Friday 3 August 2018

சுயமரியாதைக்குச் சவால் விடும் சுயநிதிப் பள்ளி

சுயமரியாதைக்குச் சவால் விடும் சுயநிதிப் பள்ளி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^  ^^^^^^^^ ^^^^^^^^^^^ ^^^^^^^^  ^^^^^^^^ ^^^^^^^^^^^
             பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்றான் பாரதி.
              
             ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமத்திலும் (அல்லது ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும்) ஒரு  பள்ளி என தமிழகமெங்கும் ஆயிரக்கணக்காக  கோவில்களை  எழுப்பினார் காமராசர்.

               தமிழகத்தில் தொடக்கக் கல்வியின் இன்றைய  நிலை என்ன? அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில பள்ளிகளே செம்மையாக இயங்குகின்றன.  பெரும்பான்மையான பள்ளிகளின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.  இந்த அவல நிலை தான் தனியார் பள்ளிகள்  வளர்வதற்கு செழிப்பதற்கு கொழிப்பதற்கு உரமாகின்றன.
https://www.youtube.com/watch?v=xpTQmPQTTDI

                  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகுதோடு, தனியார் பள்ளிகள் மாநகரங்கள் நகரங்கள் மட்டுமின்றி பட்டி தொட்டியெங்கும் வலுவாக காலூன்றிவிட்டன.

       காரைக்குடியில் கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்  கல்லூரி, பொறியியற்  கல்லூரி, பாலிடெக்னிக், உடற்பயிற்சிக் கல்லூரி என அனைத்துத் துறைக்  கல்லூரிகளையும் எழுப்பியவர் வள்ளல் அழகப்பர். அவர் 1947 ஆம் ஆண்டில் கலைக் கல்லூரியுடன் இந்தக் கல்வி வேள்வியைக் காரைக்குடியில் தொடங்கினார்..  உடற்பயிற்சிக் கல்லூரியை அவர் மரணப்படுக்கையிலிருந்து எழுப்பினார்.

         அதற்கு முன்னரே வள்ளல் அழகப்பர் பல பல்கலைக் கழகங்களுக்கும்  லட்சக் கணக்கில் (1935 -1947 கால கட்டத்தில்) வாரி வழங்கினார். 1943 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் இரண்டாம் மூன்றாம் பொறியிற்  கல்லூரிகளான  சென்னை ACCET கல்லூரியையும்    மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற்  கல்லூரியையும் தலா ஐந்து லட்சம் கொடையளித்து தோற்றுவித்தார்.   கல்வி கடைக் கோடி மாணவனுக்கும் கிடைக்க வேண்டுமென்பது  அந்த வள்ளலின் நோக்கம். 
          
                 இன்று பள்ளிகளை நடத்துவோரில்   பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளின் குறைபாடுகளைத் தொழில் வாய்ப்பாகக் கருதுபவர்கள் தாம்.  இவர்களிடம் கல்வியைப் பற்றிய சிந்தனையோ கடைக் கோடி மாணவனைப் பற்றிய அக்கறையையோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.  

             
           கல்வித் துறையில் வணிகம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அந்த வணிகமும்  பெரும்பாலும் வணிக நெறிப்படியும் கூட  நடப்பதில்லை.
          
            கல்வி நிறுவனங்களின் லாப நோக்கத்தைப் பொதுமக்கள் அறிந்திருந்தாலும்  தனியார் பள்ளி மோகம் சற்றும் குறைவதாகத் தெரியவில்லை.  பெற்றோர்கள் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கத்தை அறிந்தும் வரிசையில் நிற்பதால் தான் விதிமுறை மீறல்கள் சர்வ சாதாரணமாகவும் ஒளிமறைவின்றியும் அரங்கேறுகின்றன.

                   பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட 50%  முதல் 100% விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன.  சட்டத்திற்கு அப்பாற்பட்ட கட்டணங்கள் என்பதால் ரசீது என்ற ஒன்றிற்கு வேலையே இல்லை.  மாணவர்களின் பெற்றோர்கள் அதனையும் வரிசையில் நின்று கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.   அதாவது அத்துமீறலைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களே ஒத்துழைக்கிறார்கள்.

                 ஆசிரியர்களின் கல்வித் தகுதி,  ஆசிரியர்களின் ஊதியம், இடவசதி, கட்டிட விதிமுறைகள் என எல்லாவற்றிலும் விதிமுறை மீறல்கள் இயல்பாகிவிட்டன.

