் பெறும் மாபெரும் நிகழ்ச்சியாக அமையும்.  

            இது, தொழில் நுட்பத்துறையினருக்கு சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் நல்கும் வரம் தான்!

நலந்தா செம்புலிங்கம்
27.05.2020


Sunday, 17 May 2020

இணையத்தில் தமிழ்க் கொடி காக்கும் தன்னார்வலர்கள்!!

இணையத்தில் தமிழ்க் கொடி காக்கும் தன்னார்வலர்கள்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
            காதல்களிலெல்லாம் சுவையானது மோதலில் மலரும் காதல் தான்.  இளவல் லெனினிற்கும் எனக்குமான நட்பும் அத்தகையதே. ஒரு புறம் எதிர்நிலை கருத்துக்களால் தான் எங்கள் நட்பு மலர்ந்தது.  மற்றொரு புறம் தமிழ்ப்  பற்று என்ற ஒருமித்த ஈர்ப்பு எங்கள் நட்பிற்கு வலிமை சேர்த்தது. லெனினின் தமிழ்ப் பற்றும் மிக ஆக்கபூர்வமான பங்களிப்புகளும் வியக்க வைக்கின்றன.


             2015 ஆம் ஆண்டில் கொடையின் கதை (மூன்றாம் பதிப்பு) எனும் வள்ளல் அழகப்பர் காவியத்தைக் காரைக்குடியில் பல நகலச்சு (xerox) கடைகளின் வாயிலாக விற்பனை செய்ய முனைந்தேன்.  ஒவ்வொரு கடையிலும் ஐந்து பிரதிகள் கொடுத்து விட்டு ஒரு வாரம் கழித்து விற்ற புத்தகங்களுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் புத்தகங்களைக் கொடுப்பது என்பது தான் அந்தத் திட்டம்.  பல நகலச்சுக் கடைகாரர்கள் எங்களால் உள்ள வேலையைப் பார்க்க முடியாவில்லை  இந்த புத்தக விற்பனையெலாம் செய்ய முடியுமா என மறுத்தார்கள். அவற்றுள் ஒரு பிரபல நகலச்சுக் கடையில் ஏற்பட்ட அனுபவம் மிகவும் கசப்பனானது. அவர் புத்தகங்களைத் தொடவே மறுத்தார். இது அழகப்பர் வாழ்க்கை என அழுத்திச் சொன்ன போதும் அவர் ஏற்க மறுத்ததோடு இது கம்பெனி சார் செராக்ஸ் கடை நிறைய இருக்கு அங்கே போய் இந்த புத்தகத்தைக் கொடுங்க என உறுதியாக உதாசீனப்படுத்தினார்.  மற்ற நகலச்சு கடைகளில், இது அழகப்பர் வரலாறு என்றதும் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.

            லெனினின் சன் கிரியேஷன்ஸ் நகலச்சுக் கடைக்கும் சென்றேன்.  அறிமுகமில்லாத லெனின் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொண்டார். உரிய தொகையையும் உடனே கொடுத்தார்.  விற்பனை செய்த பிறகு கொடுத்தால் போதும் என்ற போதும் அவர் ஏற்கவில்லை.  தொகையை வற்புறுத்திக் கொடுத்தார்.
     
     
    பிறகு தான் இதைப் போன்ற (அச்சுப் ) புத்தகங்களுக்கு மாற்று வந்துவிட்டது அது தான் மின் புத்தகங்கள் (e books) என்றார்.  தானும் ஒரு மின் புத்தகத் தயாரிப்பாளர் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். மாற்றுக் கருத்தை அவர் எடுத்துரைத்த பாங்கிலேயே நான் வியந்து போனேன்.

        லெனின் அச்சுப் புத்தகங்களுக்கு மாற்றான மின் புத்தக தயாரிப்பாளராக இருந்த போதும் கொடையின் கதை அச்சுப் புத்தகத்தை விற்றுக் கொடுக்க  முன்வந்தது பிரபல நகலச்சுக் கடைக்காரர் அளித்த கசப்பான அனுபவத்திற்கு இனிப்பான மாற்றாக அமைந்தது.

          நாம் காலம் காலமாக படிக்கும் புத்தங்களுக்கும் இந்த நவீன மின் புத்தகங்களுக்கும் உள்ளபடியே எந்த வேறுபாடும் இல்லை.  அதே தாள் அதே அச்சு அதே அட்டை.  வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் இரண்டும் ஒன்று தான். தயாரிக்கும் முறையிலும் வேறுபடுகின்றன.  

