Thursday, 4 April 2019

அழகப்பர் பதிவுப் படம் (STICKER)



அழகப்பர் பதிவுப் படம் (STICKER) 

       
          2015 ஆம் ஆண்டு கொடையின் கதை நூலின்  மூன்றாம் பதிப்பை வெளியிட்டோம். அந்த மூன்றாம் பதிப்பில் அழகப்பரைப் பற்றி அதுவரை வெளிவந்திருந்த  11 நூல்களின் பட்டியலை வெளியிட்டோம். அந்த 11 நூலைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் முகிழ்ந்தது. நூல் வெளியீட்டு விழாவில் 11 நூல்களையும் அறிமுகம் செய்வதற்காக எல்லா நூல்களையும் ஒரு சேர எழுத்து எண்ணிப் படித்தேன்.

        பேராரிசிரியர் ச. குழந்தைநாதன் எழுதிய கோடி கொடுத்த கொடைஞனும் அவற்றுள் ஒன்று.  ஆனால், நான், அந்த நூல்  எத்தனையாவது முறையாகப் படிக்கிறேன் என்று கணக்கெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.

         அந்த நூலில் இரண்டு பகுதிகள் என்னை பெரிதும் கவர்ந்த பகுதிகள் 

         அந்த நூலில் அழகப்பரின் பங்குச் சாதனைகள் ஓவியமாகவே தீட்டப்பட்டிருக்கும்.  ஒரு கட்டத்தில்  அவர் பால் பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி  திட்டமிட்டுப் பங்குச் சந்தையில் அவருக்குப் பேரிழப்பை ஏற்படுகிறார்கள். அது எனக்கே ஏற்பட்ட இழப்பை போல துடித்தேன், அது ஒரு புனைகதை போல என்னை சுண்டி இழுத்தது.
 அது தான் எழுத்தாளனின் வெற்றி.  

          172 ஆம் பக்கத்தில் அழகப்பர் கடைசி நாளில் கடைசி சில மணி நேரங்களில் தன் நினைவை இழந்தபோதும் கல்லூரி வளாகத்தினுள் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசியதையும் எழுதியிருப்பார், கண்ணீர் சிந்தாமல் அந்த 172 ஆம் பக்கத்தைக் கடக்கவே முடியாது.

           . ஒரு நூலை, அதன் ஆசிரியர்/நாயகன்/கருத்து பால் ஏற்பட்ட தாகத்தினால் வாசிப்பதற்கும்  நூலறிமுகத்திற்காகவோ மதிப்பீட்டிற்காகவோ வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  

            இம்முறை கோடி கொடுத்த கொடைஞனை நூலறிமுகத்திற்காக எழுத்தெண்ணி வாசித்த போது தான் 180 ஆம் பக்கத்திலிருக்கும் ஒரு சொற்றொடர் நெஞ்சில் தைத்தது.  அந்த சொற்றொடர் யார் எழுதிய சொற்றோடர்? எனப் பலரிடம் புதிர் போட்டேன்.  ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வ.சுப. மாணிக்கனார் என அடித்துச் சொன்னார்கள். ஒரேயொருவர் சொன்ன மாற்று விடையோ கண்ணதாசன் என்பதாகும்.

               வ.சுப. மாணிக்கனாரே எழுதியதைப் போன்ற மயக்கத்தைத் தந்த  அந்த சொற்றொடர் என்ன உறங்கவிடவில்லை.

                வள்ளல் அழகப்பரை இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கும் அச்சொற்றொடரை பிரபலமாக்க வேண்டுமென்ற அவாவில் ஒரு பதிவுப்படத்தை (STICKER) உருவாக்கி அழகப்பர் படத்தோடு அச்சொற்றொடரையும் பிரசுரம் செய்தோம். அந்தக் காவியச் சொற்றொடர்:

தொண்டால் பொழுதளந்த தூயர்!

அந்தப் பதிவுப் படம் (STICKER) தான் கொடைவிளக்கு புலனக் குழுவின் இலச்சினைப் படமாகத் திகழ்கிறது.

நலந்தா செம்புலிங்கம்
04.04.2019

குறிப்பு
 1. பதிவுப் படத்திற்கு விலை இல்லை. 
 
 2. விரும்புகிறவர்களுக்கு (ஒருவருக்கு 2 படங்கள்) பதிவுப் படம் அன்பளிப்பாக வழங்கப்படும். 
 
