Thursday 16 April 2020

இயலார் அயலார் அல்ல!!


இயலார் அயலார் அல்ல!!

      வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கு 10 இயல்களை உடையது.  உலகக் கடன் என்பது பத்தாம் இயல். அதில் மாணவர், செல்வர் ,ஆசான்கள் என ஒவ்வொரு தரப்பினரும் வள்ளல் அழகப்பருக்கு  எப்படி நன்றி செலுத்த வேண்டும் என எடுத்துரைப்பார். அதில் கொடை நன்றி என்ற தலைப்பில் ஒரு  பாட்டு

“காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த//
 தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் //
கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து //
காட்டுவோம் நன்றிக் கடன்”

நாமும் கொடை செய்வது தான்வள்ளல் அழகப்பருக்கு  செலுத்தும் நன்றிக் கடனாகும் என்கிறார் வ.சுப.மா.

   ஒவ்வொருவரும் கொடைஞராகவேண்டுமென்ற வ.சுப.மாணிக்கனாரின் கனவு நனவாகும் சுழலை கொரோனா நெருக்கடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொடை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் பல நல்ல உள்ளங்களில் ஊற்றெடுத்து, உடனடியாக கொடையளித்தும் வருகிறன்றனர்.  கொடையாளிகள் பொருள்களை  பயனாளிகளுக்கும் கொடுக்கும் படத்தை சமூகஊடகங்களில் வெளியிடுகிறார்கள்.  அந்தப் படங்கள் தான் இந்தக் கொடை மனப்பான்மையைத் தொற்றாக எட்டுத் திசையிலும் பரவ வைத்திருக்கிறது, மகிழ்ச்சி.  ஆனால் பயனாளிகள் படத்தை வெளியிடலாமா? என்றொரு நெருடலும் மெல்ல எழுகிறது.

    இந்த நெருடலுக்கு இடமளிக்காமல் தேவகோட்டை கலவைச் சோறு அமைப்பினர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து உதவி வருகின்றனர். அவர்களை இந்த தொண்டு அமைப்பினர் பயனாளிகள் என்று கூட குறிப்பிடவில்லை. இயலார் அயலார் அல்ல என்றே சுட்டுகிறார்கள். 

    கலவைச் சோறு அமைப்பினரும் பொருள் தொகுப்புகளை வழங்கும் படங்களை வெளியிடுகிறார்கள், மிகுந்த அக்கறையோடு பயனாளிகளின் முகம் தெரியாமல் படம் வெளியிடுகிறார்.  இவர்களின் படங்களில்அந்த பயனாளிகளின் முகத்தை மறைப்பதிலும் ஒரு கலைநயம் மிளர்கிறது, ஆம் அந்த பயனாளிகளின் முகத்தின் மேல் ஒரு நட்சத்திரத்தைச் சூட்டியுள்ளார்கள்.

     
      நட்சத்திரக் கொடையாளர்கள் வாழிய!!
நலந்தா செம்புலிங்கம்
16.04.2020

குறிப்பு: கலவைச் சோறு ஒரு மொழிப் பண்பாட்டு அமைப்பாகும்.  இளம் படைப்பாளிகளை வெளிக் கொணர்வதில் இவ்வமைப்பு மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது.  தலைவர்: எபினேசர் மனோகரன்  (அலைபேசி 9865274849) செயலர்: இமயம் சரவணன்   (அலைபேசி 9585313161) பொருளாளர்: திருக்குறள்தாசன் இராசேந்திரன் (அலைபேசி 9363124665)




No comments:

Post a Comment