            மின் புத்தகங்கள் வேண்டும் போது வேண்டிய பிரதிகளை மட்டும் அச்சிட்டுக் கொள்ளலாம். கையிருப்பு சுமை என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்றார்.  மின் புத்தக பதிவிறக்கங்களுக்கும் விலை வைக்கலாம் என்றும் அதன் சாதகங்களை அடுக்கினார். 

              இவையெலாம் நடந்த போது நலந்தா புத்தகக் கடை இடைவேளையிலிருந்தது.  அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு நலந்தா புத்தாக்கம் பெற்று சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் திறக்கப்பெற்றது.  அதற்குரிய அழைப்பிதழை லெனினிடமும் கொடுத்தேன்.

             குடும்ப மங்கல நிகழ்வு பத்திரிகைகளை உறவினர்களிடம் வைக்கும் போது பத்திரிகையைப் பெற்றுக் கொள்பவர்கள், முறை என்ற பெயரில் ஒரு அடையாளத் தொகையைக் கொடுப்பார்கள்

             லெனின் எனக்கு வைத்த முறை என்ன தெரியுமா?  மின் புத்தகங்களுக்குத் தான் இனி எதிர்காலம் நீங்கள் இப்போது புத்தகக் கடையை மீண்டும் திறக்கிறீர்களே என்ற பேருரை தான்.
   
            மாற்றுக் கருத்தை மதிக்கத் தெரிந்தவர்கள் தம் கருத்தில் வேறு எவரையும் விட உறுதியோடு இருப்பார்கள். அவர்கள்  இதிகாச அன்னப் பறவை  போல மாற்றுக் கருத்தினர் கூறியவற்றில் உடன்படக் கூடியவற்றையும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வார்கள்.  மற்றவற்றை நாகரீகமாக நிராகரிப்பார்கள்.  எங்கள் நட்பில்  இத்தகைய அனுபவமும் உண்டு.  மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலந்தா புத்தகக் கடையின் சார்பில் ஒரு மலரைத் தொகுத்தோம்.  தலைப்பு :  தனித்தமிழும் இனித் தமிழும்.  மின் புத்தக ஆர்வலரும் தயாரிப்பாளருமான லெனின் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்ட அந்த தொகுப்பில் எழுதினார்.  அவருடைய கட்டுரையின் தலைப்பு : தமிழிற்குத் தற்போதைய தேவை மின்மயமாக்கல் மட்டுமே

         மாற்றுக் கருத்தினிரிடையே மலரும் இத்தகைய அறிவார்ந்த நட்பு  உள்ளபடியே, மெய்யியல் அறிஞன் ஹெகல் கூறும் -- கருத்து, எதிர் கருத்து புதுக் கருத்து -- கோட்பாட்டிற்குச் சான்றாகவும் திகழ்கிறது.

         இது வரை சொன்னதெல்லாம்  உண்மை! உண்மையான எங்கள் நட்பின் கதை.  இனிமேல் வருவதும் உண்மை தான்!! ஆனால் அறிவியல் புதினக் கதை போல, மாய ஜாலக் கதை போல, தன்னம்பிக்கை கதை போல, இவை எல்லாம் கலந்தது போலவும் இருக்கும்.

       பெரும்பான்மையினரிடையே தமிழும் நவீன அறிவியல், தொழிநுட்பம் போன்றவைகளெல்லாம் எதிரெதிர் துருவங்கள் என்ற எண்ணம் இருக்கிறது.  தமிழ் என்பது பழம் பெருமை பேசுவதற்கானது,  தமிழ் படிப்பது தமிழாசிரியர் வேலைக்கும் தமிழ் அறிவு என்பது மேடைப் பேச்சுக்கானது மட்டும் தான் போன்ற எண்ணங்களும்  நிலை பெற்றுவிட்டன.

       ஆனால் இணைய உலகம் தமிழிற்கு இன்றியாமையாத தேவை என்பதை ஒரு திருக்கூட்டம் கண்டு கொண்டுள்ளது.  இணைய இணைப்பபோடு தொழில் நுட்ப ஆற்றலோடு தமிழை வளப்படுத்தும்  வரலாற்றுப் பணியில் அந்த இளைய தமிழ்ப் படையினர் வெற்றி நடை பயின்று வருகின்றனர்.  அவர்கள் எல்லாம் பல்வேறு தமிழ்க் கணனி அமைப்புகளில் தன்னார்வலர்களாக மகத்தான தமிழ்த் தொண்டாற்றி வருகின்றனர்.