 3.  இந்தப் பதிவுப்படம் கிடைக்குமிடம் நலந்தா புத்தகக்    கடை  365/4 செக்காலை சாலை அண்ணா நாளங்காடி எதிரில் காரைக்குடி  அலைபேசி 9361410349 

Attachments area

Wednesday, 3 April 2019

பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!



பாட்டுடைத் தலைவர் அழகப்பர்!!

      அழகப்பர் நம் மண்ணின் மைந்தர் என்ற புவி சாரந்த வரையரைகளுக்கு அப்பாற்பட்ட காலத்தின் மைந்தர். அவர் 1909 ஆம் ஆண்டில் பிறந்தார், 1957 ஆம் ஆண்டில் புகழுடம்பு எய்தினார்.  அவர் இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கல்வி என்ற சொல் உள்ளவரை வாழ்வார்.
    
      பிறக்கும் போதே செல்வச் சீமானாகப் பிறந்தோரை ஆங்கிலத்தில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தோர் என்பர்.  ஆனால் வள்ளல் அழகப்பரை தங்கக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தான் சொல்ல வேண்டும், அத்தகைய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.  அந்தத் தங்கக் கரண்டியையும் பிளாட்டினம் கரண்டியாகப் பெருக்கினார்.

          ஒரே நாளில் எட்டு கார்களை வாங்கினார்,  ஒரு நாளில் எட்டு விமானங்களை வாங்கினார். ஐரோப்பியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர ரிட்ஸ் விடுதியை நினைத்த பொழுதிலேயே வாங்கினார்.

          1947 ஆம் ஆண்டில் மருத்துவரும் கல்வியாளரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நெடுநாள் துணை வேந்தருமான டாக்டர் ஏ. எல். முதலியார் செல்வந்தர்கள் தான் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவி சுதந்திர இந்தியாவன் கல்விப் பணிக்கு தோள் கொடுக்க வேண்டும் என ஒரு கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். வள்ளல் அழகப்பர் அந்தக் கூட்டத்திலேயே நான் எங்கள் மாவட்டத்தில் கல்லூரி தொடங்குவேன் என உறுதியளித்தார். உறுதியளித்த 45 நாட்களுக்குள் காரைக்குடியில் கலைக் கல்லூரியைத் தொடங்கினார்.  அந்தப் பொன்னான 1947 ஆம் ஆண்டிலிருந்து அவர் புகழுடம்பு எய்திய  1957 ஆண்டு வரை காரைக்குடியில் சங்கிலித் தொடராக கல்லூரிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் தொடங்கிய வண்ணம் இருந்தார்.  பல மாநில அரசுகள் போட்டி போட்ட மைய அரசின் மின் வேதியல் ஆய்வகத்தை (சிக்ரி) தமிழகத்திற்கு காரைக்குடிக்கு வென்று தந்தார்.  அழகப்பரின் வாழ்க்கையை மூன்று நிலைகளாக தொகுத்து அழகப்பரின் வரலாற்றை Dr. RM. Alagappa Chettiar: Life and Legacies of a Visionary எனும் நூலாக எழுதிய டாக்டர் கே. வயிரவன்
, இந்த 1947 -- 1957 காலவெளியை அழகப்பரின் கொடைக் காலம் என்பார். எனினும் அதற்கும் முன்னரே  கேரளப் பல்கலைக் கழகங்கள், தில்லி கல்வி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியில் துறையை நிறுவியது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி நிறுவியது என கல்விக்குக் கொடையளித்த வண்ணமிருந்தார் அந்தப் பிறவிக் கொடைஞர்.



                   அந்த 1947 -- 1957 காலகட்டத்தில்  வள்ளல் அழகப்பரின் சிந்தனை காரைக்குடியை மையம் கொண்டது. சிக்ரியை காரைக்குடிக்கு கொண்டு வருவதற்காக அவர் அளித்த கொடைகளை போலவே அதற்காக அவர் போராடியதும் மாணப் பெரிது.  குடியிருந்த வீட்டையும் கொடுத்தார்.  பிறவிக் கொடைஞரும் சிறந்த கல்வியாளருமான வள்ளல் அழகப்பர் மக்கள் நெஞ்சங்களில்  ஒரு தலைவனாகவும் திகழ்ந்தார். புலவர்களுக்கும் பாட்டுடைத் தலைவரானார்.