                   தனியார் பள்ளிகளுக்கிடையில் போட்டி நிலவத் தான் செய்கிறது.  இந்தப் போட்டியினால் மாணவர்களுக்கான சில வசதிகளும் திறன் வளர்ப்பு பயிற்சிகளும் சற்று கூடுமே தவிர கட்டணங்கள் குறைவதில்லை.  அதனால் அந்தப் போட்டிகளும் கூட மக்களுக்குப்  பெரிதாகப் பயனளித்துவிடவில்லை.
           
            அடுத்த வீட்டுக்காரன்  தன் பிள்ளையை லட்ச ரூபாய்  பள்ளியில் சேர்த்தால் நான், என் பிள்ளையை ஐம்பதாயிரம்  ரூபாய்  பள்ளியிலாவது சேர்க்க வேண்டுமென்ற   நுகர்ச்சி வெறி மக்களிடம்  வேர்விட்டது தான்  கல்வித் துறை சுயநிதி முதலாளிகளின் வேட்டைக் காடாகியதற்குப் பெரிதும் காரணம்.
            
            வேட்டைக்காடு என்றாகிவிட்டது, பிறகு அந்தக் காட்டின் ராஜா சர்வாதிகாரம் செய்யாமலா இருப்பார்?

             சென்னையில் ஏறத்தாழ ஒரு சுயநிதிப் பள்ளியில் அது தான் நடந்திருக்கிறது.
  
           ஸ்ரீமதி சுந்தரவல்லி  மெமோரியல் ஸ்கூல் மற்றும் ஸ்ரீ சாரதா செக்கெண்ட்டரி ஸ்கூல் என்ற பெயர்களில் சென்னை குரோம்பேட்டை, பெருங்களத்தூர் மற்றும் கோபாலபுரத்தில் மூன்று பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றுள் முதல் பள்ளி 1986 ஆம்  ஆண்டு தொடங்கியிருக்கிறது.  மூன்று பள்ளிகளிலும் மொத்தம் பத்தாயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள்.  

             இப்பள்ளிகளின் நிறுவனர் சந்தானம் சராசரிக் குடும்பத்தில் பிறந்தவர் தான்.  அவர் 1965 ஆம் ஆண்டில், தமது 19 ஆம் வயதில் ஆறு ரூபாய் நாள் சம்பளத்தில் தொடங்கியவர் தான்.  இவர் ரியல் எஸ்டேட் துறையிலும் வெற்றி பெற்றவர் தான்.

                தனியார் பள்ளிகள் புற்றீசல்களாக பெருக்கெடுத்த பிறகும், அந்தப் போட்டியின் காரணமாக அப்பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்க தவியாய்த் தவிக்கின்ற போதும், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களின் பார்வையில் நிலவரம் தலைகீழாய்த் தான் இருக்கிறது.

               தாம் விரும்பும் பள்ளியில் சேர ஏராளமான மாணவர்கள் முயற்சிப்பதாகவும்  இடம் கிடைப்பது அரிது என்றும் கருதி நமக்கு இடம் கிடைக்குமா என்ற தவிப்போடும் பதற்றத்தோடும் இருப்பார்கள்.
              இந்நிலையில்  பத்தாயிரம் பள்ளிகள் படிக்கும் இப்பள்ளிகளின் நிர்வாகி  திடீரென இந்தப் பள்ளிகளையெல்லாம் மூடி விடுவேன்  என்றால் பெற்றோர்கள் பதறாமல் என்ன செய்வார்கள்.  அவர் உள்ளபடியே பள்ளிகளை மூடுவதற்காகச் சொன்னாரா? அல்லது பெற்றோரகளை மிரட்டுவதற்காகச் சொன்னரா என்பது அவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே புரியும்.  (https://www.thehindu.com/news/cities/chennai/parents-protest-against-schools-demand-for-2-lakh-deposit/article24478296.ece)




         






  அந்த வெற்றிகரமான பள்ளிகளின் நிர்வாகி மிரட்டுமளவிற்கு அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்தார்கள்?  அவர் ஒவ்வோரு மாணவரிடமும் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டார், அவ்வளவு தான். அந்தப் பெற்றோர்களில் சிலர் அந்தத் தொகையை கட்டாததோடு வீதியில் இறங்கிப் போராடவும் ஆரம்பித்துவிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் பள்ளிகளை மூடிவிடுவேன் என மிரட்டலைவிடுத்தார்.