              காரைக்குடி எஸ். எம். எஸ் மேனிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc (Nano Science)  பயின்ற  நம் லெனினும் அத்தகைய புதிய தலைமுறைத் தமிழ்த் தொண்டர்களில் ஒருவர்.   விக்கிபீடியா (Wikipeadia) சார்ந்த    கணினி மாநாடுகளிலும் பயிற்சி பட்டறைகளிலும் கலந்து கொண்டுள்ளார்கள.  சில பயிற்சி வகுப்புகளும் நடத்தியுள்ளார். அண்மையில் தேசிய அளவில் சாதனை படைத்த வெற்றித் தமிழன்.    கணியம்  மற்றும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின்   தொண்டராக லெனின்
செயல்படுகிறார்.


      லெனினின் பணி தமிழ் மென்பொருள் ஆக்கம், (Software) மின் நூலாக்கம் (e books), மின் நூலக உருவாக்கம் (e library), மின் நூல் இணைய தளம்  (website for e books)  என விரிகின்றன.  இவற்றைச் செயல்படுத்தும் 

           காரைக்குடியின் புகழ் பெற்ற இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தான் முதல் மின் நூலகம் மூன்றாண்டுகளுக்கு முன் நிறுவப் பட்டது.  இதனை உருவாக்கிய குழுவில் லெனின் பணியாற்றினார்.

             freetamilebooks.com எனும் இணைய தளம் கணியம் அறக்கட்டளையின் (kaniyam.com) மின் நூலகத் தளமாகும்.  இந்த இணைய தளத்தில் இதுவரை 650 நூல்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.  இந்தக் குழுவிலும் லெனின் பணியாற்றுகிறார்.

             இந்த இணைய தளம் அழகப்பரின் 111 வது பிறந்த நாளான 06.04.2020 அன்று வ. சுப. மாணிக்கனார் இயற்றிய கொடை விளக்கு எனும் அழகப்பர் குறுங்காப்பியத்தை பதிவேற்றியது குறிப்பிடத் தக்கது.
இந்த குறுங்காவியம் ஒலி வடிவில் ஒலிப்புத்தகமாகவும் யூடியூப்பில் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இக்குழு ஒலிபீடியா (Olipedia - https://www.youtube.com/channel/UCG0XGCZ1XroIWdBXvtqeI2g) என்னும் பெயரில் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஒலிப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  

               இவை யாவும் எந்தக் கடல் கோளாலும் எந்த சுனாமியாலும் எந்த கொரோனாவாலும் தமிழை சேதப்படாமல் காக்கும் மின் வேலிகள் ஆகும். இவை கரையான்களிடமிருந்து தமிழ் இலக்கியங்களை மீட்டு அவற்றை அச்சு வாகனம் ஏற்றிய தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யரின் பணிகளுக்கு ஒப்பானவை.

                இந்தக் கணினித் தமிழ் உலகம். தொண்டர்களால் இயங்கும் அதிசய உலகம்.  இது பழைய நூல்களைக் காக்கும். புதிய நூல்களை உருவாக்கத் துணை நிற்கும்.   வணிகம், நிர்வாகம், என எல்லாவற்றையும் மின்னூடகத்தில் தமிழிலேயே கையாள மென்பொருள்களை உருவாக்கும்.

              இணைய உலகத்தில் பல தளங்கள் தகவல் களஞ்சியங்களாகத் திகழ்ந்தாலும் அவற்றுள்ளெல்லாம் சிகரம் விக்கிபீடியா (Wikipeadia)  தான்.  விக்கிபீடியாவிலும் பல துணைத் தளங்கள் உள்ளன.  அவற்றுள் விக்கி சோர்ஸ் (wikisource) என்பது பன்மொழித் தளங்களை உள்ளடக்கியது.  அந்தந்த மொழிக்கான தளத்தில் அந்தந்த மொழி நூல்கள் பதிவேற்றப்படும். (எ.கா. தமிழ் மொழிக்கு - ta.wikisource.org)


          செப்பேடுகள் கல்வெட்டுக்கள் போல மேற்சொன்ன மின் ஊடகப் (electronic media) பதிவுகளும்  இணையத் தொடர்பும் (internet connectivity) அழியாப் பதிவுகளாகும்.  மேலும் மின் ஊடகத்தில் பதிவானால் தான் கைபேசி கருவி போன்ற  தகவல் பரிமாற்ற கருவிகளுள் ஏற்கப்படும்.  ஆகவே இவை அழியாப் பதிவாக நிலைப்பதோடு உயிர்ப்போடு இயங்கவும் முடியும்.  பல அரசுகளும் ஐக்கிய நாட்டு சபை போன்ற உலகளவிய அமைப்புகளும் இணைந்த செய்ய வேண்டிய இமாலயப் பணியை சில நூறு தன்னார்வலர்கள் சாதித்து வருகிறார்கள்.