             வள்ளல் அழகப்பரை அன்றும் இன்றும் பாடாதவர்கள் இல்லை.  ஆனால் பாட்டுடைத் தலைவன் என்று பேசத் தலைப்பட்டால், வள்ளல் அழகப்பரை மிகச் சிறப்பாக கொண்டாடும் ஒரு பாட்டையோ, கட்டுரையையோ, வாழ்க்கை வரலாற்றையோ நூலையோ, படைப்பையோ இனம் கண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.

அழகப்பரின் கல்வி நிறுவனங்களில், நிறுவனர் வாழ்த்தாக  பாடப்படும், வெண்பா, 

           கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
           வீடும் கொடுத்த விழுத் தெய்வம் - தேடியும்
            அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
            வெள்ளி விளக்கே விளக்கு

வ,சுப, மாணிக்கனாரின் கொடைவிளக்கு நூல் இடம் பெற்ற புகழ் பெற்ற வெண்பாவாகும்.



Dr. V.Sp. M  (addressing the gathering) with Vallal Alagappar

           கொடைவிளக்கு, அழகப்பர் புகழ் பாடும் வ.சுப, மாணிக்கனாரின் முத்திரைக் காப்பியம்.  வ.சுப,மா வும் சங்கப் புலவரைப் போன்றவர் கொடை விளக்கும் சங்கத் தமிழ் நூலைப் போன்றது.  இதற்கு மேலும் பாட்டுடைத் தலைவன் ஆய்வு தேவையா?  

         ஒரு தடகளப் போட்டியில் தனித்தனியாக பல பந்தயங்களும் விளையாட்டுகளும் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவர் வெற்றி பெறுவார்.  அதிக நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர் தடகளப் போட்டியின் பெரும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

          ஒரு தடகளப் போட்டியில் பெரும் வெற்றியாளர் என ஒருவருக்கு மணிமுடி சூட்டப்பட்டாலும் தனித் தனி நிகழ்வுகளில் சில வெற்றியாளர்கள்  இருக்கக் கூடும்.  அத்தகைய தனி நிகழ்வு வெற்றியாளர்களின் சாதனைகள் நம் நெஞ்சைத் தொடும்.

         அழகப்பர் புகழ்பாடும் சீரிய பணியில் மணிமுடி நூல் கொடைவிளக்கு தான் மணிமுடி புலவர் வ.சுப. மாணிக்கனார் தான், அதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.  எனினும் தனித்தனியாக ஒரு எழுத்தாளரும் மற்றொரு கவிஞரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

           "தொண்டால் பொழுது அளந்த தூயர்" 

           என்றொரு அஞ்சலி. ஆனால் வ.சுப. மாணிக்கனாரின் கொடைவிளக்கில் இடம் பெறவில்லை என்பது மட்டும் உறதியாகத் தெரியும்.

        இவ்வளவு சிறப்பாக வள்ளல் அழகப்பருக்கு யாரால் அஞ்சலி செலுத்த முடியும்?  வ.சுப. மாணிக்கனாரே வேறு நூலில் எழுதியிருப்பாரோ?

          "தொண்டால் பொழுது அளந்த தூயர்"   எனும். இச்சீரிய சொற்றொடரை யார் எழுதினார் எனப் பலரிடம் புதிர் போட்டேன். 

         ஒருவரைத் தவிர அத்தனை பேரும் வ.சுப,மா என்றார்கள்.  ஒரேயொருவர் அளித்த வேறொரு பதில் கவிஞர் கண்ணதாசன்.  

          உள்ளபடியே இந்த கவித்துவமிக்க சொற்றொடரை எழுதியவர் கவிஞர் அல்லர். மிகச் சிறந்த பேரரசிரியரும் எழுத்தாளருமான ச. குழந்தைநாதன் தான்.   இந்த சொற்றொடர்  அவர் எழுதிய கோடி கொடுத்த கொடைஞன் நூலில் 180 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

            இது பேராசிரியர் குழந்தைநாதனின் சொற்றொடர் தான், ஆனால் அனைவரையும்  வ.சுப, மா. வின் வரி என மயக்கம் கொள்ள வைத்திருக்கிறதே! 

        வள்ளல் அழகப்பரை புலவர்களெல்லாம் கொடை, கல்வி எனும் இரண்டு தூரிகைகளால் வரைந்த போது தொண்டு எனும் அழகப்பரின் மற்றொரு சால்பைத் தூரிகையாக்கிய பேராசிரியரின் கவித்துவமான அஞ்சலியை சிறந்த அஞ்சலி என்றால், எவரையும் விட வ.சுப. மாணிக்கனாரின் நெஞ்சம் தான் அதிகமாக மகிழும்.

