Wednesday 20 February 2019

காமராசர் திறந்து வைத்த பள்ளியின் ஆண்டு விழா !






காமராசர் திறந்து வைத்த பள்ளியின் 
ஆண்டு விழா !  

            தலைப்பு பிடித்திருக்கிறதா? 

            காமராசர், பள்ளி, ஆண்டு விழா எல்லாம் நல்ல விஷயங்கள் தானே எனப் பெருபான்மையினர் வரவேற்பார்கள்.  சில நக்கீரர்கள் எத்தனையாவது ஆண்டு விழா என்று சொல்லவில்லையே என்று குற்றம் காண்பார்கள்.


             ஐந்தாவது விருது வழங்கும் விழா என பதிலளித்தால்
      
              தலைப்பில் ஆண்டு விழா விளக்கத்தில் விருது வழங்கும் விழாவா?

              காமராசர் தான் 1975 ஆம் ஆண்டிலேயே இயற்கை எய்திவிட்டாரே, 2019 ஆம் ஆண்டில் அவர் திறந்த வைத்த பள்ளிக்கு ஐந்தாம் ஆண்டு விழாவா? என கேள்விக் கணைகளை விளாசுவார்கள்

            இது, உள்ளபடியே 1936 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காரைக்குடி இராமநாதன் செட்டியார்  பள்ளியைப் பற்றிய செய்திதான்.
       
        ஆனால் நான் சாட்சியோடு தான் சொல்கிறேன்  காமராசர் வந்தார்! இந்த சர்ச் வீதிக்கே வந்தார்! பள்ளியத் திறந்து வைத்தார்!  

         அந்த வரலாற்று நிகழ்வு அன்றைய பள்ளித் தலைமை ஆசிரியர் உயர்திரு கெளஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  அந்தத் தலைமை ஆசிரியர் இப்பொழுது மதுரையில்  தான் இருக்கிறார்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்த வைக்க ஒரு முதலமைச்சர்  வந்தார், வெறும் மூன்று கார்களில்  வந்தார்.இவையெல்லாம் 1963 ஆண்டின் வரலாற்று சுவடுகள்.

       ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்து வைக்க ஒரு முதலமைச்சரே வருவதும், வெறும் மூன்றே கார்களில் வந்ததையும், இன்று நாம் யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

         தமிழகத்தின் கடைக்கோடி ஏழை எளிய பிள்ளைகளுக்கு கல்வியை நினைந்தூட்டிய கல்விக் காவலனை நினைக்காத நாளைலெல்லாம் நாளல்ல.

        அந்த நிகழ்வில்  திறப்புவிழாக் கல்வெட்டிற்கு காமராசர் மலர் தூவதற்காக மலர் தட்டை ஏந்திய  ஐந்தாம் வகுப்பு மாணவன் வேறு யாரும் அல்ல நம் மாதவன் சார் தான்.  (தலைமை ஆசிரியர் (பணிநிறைவு) மற்றும் அறிவியல் இயக்கத்தின் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழுவின் தலைவர்) 
          
          அப்போது இராமநாதன் செட்டியார் பள்ளி தொடக்கப் பள்ளியாக இயங்கியது.  ஆனால் அதற்கு முன்னர் செக்காலை முதல் வீதி என்றும் அண்ணாமலையார் வீதி என்றும் அறியப்படுகிற வீதியில் செக்காலை பேக்கரிக்கு பின்பக்கம் இயங்கியுள்ளது.

          2002 ஆம் ஆண்டில் இராமநாதன் செட்டியார் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.  2013-14 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  

          அப்போது கல்வித் துறையில் வட்டார மேற்பார்வையாளராகப் பணியாற்றிய திரு ஆ. பீட்டர் ராஜா உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட இராமநாதன் செட்டியார் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 

          இது இந்த உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாவது கல்வியாண்டு.  அன்று மாணவர் எண்ணிகை 288, இன்று 1200.  இந்த உயர்நிலைப் பள்ளி.  ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு மாணவர் எண்ணிக்கையை உயர்த்தி அரசுப் பள்ளி என ஈடு இணையில்லா சாதனையை நிகழ்த்திய பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.  

           தலைமை ஆசிரியர் மட்டுமல்லாது அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் உழைப்பும் வெற்றி நாணயத்தின் ஒரு முகம்.  இன்னொரு முகம் பெற்றோர் ஆசிரியர் கழகம்.

            மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்த கொண்டே இருக்கும்.  காரைக்குடியில் இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு ழுழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு மாணவரோ ஆசிரியரோ பரிசு, விருது பெற்ற வண்ணம் இருப்பார்.  

        அத்தகைய வெற்றியாளர்களை பள்ளியின் சார்பில்  ஆண்டில் ஒரு நாள் பாராட்டு விழா தான் விருது வழங்கும் விழா.

         இந்த வரிசையில் இப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விருது வழங்கும் விழா நாளை(21.02.2019) அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்துள்ள L.CT L  பழநியப்பச் செட்டியார் அரங்கில் நடைபெறவுள்ளது.  
       
   இந்த விழா உச்சிக்கும் உச்சியான மதியம் 2 மணி வெயில் நேரத்தில் ஆரம்பித்து இரவு 8 வரை கூட நீடிக்கும். .100 பேர்களுக்காவது விருது நினைவுப் பரிசு வழங்கிய வண்ணம் இருப்பார்கள்.  ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறும்.  
       
           ஒரு முன்னுதாரணமாக தலைமை ஆசிரியரான திரு ஆரோக்கியசாமியின் மகனான பீட்டர் ராஜா

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். 

என்ற குறள்நெறிக்கோப்ப  இந்தப் பள்ளியை அகில இந்திய அளவில் பேசப்படும் பள்ளியாக வளர்த்துவருகிறார்.
    
நலந்தா செம்புலிங்கம்
20.01.2019

5 comments:

  1. மகத்தான சாதனை

    ஆல மரத்தின் விழுதுகளாய் நலந்தா ஜம்பு செட்டியார் போன்ற வர்கள் இருப்பது உத்தமம்.....

    கற்பூரம் தன்னை எரித்து சுடர் விடுவது போல தலைமை ஆசிரியர் பீட்டர் தன்னை உருக்கி மாணாக்கர் களை செதுக்குவதில் வல்லமை பொருந்தியவர் என்றால் மிகையாகாது.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இவ்வாறான செய்திகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் நம் பெருமையை நாம் உணர முடியும். அருமையான பதிவு ஐயா.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.அனைவரும் அறிய வேண்டிய தகவல்.நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.அனைவரும் அறிய வேண்டிய தகவல்.நன்றி.

    ReplyDelete