        இந்த மின் ஊடகங்களில் தமிழ் மிகத் தாமதமாகத் தான் அடியெடுத்து வைத்தது.. சுமார் 10 அல்லது 15 ஆண்டுகளாகத் தான் தமிழ் நூல்கள் பதிவாக வருகின்றது. ஆங்கிலமோ 1971 களிலேயே மின் ஊடகத்தில் நுழைந்துவிட்டது. எனினும் இந்தக் குறுகிய காலகட்டத்தில் மின் ஊடக நூல்களின் எண்ணிக்கையிலும் மற்ற செயல்பாடுகளிலும் தமிழ் வேகமாக முன்னேறி இப்போது முன்னணியில் உள்ளது.

          தமிழின் மின் ஊடக சாதனைகள் எப்படி சாத்தியமாயின?  இதற்காக பல தொன்மை நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டன.  ஒரு நூல் அச்சேறினாலும் சரி மின் பதிவாகினாலும் சரி மெய்ப்புப் பார்த்தல் தான் மிகவும் முக்கியமானது.

               விக்கி சோர்ஸ் (wikisource) இப்பணிகளை ஊக்குவிக்க அண்மையில் இந்திய அளவில் பன்மொழிகளுக்கிடையில் ஒரு போட்டி நடத்தியது.  அதில் அதிக பக்கங்களை பதிவேற்றியவர்களுக்கெனவும் அதிகப் பக்கங்களை மெய்ப்புப் பாரத்தவர்களுக்கும் தனித்தனியாகவும் பரிசுகள் வழங்கியுள்ளது.




                மொழிகளின் வரிசையில் தமிழ் இரண்டாவது இடத்தையும் தனி நபர் பங்களிப்பில் லெனின் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.



               இன்றைய கணிப்பொறி பேராற்றலையும் இணையத் தொடர்பு வலிமையையும் பலர் சமூக  வலைத்தளத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான சமூக வலைத் தளங்கள் பொழுது போக்கிற்கும். வதந்தி பரப்பவதற்குமே பயன்படுகிறது. இந்நிலையில் தமிழ்த் தொண்டாற்றவும் தமிழைத் தொழில் நுட்பத்திற்கேற்ப தகவமைக்கவும் பாடுபடும் தன்னார்வலர்கள் இராணுவ வீரர்களைப் போல கொண்டாடப்பட வேண்டும்.

               ஆனால் பொது ஊடகங்களிலும் சரி சமூக வலைத் தளங்களிலும் சரி திரையுலகினர்  சில விளையாட்டுத் துறையினர், அரசியல்வாதிகள் நீங்கலாக சர்ச்சைக்குரியவர்களும் ஆள் வைத்து காசு கொடுத்து புகழை விலைக்கு வாங்குபவர்கள் பின்னால் தான் ஓடுகிறது.

           இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் நடிகர்களைப்  பற்றி மட்டுமல்லாது  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்த நடிகர்களின் தனிப்பட்ட செய்திகள் கூட  முக்கிய ஊடகச் செய்தியாகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவை பக்தி சிரத்தையோடு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.  YOU TUBE இதைப் போன்ற செய்திகளை உடனுடக்குடன் அறிந்த கொள்ள SUBSCRIBE  செய்யுங்கள் பெல் பட்டனை அமுக்குங்கள் என்று கட்டளைகளும் பிறப்பிக்கின்றன.

          அகில இந்திய அளவில் சாதனை படைத்த காரைக்குடி இளைஞனை விட காரைக்குடியில் அதிகமாக அறியப்பட்டிருப்பவர்கள் புதிய பழைய பிரபல நடிகர்கள் தான். காரைக்குடியைச் சேர்ந்த சமூக வலைத் தளப்பதிவாளர்களால் இந்த அவல நிலையை மாற்ற முடியும். 

               .  தமிழைத் தொழில் நுட்பத்திற்கேற்ப தகவைக்கும் பணியில் நூற்றுக் கணக்கான தன்னார்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பாடுபட்டுவருகிறார்கள்.  அவர்களுள்  லெனின் ஒரு வெற்றி அடையாளம், அவர்  காரைக்குடியைச் சேர்ந்தவர். ஆகவே காரைக்குடி உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டுமென பணிவோடு வேண்டுகிறேன்.   அது அவருக்கான விழாவாக மட்டும் அமையாது. இணையத்திலும் மின் ஊடகத்திலும் தமிழ்க் காெடியை உயர்த்திப் பிடித்து காக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்குமான விழாவாகவும் கருதப்படும்.