          வள்ளல் அழகப்பர் புகழுடம்பு எய்திய போது  மாணவர்கள், ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள்,  கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் செலுத்திய அஞ்சலிகள் ஒன்றை ஒன்று விஞ்சும், நெஞ்சை உருக்கும்.

            அந்த 1957 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல ஆண்டுகள் கடந்து, மாணவர்க்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.  அந்த நூல், தம் கல்விக் கூடங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தன் பிள்ளைகளாக வரித்துக் கொண்ட வள்ளல் அழகப்பருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.

          அந்த வள்ளலுக்கு பாடப்பட்ட அஞ்சலிகளெல்லாம் அவரின்  கொடை மனம் கொடைத் திறன் ஆற்றல் ஆளுமை சமூக அக்கறை இவற்றையெல்லாம் சுட்டி அந்த வள்ளலை இழந்து விட்டோமே என உலகம் அவரது இழப்பால் எப்படி வாடுகிறது என்ற கோணத்தில் அமைந்திருந்தன.

          ஆனால் அந்த மாணவர் கையேட்டு ஆசிரியரின் காணிக்கையுரையோ அழகப்பரின் இழப்பு உலக மாந்தருக்கு மட்டுமல்ல கல்வித் தெய்வத்திற்கே இழப்பு எனச் சுட்டி சிலிர்க்க வைக்கிறது.

         வள்ளல் அழகப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டாடும் கவிதைகள், படைப்புகள் ஆயிரம் ஆயிரம், ஆயினும் இந்தக் கவிதையில் தான் வள்ளல் அழகப்பருக்கான சிம்மாசனம் மிகக் கச்சிதமாக செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். 
Kavingar Maa. Kannappan

            பாரி கரம்பற்றிப் 
                 பறம்பு மலைகூறும்
            காரிகரம் பற்றிக்
                 கவிகூறும்! -  தேரின்
            அழகன் கரம்பற்றி 
                  யார் கூறும் - கூறும்
             கலைமகளின் மஞ்சள் கயிறு!

  
அந்த மாணவர் கையேட்டின் ஆசிரியர் ஒரு கல்லூரி பேராசிரியர், மாபெரும் கவிஞர், கண்ணதாசனை தன் கவிதைகளாலும் கவர்நத கவிஞர் அவர் தான் கவிஞர் மா. கண்ணப்பன்.

நலந்தா செம்புலிங்கம்
02.04.2019

"வள்ளல்" --- தவம் செய்த சொல்!

            தவம் செய்த சொல்!!

 நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.  
      
       ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார்  தான்.

        தவமிருப்பது   எந்தச் சொல் தெரிமா?



Dr. V.SP.M (addressing the gathering)  with Vallai Alagappar

                 வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம்.   அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.   

     ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை.  நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.  

       அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா   எடுக்கும்  வ.சுப.மா.  நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
      
       தமிழ் நெஞ்சினீரே வருக வருக

                       இனி,  வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா  (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)

                           வள்ளற்        றமிழ்சொல்      வணங்கித்                      தவஞ்செய்து
                          கொள்ளப்   பிறந்த                 கொடையழகன்           உள்ள
                          உடைமை   அனைத்தும்      ஒழித்தான்                     ஒழியார்
                          மடமை        தொலைக்கும்    மகன்

Monday, 4 March 2019

விண்ணில் கவிதை வரைவான்

விண்ணில் கவிதை வரைவான்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^







மீசை வைத்த பாரதி
பாரத மாதாவின்
இருபதாம் நூற்றாண்டு தவப்புதல்வன்
தமிழில் கவிதை புனைந்தான்
மனதில் உறுதி வேண்டும் என்றான்
ரெளத்திரம் பழக வேண்டும் என்றான்

அவனுக்கு ஒரு புதிய வாரிசு 
மீசை வைத்த அபிநந்தன்
விண்ணில் கவிதை வரைவான்
மனதில் உறுதி கொண்டான்
ரெளத்திரம் செய்து காட்டினான்
விசையுறு பந்தினைப் போல்
முன் தலைமுறை விமானத்தால்
புதிய தலைமுறையை வீழ்த்தினான்