             33 ஆண்டுகள் சிறப்பாக நடந்த பள்ளியில், பெருமைக்குரிய பள்ளியாக  திகழ்ந்த பள்ளிக்கு  ஏன் கல்வியாண்டு தொடங்கிய பிறகு ஒவ்வொரு மாணவனிடமும் இரண்டு லட்சம் ரூபாய் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது?  இந்தப் பள்ளியின் செலவைவிட வரவு கூடுதலாக இருந்தது வந்ததால் தான் பள்ளி படிப்படியாக முன்னேறியிருக்கிறது.  இந்த ஆண்டு பள்ளிக் கட்டணம் குறைக்கப்படவில்லை, மாணவர் எண்ணிக்கை குறையவில்லை.  
             
               இந்தப் பள்ளியின் உபரி நிதி வேறு பக்கம் திசை திருப்பப்பட்டிருந்தால் தான் இப்படி ஒரு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்க கூடும்.

               இது ஒரு பள்ளி எதிர்கொள்ளும்  சிக்கல் தான் என்றாலும் மற்ற பள்ளிகளும் இந்தச் சிக்கலுக்கு ஆட்படக் கூடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

              இந்தப் பள்ளி நிர்வாகத்தின் போக்கிற்கு   மெல்ல மெல்ல எதிர்ப்பு பெருகியதும் அந்த உத்தரவு திரும்பப் பெற்றுக் கெண்டார். ஆனால் அது குறித்து  பெற்றோர்களுக்கு 23.07.2018 ஆம் தேதி எழுதிய கடிதத்தை (http://www.ssmetrust.in/pdf/letter_23072018.pdf)  அந்த நிர்வாகி      

Withdrawal of Enhancement of Refundable Caution Deposit Proposal, Refund of Caution Deposit already collected and Withdrawal of all existing facilities, both for Students and Parents that are not mandated in the Central / State Government Rules and Regulations – Intimation – Reg.        ( திரும்பப் பெறத்தக்க வைப்புத் தொகையை அதிகரிக்கும்  திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் மத்திய மாநில வழங்கச் சொல்லாத ஆனால் இதுவரை வழங்கிய வரும் அனைத்து வசதிகளையும் திரும்பப் பெறுதுல்.)  

என்று தான்  ஆரம்பிக்கிறார்.      
                 33 ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வருகிறவர், சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன் வைப்புத் தொகையை அதிகரிக்கிறார்.  அதற்கு எதிர்ப்பு வந்ததும் அத்திட்டத்தை திரும்பப் பெறுகிறார்.  திரும்பப் பெறுகையில் இதுவரைக் கொடுத்து வந்த பல வசதிகளையும்  ஒழிக்கிறார்.

                  மொத்தம் 52 வசதிகளை ஒழிக்கப் போவது இக்கடிதத்தின் 6 வது பத்தியில் பட்டியலிடுகிறார்.

                  அந்த 52 வசதிகளும் அரசு மாணவர்களுக்கு வழங்கச் சொல்லும் குறைந்த பட்ச வசதிகளுக்கு அப்பாற்பட்டது தானாம். நாங்கள் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது என்றால் நாங்கள் ஏன் கூடுதல் வசதி கொடுக்க வேண்டும் என்பது அவருடைய வாதமாகத் தெரிகிறது.


                  இப்பொழுது நிறுத்தப்படவுள்ள அந்த 52 வசதிகளில் சில

19. Sloka recitation and award of certificate will be totally dispensed with.
35. The School Security arrangement will also be considerably reduced.
42. The School Fee will be collected only in cash, in the School Office on Monthly basis, on issue of receipt and not on quarterly basis or other means.
48. All the existing World-Class State-of-the-art toilet facilities will be at the minimal level as available in the Government Schools.   

               இப்பள்ளி ஏன் மேற்படி 19வது வசதியை  இதுவரை வழங்கி வந்தது என்பது தெரியவில்லை.  ஆனால் அது மிக முக்கியமான வசதி தான்..  அந்த ஸ்தோத்திரம் ஒப்புவித்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழ் வழங்கியிருப்பார்கள் போலும், அது நிறுத்தப்படும் என்கிறார்கள்.  ஒரு சான்றிதழ் தயாரிக்க எவ்வளவு செலவாகும்? 100 ரூபாய் செலவாகுமா?

