Thursday 26 July 2018

காரைக்குடியின் கனவுப் பள்ளியில் நல் எண்ண இதயர் முத்து

         சுழற் கழகம் உலகளாவிய தொண்டு நிறுவனம் தான்.  ஆனால் 24.07.2018 வரை நான்  அவ்வமைப்பைப் பற்றி நான் மூன்று தகவல்களைத் தான் அறிந்திருந்தேன்.

        இதயம் நல்லெண்ணெய் பற்றியும்   மூன்று தகவல்களைத் தான் அறிந்திருந்தேன்.

           காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி பற்றி புத்தகம் எழுதக் கூடிய அளவு தகவல்கள் அறிவேன்.

             மேற்சொன்ன  மூன்று குறிப்புகளுக்கும் என்ன முடிச்சு? எனக் கேட்பீரகள்.  நீங்கள் கேட்காவிட்டாலும் என்னால் சொல்லாமல் இருக்கமுடியாது.

              இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் அதிபர் திரு    முத்து காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு 24.07.2018 அன்று வருகை தந்தார்.  அந்த வருகைக்குக் காரணம் சுழற் கழகம்.  

           
                இதயம் நல்லெண்ணெய்  நிறுவனம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும்  வெற்றிகரமான பாரம்பரிய நிறுவனம்.  2.   பாரம்பரியப் பண்புகளிலிருந்து விலகாமல்  நவீன தொழில் மேலாண்மை முறைகளை கையாளும் நிறுவனம்.  3 அந்நிறுவனத்தில் மூலப் பொருளான எள்ளின் விலை கடுமையாக உயர்ந்த போதும் அந்த விலை உயர்வால் பாதிப்பு ஏற்பட்ட போதும் கூட ரீபைண்டு எண்ணெய் வணிகத்தை பற்றி சிந்திக்காத நல் எண்ண நிறுவனம். 

இதயம் நிறுவன அதிபர் வி. ஆர். முத்து
சுழற் கழகம் காரைக்குடிக்கும் வேண்டுமென  67 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாமனிதர் நினைத்திருக்கிறார்.  அவரே காரைக்குடியில் சுழற் கழகத்தைக் காரைக்குடியில் தோற்றுவித்தார், அவர் தான் வள்ளல் அழகப்பர்.  இந்த ஒரு தகவலே உலகளாவிய சுழற் கழகத்தின் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.  சுழற் கழகம்  போலியோ  ஒழிப்பற்கு முன்னுரிமை கொடுத்து களப் பணியாற்றுவது அதன் நன்மதிப்பை மேலும் கூட்டியது.  இந்தக் கழகத்தின் மாணவர் அமைப்பான இண்ட்ராக்ட் சங்கம் பல பள்ளிகளில் இயங்கிய வருகிறது.

               இராமநாதன் செட்டியார் பள்ளியில் இயங்கி வரும் இண்ட்ராகட் கழகத்தின் இரண்டாம் ஆண்டு பொறுப்பாளர்கள் பதிவியேற்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கத் தான் இதயம் நிறுவன அதிபர் திரு    முத்து அவர்கள் இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு வருகை தந்தார்.

                  நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு கம்பன் கழகத்தைப் போல குறித்த நேரத்தில் தொடங்கியது.  இதற்குப் பெரிது காரணம் உரிய நேரத்திறகு சற்று முன்னரே வந்து சேர்ந்த சிறப்பு விருந்தினர் இதயம்      முத்து அவர்களும் அவருடன் விருதுநகர் நண்பர்களும் தான்.

                  பள்ளி நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடத்துவது, பெரிய சுமையோடு ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது.  பக்குவமாக ஓட்ட வேண்டும்.  நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களின் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற வேண்டும்.  நிகழ்வை உரிய நேரத்தில் நிறைவு செய்து மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவையெல்லாம் இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு பழகிய பாதை தான்.

                சிறப்பு விருந்தினர் இதயம் முத்து தான் புதிய பாதையில் பயணித்தார்.  தம் ஒரு பள்ளியை கடந்த நான்காண்டுகளாக நடத்தி வருதாகவும் அதில் நானூறு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகிறார்கள் என்றும் உங்கள் பள்ளியில் ஐந்து ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 218 யிலிருந்து 1200 ஆக உயர்ந்திருப்பது பெரிய சாதனை எனப் பாராட்டினார்.   இந்தப் பாராட்டு வெற்றுப் புகழ்ச்சியல்ல என்பதை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்க அவர் தம் பள்ளியையே ஒப்பிட்டு கூறியது அவருடைய நல்லெண்ணத்திற்கு இன்னொரு சான்றாகும்.