அந்த அறுபது மணிநேரமும்
அகிலத்திற்கே தலைப்புச் செய்தியானான்
 
தன்னை மறைத்து தன்னலம் துறந்து
நாட்டைக் காக்கும் கடும்பணியாளன்

அவன் வீரத்தை போற்றுவோம்
அவன் தீரத்தைப் பாடுவோம்

நல்லோரும் அல்லோரும் துரத்துகிறார்கள்
செயல் ஒன்று நோக்கம் வேறு வேறு
அவன் தனிமை போற்றுவோம்
வலைத்தள ஆர்வலர் விலகியிருத்தலும்
ஊடக சோடனைகள் படரலாமலித்தலும்
அவன் பணி சிறக்க நம் கடனாகும்

அவன் தீரம் போற்றுவோர்
போலிகள் முகத்தை கிழிப்பதும்
துரோகிகள் சதியை முறிப்பதுமே
நன்றி மலர்களாகும்

நலந்தா செம்புலிங்கம்
04.03.2019

Thursday, 28 February 2019

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!

ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

         எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!

         
கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது, செயற்பாட்டில் சாத்தியமா?

         
எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறதல்லாஅதனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாம் என எவ்வளவு பெரிய மேதை எப்படி விளக்கினாலும் அது கோட்பாட்டின் விளக்கம் தான்.  உள்ளபடியே 5, 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் கூட ஆலோசனை நிலை வரையில் தான் அனவரும் பங்கேற்கலாம், முடிவெடுக்கும் அதிகாரம் ஒருவரிடம் மட்டும் இருந்தால் தான் அமைப்பு சீராக இயங்க 
முடியும். கணவன் மனைவி இடையே கூட யாராவது ஒருவர் விட்டு கொடுத்துப் போகவேண்டும் என்றே வழிகாட்டப்படுகிறது.  ஆகவே "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!" என்பது ஒரு சிறந்த கோட்பாட்டின் அலங்கார முழக்கம் தான். 

         ஆனால் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே" என்ற அந்த அலங்கார முழக்கத்தையே அச்சுப் பிசகாமல் அமலாக்கிவருகிறது ஒரு அதிசய வகுப்பறை!!        

       
அது தான் நாட்டின் முன்மாதிரிப் பள்ளிகளுள் ஒன்றாகத் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியின் இந்த ஆண்டிற்கான சிறந்த வகுப்பறை விருதினைப் பெற்ற 9A வகுப்பறை.

       இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா 21.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  அவ்விழாவில் பள்ளியின் பல்வேறு சாதனையாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   சிறந்த வகுப்பறைக்குரிய விருது விருதுகளின் விருது என்றே அறிமுகப்படுத்தப்பட்டது..  21 வகுப்புகளில் 7A & 9A  ஆகிய இரண்டு வகுப்புகள் மட்டுமே தேர்வு நிலையை (NOMINATION) எய்தியிருந்தன.  இந்த இரண்டு வகுப்பறைகளைப் பற்றியும்  ஒலி ஒளிப் பதிவுகள் ஆண்டு விழாவில் திரையிடப்பட்டன.

           இந்த வகுப்பறை எங்கும் பொன்மொழிகள் எழுதி வைக்கப் பட்டுள்ளது. 
ஆனால் அவை வெறும் சுவர் அலங்காரமாக இல்லை. ஒவ்வொன்றிற்கும் 
  உள்ள  பின்னணியையும், அவற்றை மாணவர்கள் அணுகும் முறையையும், ஒலி ஒளிப் பதிவில் விளக்கினார்கள்.  அந்தப் பொன்மொழி அட்டைகளுள் ஒன்று MAGIC WORDs  இந்த மாயச்  சொற்களைப் பயன்படுத்தினால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மாயமாகும் என்கிறார்கள் அந்த சொற்கள்.Excuse Me, Sorry. Please, Thank you, Welcome. என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்கிறது 9A  வகுப்பறை.
       
            இந்த வகுப்பறையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர்  Brother  Sister என்று அழைத்துக் கொள்கிறார்கள்.  இது போன்ற அணுகுமுறைகள்  நற்பண்புகளை உரிய பருவத்தில், பதின்பருவத்தில் இருக்கும் இந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே
விதைக்கிறது.