                 மேற்படி அதிகப்படியான 52 வசதிகளைத் தொடர்வதற்கு  இரண்டு லட்ச ரூபாய் வைப்பு நிதி தேவை என்ற நிலையில்  மாணவர்கள்  அந்த வைப்பு நிதியை செலுத்தாத போது அவற்றைத் தொடர முடியாது தான். ஆனால் இந்த 19 ஆம் எண் வசதி மிகவும் முக்கியமானது என்பதாலும் அதற்கு 100 ரூபாய்க்குள் தான் செலவாகும் என்பதாலும் அந்தத் தொகையை வைப்பு நிதியாக அல்லாமல் கட்டணமாகவே வசூலிக்கலாம் எனக் கருதுகிறேன்.  அவ்வாறு ஸ்தோத்திரம் ஒப்புவித்தலுக்குரிய கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமாவது அந்த வசதியைத் தொடரவேண்டுமென நிறுவனரின் பாத கமலங்களில் பணிந்து வேண்டுகிறேன்.

48. All the existing World-Class State-of-the-art toilet facilities will be at the minimal level as available in the Government Schools.   

           இது ஒருபுறம் அரசுப்பள்ளிகளை கேலி செய்கிறது, நான் கேட்கும் பணத்தை தராதவர்களுக்கு அந்த வசதி போதாதா? எனப் பெற்றோர்களையும் கேட்கிறது. இதைக் கூட இவர் மென்மையாக     
        
            “ அரசுப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு தான் சுகாதார வசதிகளை வழங்குவோம்என்று கூட இவர்கள் சொல்லலாம்.

               ஆனால் இவர் தெளிவாகஅரசுப் பள்ளிகளில் உள்ள அளவு தான் சுகாதார வசதி வழங்கப்படும்என்கிறார்.  

               பல அரசுப் பள்ளிகளில் சுகாதார வசதி  அவல நிலையில்  இருக்கலாம்நானும் அரசுப் பள்ளிகளில் உள்ள சுகாதார வசதி ஒழுங்காக இருக்கின்றன என  உத்தரவாதம் தரமாட்டேன்.  ஆனால் ஒரு அடிப்படை வசதியை மறுப்பது, இதுவரை இருந்த அடிப்படை வசதியை மறுப்பது என்ன நியாயம்? என்ன மனிதாபிமானம்?  இது தான் இவரை நம்பி பிள்ளைகளை பெண்பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு இவர் காட்டும் நன்றியா?

              இந்த 14 பக்கக் கடிதத்தில் 3 பக்கத்தின் கடைசி பத்தியில்

The School will follow the rules and regulations of both the Central and the State Government and will run exactly similar to that of Panchayat Board / Municipality / Corporation / Government Schools in all respects, which cannot be unlawful at any stretch of imagination
                   என்கிறார். ,இது மக்களாட்சிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடத்தும் பள்ளிகளின் சுயமரியாதைக்கு நேரடியாக விடப்படும் சவால்.  இந்த சவாலை அரசு நடுநிலையோடு  எதிர் கொள்ள வேண்டும்.

                     அரசுப் பள்ளிகளின் குறைபாடுகள் தான் தனியார் பள்ளிக்கு உரமாகின்றன என்பது நாணயத்தின் ஒரு பக்கம் தான்.  தனியார் பள்ளிகள் புற்றீசல் படையெடுப்பு அரசுப் பள்ளிகளின் பாதையை மறிக்கின்றன என்பது நாணயத்தின் இன்னொரு பக்கம்.

                       மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுரண்டும் விதிமீறல்  தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கலாம்.   அப்பள்ளிகளின் மாணவர்களுக்கு கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம், ஆசிரியர்களுக்கு ஊதியத்தையும் கணிசமாகக் கூட்டலாம்.  இது களையெடுத்தலைப் போன்றது தான்.

                        அரசு களையெடுத்தால் மட்டும் போதாது, பயிரையும் வளர்க்க வேண்டும்.  அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும்  மேம்படுத்துவது, உலகத் தரத்திற்கு உயர்த்துவது தான் பயிர் வளர்ப்பதாகும். கடந்த சில மாதங்களாக கல்வித் துறையிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ள, இன்னும் பல நல்ல செய்திகள் வர வேண்டியுள்ளது, விரைவில் வரும் என நம்புவோம்!

                                                                                                                             நலந்தா செம்புலிங்கம்
                                                                                                                                                     03.08.2018


2 comments:

  1. மிகவும் நேர்த்தியான சொல் கையாடல் மிகவும் அருமை

    ReplyDelete
  2. வணிக நோக்கு என்பதே தற்போது முன்னுள்ள நிலையில் நீங்கள் சொல்வது சற்று சிரமம் என்று நம்புகிறேன். இருந்தாலும் நல்ல செய்திகள் வரும் நிலையில் நம்புவோம்.

    ReplyDelete