          கம்பன் கழகத்தினை 80 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவி கம்பன் இலக்கியத்திற்கு புத்தூக்கம் அளித்த காரைக்குடி கணினித் தமிழிற்கும் புத்தூக்கம் அளிக்கட்டும்

நலந்தா செம்புலிங்கம்
17.05.2020



Wednesday, 22 April 2020

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா?

கச்சா எண்ணெய் தலைகீழ் வணிகம்: விற்பவன் விலை கொடுத்தது உண்மையா? 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


உண்மையின் கையைக் காலைக் கட்டிப் போட்டுவிட்டு, பொய்மை அதன் மேல் கொலை முயற்சி புகார் கொடுக்குமாம்.  ஊடகம் எனும் பஞ்சாயத்து தலைவரும் விசாரணையின்றி உண்மையைத் தண்டிப்பாராம்.

அப்படி வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு இப்போது அவலாகக் கிடைத்திருக்கிறது கச்சா எண்ணெய் விவகாரம்.
கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வந்துள்ளது.

மோடி இன்னும் பெட்ரோலை 72 ரூபாய்க்கு விற்கிறார் 

"இது, அராஜாகம், இது மக்களை வாட்டி வதைக்கும் கொடுமையான அரசு"

என சமூக வலைத் தளங்களில் அனல் பறக்கிறது.

உண்மை மீது கட்டிவிடப்பட்ட  களங்களைக் களந்து உண்மையின் உண்மையைப் பார்ப்போம்.
  
1. கச்சா எண்ணெயின் மைனஸ் விலை, அது, சர்வதேச மார்க்கெட்டில் நடந்த உண்மை தான். அது பார்வர்டு டிரேடிங் சந்தையில் சூதாட்டத்தில் குதித்தவர்களால் ஏற்பட்ட பொருளாதார கொரோனா.

 2. இது ஆன் லைன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரை வேரோடு சாய்க்கும். அசல் சந்தையிலும் இதன் தாக்கம் லேசாக இருக்கும். கடைக்கோடி நுகர்வோருக்கு பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

3. சூதாட்ட வணிகர்கள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யயை  சேமிப்பதற்கு உரிய தூக்குச் சட்டி இல்லாமல் பல்லாயிரம் பேரல் கச்சா  எண்ணெய்யயை   ஆன் லைனில் வாங்குவார்கள்.
ஆன் லைனில் வாங்கிய  சரக்கை ஒப்புக் கொள்ள வேண்டிய நாளில் கச்சா எண்ணெய்யயை  உள்ளபடியே பயன்படுத்தும் (சுத்திகரிக்கும்) நிறுவனத்திற்கு விற்று விடுவார்கள். சில நேரங்களில் ஒப்பந்தத் தேதி விலையை விட சரக்கு ஒப்படைப்புத் தேதி விலை குறைவாக இருக்கலாம். அப்போது நஷ்டம் ஏற்படும். அந்த நஷ்டத்திற்கு அவர்கள் கைக் காசைக் கொடுப்பார்கள். இது தான் இதுவரை நடந்தது.

4. கொரோனா முடக்கத்தால் கச்சா எண்ணெய் பயன்பாடு சுருங்கிவிட்டது. அதனால் எவ்வளவு குறைந்த விலைக்கும் ஆன் லைனில் கச்சா எண்ணெய் வாங்கிய சூதாடிகளிடம் வாங்குவதற்கு ஆளில்லை.

5. ஆகவே ஆன் லைன் சூதாட்ட வணிகர்கள், சேமிப்பு கிடங்கு வசதியுள்ள அசல் சந்தை வணிகரிடமோ, சுத்திகரிப்பாளிரிடமோ அல்லது உற்பத்தியாளரிடமோ விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

6. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஆன் லைன்சூதாடிகளிடம் அசல் சந்தை வணிகர்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய ஒரு பைசா கூட விலை கொடுக்கவில்லை. கரும்பைத் தின்ன கூலியும் வாங்கிவிட்டார்கள்.

7. வரலாற்றில் முதல் முறையாக விற்பவன் வாங்குபவனுக்கு விலை கொடுக்கிறான். ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு தலை கீழ் விலை 3 முதல் 4 அமெரிக்க டாலர்.