  புதிய நிர்வாகிகளை அருமையாக வாழ்த்திய கையோடு பள்ளி ஆசரியர்களை அழைத்து மாணவர்களின் முன்னிறுத்தி அவர்களைப் பாராட்டி மாணவர்களையும் வாழ்த்தச் சொன்னார். அவர் அத்தோடு நின்றிருக்கலாம் நாங்கள் வந்த காரில் ஒரு சீட் இருக்கிறது உங்கள் தலைமை ஆசரியரை எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லவா? எனக் கேட்டு மாணவர்களைக் கலக்கிவிட்டார். பிறகு உங்கள் சம்மதம் இன்றி உங்கள் தலைமை ஆசிரியரை அழைத்துச் செல்லமாட்டேன் என்று சொல்லித் தான் மாணவர்களை சமாதனப்படுத்தினார்.
               எதிர்பாராத திடீர் விருந்தினர்களை உபசரிப்பதைப் போல இது போன்ற நிகழ்வுகளில் சில திடீர் வாழ்த்துரைகள் திடீர் பொன்னாடை மரியாதைகள் நேர நிர்வாகத்திற்குச் சவால் விடும்.

ஜெப்ரி
               அமெரிக்காவில் குடியேறி பணியாற்றும் காளையார்கோவில் குடும்பத்தைச் சேர்ந்த ஜெப்ரி, அமெரிக்காவிலேயே பிறந்து அங்கேயே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்.  கோடைவிடுமுைறக்காக காளையார்கோவிலுக்கு வந்த ஜெப்ரி, இராமநாதன் செட்டியார் பள்ளிக்கு  தமிழ் கற்பதற்காக கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறார். தமிழ் ஆர்வமிக்க அந்த பயிற்சி மாணவரையும் இந்நிகழ்ச்சியில் திடீரென வாழ்த்துரை வழங்கச் சொன்னார்கள்.

            . பொன்னாடை மரியாதைகளும் ஒன்றிரண்டு அதிகமானது. இவற்றோடு திட்டமிட்ட பதவியேற்பு வாழ்த்துரை போன்ற நிகழ்வுகளும் ஏராளமாக இருந்தன. இவ்வளவு உள் நிகழ்ச்சிகளையும் சீராக கடிகார நேர்த்தியோடும் பொறுத்தமான இணைப்புரைகளோடும் அழகாக ஒருங்கிணத்தார் ஆசிரியை மீனாட்சி. 

ஆசிரியை மீனாட்சி
                         இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள் சிலரே இது போன்ற இண்ட்ராக்ட் அமைப்புகள் பெரும்பாலானவை பதவியேற்பு விழாவிற்கு மேல் செயல்படுவதில்லை என்றும் இராமநாதன் செட்டியார் பள்ளியின் இண்ட்ராக்ட் சங்கம் கடந்த ஆண்டில் பல பணிகளை செய்துள்ளது என்று பாராட்டினார்கள்.  இந்த விழாவும் வெற்றுச் சடங்காக இல்லாமல் விழாவில் கலந்து கொண்ட அனைவருடைய ஈடுபாட்டையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.  அதற்கு இன்னொரு சான்றும் சிறப்பு விருந்தினரிடமிருந்து கிடைத்தது.
                        

                       சிறப்பு விருந்தினர் விடைபெறும் நேரத்தில் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா என்னை  அறிமுகப்படுத்தினார்.  அவருடைய மிகமொழியை மறுத்துவிட்டு  நான் இந்த பள்ளியின் ரசிகன் என்றேன்.  அதற்கு இதயம் அதிபர் வி. ஆர் முத்து இன்று நிறைய ரசிகர்கள் சேர்ந்துள்ளோம் என்றார்.  காரைக்குடியின் கனவுப் பள்ளியாகவும் ஊடகங்களின் செல்லப் பள்ளியாகவும் திகழும் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி இனி சுழற் கழகத்தின் மூலம் உலகின் கவனத்தைப் பெறும்.

நலந்தா செம்புலிங்கம்
nalanthaa@gmail.com




4 comments:

  1. நல்லதா(ய்) செய்தி தரும்
    நலந்தா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்லதா(ய்) செய்தி தரும்
    நலந்தா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான விழாப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. விழாவினை நேரினில் கண்டுமகிழ்ந்த திருப்தி மிக்க நன்றி நலந்தா ஐயா அவர்களுக்கு

    ReplyDelete