            உடல் நலம் பேணுதலில்  நீர் அருந்துதலுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. இந்த வகுப்பில் மாணவர்கள் ஒழுங்காக நீர் அருந்துகிறார்களா  என்பது  கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது.  பல மாணவர்கள் குறிப்பாக மாணவியர் பள்ளியில் இருக்கும் பொழுது ஓய்வு அறைக்குச் செல்லத் தயங்குவார்கள்.  இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணி்க்கை மிக மிக அதிகமாக இருப்பதால் ஒய்வு அறை பயன்பாட்டிற்கே வகுப்புவாரி நேர ஒதுக்கீடு உள்ளது.  இந்த நெருக்குடி காரணமாக தயக்க மனப்பான்மை உள்ள மாணவர்கள் ஒய்வு அறைக்கு செல்லவதை எளிதாக தவிர்த்துவிட முடியும்.  ஆனால் 9 A வகுப்பு ஆசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி அதற்கு துரும்பு அளவும் இடமளிப்பதில்லை

         தம் மாணவர்களின் மாணவியர்களின் உடல் நலத்தையும் குறிப்பாக பதின்பருவ நிலையையும் கருத்தில் கொண்டு வகுப்பு ஆசிரியயை ஜாக்குலின் கனிமொழி மாணவர்கள் இவற்றை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை மாணவர்களுள் ஒருவர் மூலமாகவே கண்காணிக்கிறார்.  அவரே கண்காணிப்பதை விட மாணவர் ஒருவர் மூலமாக கண்காணிக்கும் போது தயக்கங்கள் எளிதில் கரைந்துவிடும்.

          உரிய அளவு நீர் அருந்துதல், ஒய்வு அறை பயன்படுத்ததுல், இனிய சொற்களை கையாளுதல், சீருடையை முறையாக அணிதல், வீட்டுப்பாடம் செய்தல், பெற்றோர் ஒப்புகை பெறுதல், போட்டிகளில் பங்கேற்றல் .......    எனப் பல நற்பண்புகளை எல்லாம் இனம் கண்டு ஒவ்வொரு பண்பையும் எல்லா மாணவர்களும் கடைபிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பையும் ஒவ்வொரு பண்பிற்கு ஒரு மாணவர் என மாணவர்களிடமே ஒப்படைத்துள்ளார் வகுப்பாசிரியை திருமதி ஜாக்குலின் கனிமொழி.
           
           அந்தந்தப் பண்பைக் கண்காணிக்கும் மாணவர் அந்தந்தப் பண்பிற்கு உரிய தலைவர். அதன்படி ஐம்பது மாணவர்களும் தலைவர் ஆகிவிட்டார்கள்.  ஆகவே  9A  வகுப்பறையில் உள்ளபடியே எல்லோரும் அந்த வகுப்பறையின் மன்னராகிவிட்டார்கள்.

         மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகவே மாற்றிவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் வணிகமயக் கல்வியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்  காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையில் கற்றல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது, பண்பாடு மிகுதியாகவும் உள்ளது.

           மிகச் சிலவாக உள்ள மிக நல்ல பள்ளிகளில் தான் கற்றல் அப்பாலும் மாணவர்களை  ஏதேனும் ஒரு நல்ல தடத்தில் வழி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.  அப்பள்ளிகளும் மாணவர்களை  சுய முன்னேற்றப் பயிற்சிகள், கல்வி சார்ந்த போட்டிகள் விளையாட்டு சார்ந்த போட்டிகளில் வழிநடத்துகிறார்கள்.  
              காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் 9A  வகுப்பறையோ மேலும்  ஒரு படி உயர்ந்து நிற்கிறது. 9A  வகுப்பறையோ தம்  மாணவர்கள், நற்பண்பு மிக்க வாழ்க்கையை இந்தப் பருவத்திலேயே வாழ்வதற்கு வகுப்பறையையே உயர் களமாக் கொடுத்திருக்கிறது..

            என் அறிவிற்கு எட்டியவரை இந்த நடைமுறை பண்பாட்டுப் பயிற்சிக்கு முன்னுதாரணம் இல்லை. ஆகவே இந்த நன்முறையை ஜாக்குலின் வகுப்பறை வாழ்க்கை முறை என்றே அழைக்கலாம்.

          ஒவ்வொரு ஜாக்குலின் மாணவரும் இன்னொரு பண்பாளரையாவது உருவாக்குவார்.  ஆயிரமாயிரம் ஜாக்குலின் மாணவர்கள் ஒரு முன்னுதாரணமான சமூகத்தை படைப்பார்கள்.


நலந்தா செம்புலிங்கம்


28.02.2019






Wednesday, 20 February 2019

காமராசர் திறந்து வைத்த பள்ளியின் ஆண்டு விழா !