8. மூன்றாவது பத்தியை மீண்டும் வாசித்தால் இது இயற்கை நீதி என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.



9. இதனால் அசல் சந்தையில் பெரிய நன்மை ஏற்படாது. ஆனால் லைன் சந்தையில் மாட்டிக் கொண்டவர்களை மட்டுமல்ல ஆன்லைன் சந்தையையே புரட்டிப் போட்டுவிடும்.



10. பாரதம் போன்ற நாடு அன்றாடம் ஆன் லைன் விலை பார்த்து விலை வீழ்ச்சியடையும் நாள் வரை காத்திருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாது. 

11. முறையாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன் கொள்முதல் ஒப்பந்தம் செய்யும் போது, கச்சா எண்ணெய் பல மாதங்களுக்கு முந்தைய விலையில் (ஒப்பந்த விலையில்) தான் வந்திறங்கும்.
நலந்தா செம்புலிங்கம்
22.04.2020

Thursday, 16 April 2020

இயலார் அயலார் அல்ல!!


இயலார் அயலார் அல்ல!!

      வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கு 10 இயல்களை உடையது.  உலகக் கடன் என்பது பத்தாம் இயல். அதில் மாணவர், செல்வர் ,ஆசான்கள் என ஒவ்வொரு தரப்பினரும் வள்ளல் அழகப்பருக்கு  எப்படி நன்றி செலுத்த வேண்டும் என எடுத்துரைப்பார். அதில் கொடை நன்றி என்ற தலைப்பில் ஒரு  பாட்டு

“காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த//
 தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் //
கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து //
காட்டுவோம் நன்றிக் கடன்”

நாமும் கொடை செய்வது தான்வள்ளல் அழகப்பருக்கு  செலுத்தும் நன்றிக் கடனாகும் என்கிறார் வ.சுப.மா.

   ஒவ்வொருவரும் கொடைஞராகவேண்டுமென்ற வ.சுப.மாணிக்கனாரின் கனவு நனவாகும் சுழலை கொரோனா நெருக்கடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொடை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் பல நல்ல உள்ளங்களில் ஊற்றெடுத்து, உடனடியாக கொடையளித்தும் வருகிறன்றனர்.  கொடையாளிகள் பொருள்களை  பயனாளிகளுக்கும் கொடுக்கும் படத்தை சமூகஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.  அந்தப் படங்கள் தான் இந்தக் கொடை மனப்பான்மையைத் தொற்றாக எட்டுத் திசையிலும் பரவ வைத்திருக்கிறது, மகிழ்ச்சி.  ஆனால் பயனாளிகள் படத்தை வெளியிடலாமா? என்றொரு நெருடலும் மெல்ல எழுகிறது.

    இந்த நெருடலுக்கு இடமளிக்காமல் தேவகோட்டை கலவைச் சோறு அமைப்பினர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து உதவி வருகின்றனர். அவர்களை இந்த தொண்டு அமைப்பினர் பயனாளிகள் என்று கூட குறிப்பிடவில்லை. இயலார் அயலார் அல்ல என்றே சுட்டுகிறார்கள். 

    கலவைச் சோறு அமைப்பினரும் பொருள் தொகுப்புகளை வழங்கும் படங்களை வெளியிடுகிறார்கள், மிகுந்த அக்கறையோடு பயனாளிகளின் முகம் தெரியாமல் படம் வெளியிடுகிறார்.  இவர்களின் படங்களில்அந்த பயனாளிகளின் முகத்தை மறைப்பதிலும் ஒரு கலைநயம் மிளர்கிறது, ஆம் அந்த பயனாளிகளின் முகத்தின் மேல் ஒரு நட்சத்திரத்தைச் சூட்டியுள்ளார்கள்.

     
      நட்சத்திரக் கொடையாளர்கள் வாழிய!!
நலந்தா செம்புலிங்கம்
16.04.2020

குறிப்பு: கலவைச் சோறு ஒரு மொழிப் பண்பாட்டு அமைப்பாகும்.  இளம் படைப்பாளிகளை வெளிக் கொணர்வதில் இவ்வமைப்பு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது.  தலைவர்: எபினேசர் மனோகரன்  (அலைபேசி 9865274849) செயலர்: இமயம் சரவணன்   (அலைபேசி 9585313161) பொருளாளர்: திருக்குறள்தாசன் இராசேந்திரன் (அலைபேசி 9363124665)




Tuesday, 14 April 2020

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

"வீறியெழு" தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாளும் கோளும்
வானியலும் தேர்ந்தவர்
கண்ட. கொண்டாடிய
சித்திரைப் புத்தாண்டு
நன்னாளில் வாழ்த்துக்கள்!



உயிர்க் கொல்லி
வைரஸ் கொரோனா !
நேர்மை கொல்லும்
வைரஸ் லஞ்சம் !
முன்னது தொற்றிக் கொல்லும்
பின்னது தொற்றித் தொடர்ந்து
நீங்காது நின்றும் கொல்லும்!
வாங்குபவனை மட்டுமல்ல
கொடுப்பவனையும் அடிமையாக்கும்
வினோத போதை வைரஸ்!



புதியதும் பழையதும்
வாட்டி வதைக்குது
சார்வரியே வா! வா!
வீறியெழு எனும் நற்றமிழ்
பெயர் கொண்ட புத்தாண்டே
பழைய புதிய வைரசுகளை
வழியனுப்பி நல்வாழ்வளிக்க
பீடு நடை போட்டு வா!!


நலந்தா செம்புலிங்கம்
14.04.2020

Sunday, 5 April 2020

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!

அழகப்பர் இலக்கியத்தில் புதிய மலர்!!


  
நான் அறிந்தவரையில் அழகப்பர் பற்றி நூல்கள் மிகவும் குறைவு.  ஆங்கிலத்தில் இரண்டு தமிழில் உரைநடையில் வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழாக்க வரலாறு ஒன்று கவிதை நூல்கள் மூன்று உருவக வடிவ வாழ்க்கை வரலாறு ஒன்று. கொடைவிளக்கிற்கு உரை நூல் ஒன்று.

    இன்றைய காலத்திற்கேற்ற, கைபேசி வழயில் இலட்சக் கணக்கானோரை எளிதில் சென்றடையக் கூடிய இசை ஆல்பங்கள்  இரண்டு. கவிதாயினி வித்யா லட்சுமி மற்றும் உதவி இயக்குநர் இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்கள்.  

        கவிதைகள் நிறைய உள்ளன.  இப்பொழுதும் புதிது புதிதாய்ப் பூத்துக் கொண்டிருக்கின்றன.  அந்த வகையில் அழகப்பர் இலக்கியத்தில் பூத்த புதுமலர் கவிஞர் கண்டனூர் அரசி பழனியப்பனின் அழகப்பர் திருத்தசாங்கம்.
   
        திருத்தசாங்கம் பத்துப் பாக்களால் ஆனது.  ஒவ்வொரு பாவிலும் ஒவ்வொரு உருவகத்தால் பாட்டுடைத் தலைவனைப் போற்றுவது தான் திருத்தசாங்கம்.  கவிஞர் அரசி பழனியப்பன் வள்ளல் அழகப்பரை


           


             1. நாமம்
             2. நாடு
             3. நகர்
             4. ஆறு
             5.  மலை
             6. தேர்
             7. படை
             8. பறை
             9. தார்
           10. கொடி



என்ற பத்து உருவங்களால் போற்றுகிறார்.

ஒரு மனிதனுக்கென ஆறு இருக்க முடியுமா? நாடு நகரத்திற்குத் தானே ஆறு இருக்க முடியும் ? அழகப்பருக்கென ஆறு இருக்கிறதாம் அது மாணவர்களின் அறிவு எனும் ஆறாம்.

மனம் தான் வள்ளலின் மலை என்கிறார்.  இதைச் சொல்ல ஒரு கவிஞன் தேவையில்லை. பிறகு, அரசி பழனியப்பன் எங்கே முத்திரையைப் பதிக்கிறார்? அழகப்பரின் மனம் எனும் மலைக்கு நிகரான ஓங்கிய மலை எங்கே? என்ற கேள்வியால் அழகப்பரின் மனம் தான் உலகிலேயே ஓங்கிய மலை நிலைநாட்டுகிறார்.

அழகப்பர் நடந்த மாபெரும் சபைகளிலெல்லாம் ஆயிரம் மாலைகள் சூட்டப்பட்டன, எனினும் அவருக்கான மாலை எது? பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு சூட்டும் பட்டங்கள் தான் அழகப்பரின் மாலையாம்.

அழகப்பர் ஈடுயிணைல்லா வள்ளல் பல் தொழில் அதிபர் கல்விமான்.  அவருக்குப் படையெல்லாம் தேவையா?  தேவையோ தேவையில்லையோ அழகப்பருக்கு ஒரு பெரிய படை இருந்ததாம் அது மாணவர்கள் எனும் வெற்றிப் படையாம்.