காமராசர் திறந்து வைத்த பள்ளியின் 
ஆண்டு விழா !  

            தலைப்பு பிடித்திருக்கிறதா? 

            காமராசர், பள்ளி, ஆண்டு விழா எல்லாம் நல்ல விஷயங்கள் தானே எனப் பெருபான்மையினர் வரவேற்பார்கள்.  சில நக்கீரர்கள் எத்தனையாவது ஆண்டு விழா என்று சொல்லவில்லையே என்று குற்றம் காண்பார்கள்.


             ஐந்தாவது விருது வழங்கும் விழா என பதிலளித்தால்
      
              தலைப்பில் ஆண்டு விழா விளக்கத்தில் விருது வழங்கும் விழாவா?

              காமராசர் தான் 1975 ஆம் ஆண்டிலேயே இயற்கை எய்திவிட்டாரே, 2019 ஆம் ஆண்டில் அவர் திறந்த வைத்த பள்ளிக்கு ஐந்தாம் ஆண்டு விழாவா? என கேள்விக் கணைகளை விளாசுவார்கள்

            இது, உள்ளபடியே 1936 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காரைக்குடி இராமநாதன் செட்டியார்  பள்ளியைப் பற்றிய செய்திதான்.
       
        ஆனால் நான் சாட்சியோடு தான் சொல்கிறேன்  காமராசர் வந்தார்! இந்த சர்ச் வீதிக்கே வந்தார்! பள்ளியத் திறந்து வைத்தார்!  

         அந்த வரலாற்று நிகழ்வு அன்றைய பள்ளித் தலைமை ஆசிரியர் உயர்திரு கெளஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  அந்தத் தலைமை ஆசிரியர் இப்பொழுது மதுரையில்  தான் இருக்கிறார்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்த வைக்க ஒரு முதலமைச்சர்  வந்தார், வெறும் மூன்று கார்களில்  வந்தார்.இவையெல்லாம் 1963 ஆண்டின் வரலாற்று சுவடுகள்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்து வைக்க ஒரு முதலமைச்சரே வருவதும், வெறும் மூன்றே கார்களில் வந்ததையும், இன்று நாம் யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

         தமிழகத்தின் கடைக்கோடி ஏழை எளிய பிள்ளைகளுக்கு கல்வியை நினைந்தூட்டிய கல்விக் காவலனை நினைக்காத நாளைலெல்லாம் நாளல்ல.

        அந்த நிகழ்வில்  திறப்புவிழாக் கல்வெட்டிற்கு காமராசர் மலர் தூவதற்காக மலர் தட்டை ஏந்திய  ஐந்தாம் வகுப்பு மாணவன் வேறு யாரும் அல்ல நம் மாதவன் சார் தான்.  (தலைமை ஆசிரியர் (பணிநிறைவு) மற்றும் அறிவியல் இயக்கத்தின் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழுவின் தலைவர்) 
          
          அப்போது இராமநாதன் செட்டியார் பள்ளி தொடக்கப் பள்ளியாக இயங்கியது.  ஆனால் அதற்கு முன்னர் செக்காலை முதல் வீதி என்றும் அண்ணாமலையார் வீதி என்றும் அறியப்படுகிற வீதியில் செக்காலை பேக்கரிக்கு பின்பக்கம் இயங்கியுள்ளது.

          2002 ஆம் ஆண்டில் இராமநாதன் செட்டியார் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.  2013-14 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  

          அப்போது கல்வித் துறையில் வட்டார மேற்பார்வையாளராகப் பணியாற்றிய திரு ஆ. பீட்டர் ராஜா உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட இராமநாதன் செட்டியார் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 

          இது இந்த உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாவது கல்வியாண்டு.  அன்று மாணவர் எண்ணிகை 288, இன்று 1200.  இந்த உயர்நிலைப் பள்ளி.  ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி என ஈடு இணையில்லா சாதனையை நிகழ்த்திய பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.  

           தலைமை ஆசிரியர் மட்டுமல்லாது அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் உழைப்பும் வெற்றி நாணயத்தின் ஒரு முகம்.  இன்னொரு முகம் பெற்றோர் ஆசிரியர் கழகம்.

            மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்த கொண்டே இருக்கும்.  காரைக்குடியில் இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ழுழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு மாணவரோ ஆசிரியரோ பரிசு, விருது பெற்ற வண்ணம் இருப்பார்.  