இவை எல்லாவற்றையும் விஞ்சுகிற உருவகம், கொடி எனும் உருவகம், இந்த தசாங்கத்தின் நிறைவுப் பாடலாக அமைகிறது.  இது  அரசி பழநியப்பனுக்கு கவிதா மண்டலத்திலும் குறிப்பாக அழகப்பர் இலக்கியத்திலும் தனித்த நிலைத்த இடத்தை பெற்றுத் தரும்.

ஒரு கொடி அதன் நிறத்தாலோ அது ஏந்திப் பட்டொளி வீசும் இலச்சினையாலோ அறியப்படுகிறது.  அழகப்பர் கொடியின் நிறத்தைப் பற்றியோ இலச்சினை பற்றியோ கவிஞர் அரசி பழநியப்பன் எதுவும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் கொடையறம் தான் அழகப்பரின் கொடியாம்.

இது நிச்சியமாக கவிஞரின் தந்தை அமரர் மகாகவி அரசியின் மனதை நிறைக்கும் தமிழ்ப் பா தான் ஐயமில்லை.

வள்ளல் அழகப்பர் திருத்தசாங்கம்
நாமம்
கூட்டை விரும்பாத கோலக் கிளியேநம்
பாட்டுடைய வள்ளல்பேர் மாண்புரைப்பாய் - போற்றும்
அலகில் கொடையால் அகிலம் புரந்த
அழகப்பர் என்பதுவே யாம்
நாடு
வண்ணப் பசுங்கிளியே! மாண்பார் அழகப்பர்
நண்ணிப் பிறந்ததிரு நாடுரைப்பாய்!- எண்ணில்
கொடைபுரிந்தார் நாடு குடியால்,பண் பாட்டு
நடையிலுயர் நல்லதமிழ் நாடு
நகர்/ஊர்
வான்பறக்கும் பைங்கிளியே! வள்ளல் அழகப்பர்
தான்பிறந்த நன்னகரம் தானுரைப்பாய் !- வான்தழுவு
கோட்டைகளால் ஓங்குசெல்வக் கோட்டையூர் செட்டிமக்கள்
நாட்டிலுயர் வள்ளல் நகர்
ஆறு
மழலை மொழிகின்ற வண்ணக் கிளியே!
அழகப்பர் ஆறதுவும் யாதாம்?- உளத்தே
செறிவாகி மாணவரின் சீரை உயர்த்தும்
அறிவுகளே வற்றாத ஆறு
மலை
மலைக்கும் அழகுடைய பைங்கிளியே! வள்ளல்
நிலைக்கு நிகர்மலையை நீசொல் !- உலகில்
இனிதோங்கு மாமலைதான் ஏதுநிகர்?வள்ளல்
மனமே உயர்ந்த மலை.
தேர்/ஊர்தி
கூரலகுப் பைங்கிளியே! கோமான் அழகப்பர்
தேரதனைச் சற்றே தெரிவிப்பாய் - காரைநகர்க்(கு)
அன்(று)ஈந்த கல்வி அறுவடைசெய் சோலைகளின்
தென்றல் அவரூரும் தேர்
படை
சாய்ந்து நடைபயிலும் தத்தையே! வள்ளலுக்கு
வாய்ந்த படையை மகிழ்ந்துரைப்பாய்! - வாய்ந்தசெல்வம்
ஆனவரை கல்விக்கே அள்ளிக் கொடுத்ததனால்
மாணவரே வெற்றிப் படை
பறை/முரசு
காண இனிய கவினார் பசுங்கிளியே!
தானக் கொடைஞர்பறை சாற்றிடுவாய்- ஞானமருள்
வேதங்கள் போலும் வியன்பல் கலைக்கழகப்
பாடங்கள் கொட்டு பறை

தார்
கொஞ்சுமொழி அஞ்சுகமே! கோமான் அழகப்பர்
நெஞ்சமகிழ் தாரெதுவோ நீயுரைப்பாய் !- விஞ்சுமுயர்
பட்டங்கள் மாணவர்க்குப் பல்கலையார் சூட்டுவதே
இட்டமலர்த் தாராம் இவர்க்கு
கொடி
பச்சைக் கிளியே! நம் வள்ளல் அழகப்பர்
மெச்சு புகழ்க்கொடியை விண்டுரைப்பாய்! - சற்றும்
தடையின்றிக் கல்விக்கே தாளாற்றித் தந்த
கொடையறமே ஏத்து கொடி.
அரசி .பழனியப்பன்
05.04.2020