        அத்தகைய வெற்றியாளர்களை பள்ளியின் சார்பில்  ஆண்டில் ஒரு நாள் பாராட்டு விழா தான் விருது வழங்கும் விழா.

         இந்த வரிசையில் இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா நாளை(21.02.2019) அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்துள்ள L.CT L  பழநியப்பச் செட்டியார் அரங்கில் நடைபெறவுள்ளது.  
       
   இந்த விழா உச்சிக்கும் உச்சியான மதியம் 2 மணி வெயில் நேரத்தில் ஆரம்பித்து இரவு 8 வரை கூட நீடிக்கும். .100 பேர்களுக்காவது விருது நினைவுப் பரிசு வழங்கிய வண்ணம் இருப்பார்கள்.  ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.  
       
           ஒரு முன்னுதாரணமாக தலைமை ஆசிரியரான திரு ஆரோக்கியசாமியின் மகனான பீட்டர் ராஜா

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். 

என்ற குறள்நெறிக்கோப்ப  இந்தப் பள்ளியை அகில இந்திய அளவில் பேசப்படும் பள்ளியாக வளர்த்துவருகிறார்.
    
நலந்தா செம்புலிங்கம்
20.01.2019

Monday, 11 February 2019

Kashmir & Demonetization

காஷ்மீர் அனுப்பிய அமைதி ரோஜா!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



                     -- நலந்தா செம்புலிங்கம்
                         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 (நோட்டு மாற்றம் காஷ்மீரில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றி காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் ரஹ்மான் பிரமதர் மோடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் கவிதையாக்கம்)


அது கடிதம் அல்ல,
காஷ்மீர் அனுப்பிய
அமைதி ரோஜா!

காஷ்மீர் 
ரோஜாக்கள் பூக்கும்! 
தோட்டாக்களும் வெடிக்கும்!!



சிறுபான்மை (2%)
கலகக் கூட்டம்
பெரும்பான்மை
மக்கள் பேரைக் கெடுக்கும்,
வாழ்க்கையைக் குலைக்கும்!

அடைப்பதற்காகவே
கடை வீதிகள்
எறிப்பதற்காகவே
பள்ளிக் கட்டிடங்கள்
அமைதி என்றொரு சொல்
அகராதியில் மட்டும் இருக்கும்!


படித்த இளைஞர்களுக்கு
வாய்த்த வேலைகள்:
கல் எறிதல்,
ஆயுதம் கவர்தல்,
கைக்குண்டு எறிதல்,
பேரம் பேசாமல் 
கூலி கிடைக்கும்!
யாரோ எங்கோ
அச்சடித்த நோட்டுக்களில்!



எதுவும் நடக்கும் பூமியில்
எட்டாம் தேதிக்கு* பிறகு
நாடெங்கும்
நோட்டு மாற்றம்!
ரோஜா பூமியிலோ
கலகக்காரர்களின்
நோட்டு முடக்கம்!

பொழுது புலர்ந்தது,
கற்கள் தரையிலேயே கிடந்தன,
கையில் எடுப்போரில்லை!

கல்லடிபடாத கட்டிடங்கள்,
கிள்ளிப் பார்த்துக் கொண்டன!

வீதிகளில் நடமாட்டம்!
கடைகளில் வியாபாரம்!
முகங்களில் மகிழ்ச்சி!!


பள்ளிகள் திறந்தன!
தேர்வுகள் நடந்தன!
95 %  மாணவர்கள் எழுதினர்!!
விடைத்தாள் 
திருத்தப்படும் முன்னரே
பதிவானது வெற்றி !



வங்கிகளெங்கும் வரிசைகள்
சலித்துப் புளித்தது நாடு
பெருமிதத்தில் மிளிர்ந்தது 
ஆப்பிள் காடு



மோடி 
இரண்டு நோட்டுக்களைத்
திரும்பப் பெற்றார்,
ஒரு புதிய நோட்டை
அறிமுகப் படுத்தினார்.



காஷ்மீரில்
ஹவாலா ஆறு
வற்றிப் போனது!
கலகம் ஓய்ந்தது
அமைதி மலர்கிறது!!


* 08.11.2016
(நலந்தா செம்புலிங்கம் எழுதிய  நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா? எனும் நூலின் இறுதி அத்தியாயமாக பிரசுரமான புதுக் கவிதை.  பதிப்பாளர்: விஜயா பதிப்பகம், கோயமுத்தூர் தொலைபேசி: 04222394614)