Tuesday 5 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 3)

நாளும் என் நெஞ்சில் வாழும் ச.மெய்யப்பனார் 






நலந்தா இலக்கியச் சாளரம் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டில் அவரைப் போற்றித் துதிப்பதற்கு மேலாக அவருடைய சிந்தனைகளை மறுபதிவு செய்வதற்கும் மேலாக அவருடைய கொள்கைகளின் தேவையை வலியிறுத்துவதற்கும் மேலாக ஏதனும் ஒரு பணி செய்ய விழைந்தது.


                   வ.சுப.மா அவர்களின் நெஞ்சுக்கனிய கொள்கை தனித்தமிழ் கொள்கையாகும்.  அதைப் பற்றிய விவாதத்தை மேற்கொள்ள விழைந்தோம்.    




                     ஒரு புத்தகக் கடைக்காரன் வ.சுப.மா குறித்து விவாதம் நடத்துவதா? கட்டுரைகள் திரட்டுவதா? எனப் பலர் மனதிற்குள் நினைத்தார்கள். எம் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. ஏனெனில்  கட்டுரைகள் திரட்டுவது தொகுப்பது போன்றவற்றை ஒரு முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழமாகப்  பதிவாகிவிட்டது.


                அதைவிடக் கொடுமை தனித்தமிழ் பற்றி பேசுவதே தேவையற்றது எனச் சிலர் நேரில் வாக்குவாதம் செய்தனர்.  நாங்கள் மாற்றுக் கருத்தையும் நாங்கள் பிரசுரம் செய்யத் தயராக இருக்கிறோம் என்ற பிறகும் அவர்கள் கட்டுரை எழுதித் தரவில்லை. ஆகவே, தனித்தமிழ் ஆதரிப்பார் இல்லாவிடினும் கடைபிடிப்பார் இல்லாவிடினும் தனித்தமிழ்

நிற்கும் எனத் தெளிந்து மகிழந்தேன்.  இதுவே கருத்துப் பேழை அச்சேறும் முன்னரே கிடைத்த வெற்றியாகும்.







                      எல்லாம் நன்மைக்கே  நாங்கள் எதிர்கொண்ட இந்த நிலைகளால் தான்  தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை கண்ணாடி மாளிகைக்குள் அரங்கேறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் சமூகத்திற்கு பயன் தரும் கூட்டுச் சுரைக்காயாக அமைந்துள்ளது.


                      இந்தக் கருத்துப் பேழையில் இன்று பொறியில் பயின்றுவரும்  மாணவரிலிருந்து வ.சுப.மா அவர்களின் ஆரம்ப கால மாணவர் வரை பல தரப்பினர் எழுதியுள்ளார்கள்.


                 தாள், அச்சு ஊடகம் எல்லாம் மலையேறப் போகின்றன தனித் தமிழோ கலப்புத் தமிழோ எதுவும் நிற்காது மின்தமிழ் தான் நிற்கும் என்கிறார் ஒரு பொறியாளர்.  மொழியும் சிந்தனையும் இணைபிரியாதவை எனப் புதிய தளத்திற்கு விவாதத்தை எடுத்துச் செல்கிறார் நரம்பியல் மருத்துவர் திருப்பதி.  காட்டுக்குள் செடியும் கொடியும் விலங்குகளும் மட்டுமில்லை தமிழின் சொல் வளமும் இருக்கிறது என நிகண்டை மேற்கோள் காட்டி நீளப் பட்டியலிடுகிறார் வனத் துறையில் பணியாற்றிய கவிஞர் அரவரசன்.  முதலில் தமிழைப் பேசச் சொல்லுங்கள் பிறகு தனித்தமிழைப் பற்றியெல்லாம் யோசிப்போம் ஓங்கி அறைகிறார் ஒரு ஆசிரியர்.



                 மின் ஊடகத்திற்கு ஏற்ப எழுத்துச் சீர் திருத்தம் தேவை என்பதோடு சில முன்வரவையும் வைக்கிறார் வல்கனைசிங் தொழில் செய்து வரும் கல்லல் முத்தையா. நிறைவாக நாங்கள் எதிர்பார்த்தைவிட கருத்துப் பேழையின் வனப்பும் பரப்பும் விரிந்து செழுமை பெற்று களிபேருவுகை அளிக்கிறது.  இதில் குறையிருந்தால் அதற்கு நானே பொறுப்பு. ஏதேனும்  நிறை இருந்தால் ஆங்கில வழியில் படித்த என்னுள் நற்றமிழை விதைத்தரும் நாளும் என் நெஞ்சில் வாழ்கின்றவருமான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனாருக்கே உரியதாகும்.


                   தமிழ் நெஞ்சினீரே! தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை வெளியீட்டு விழாவிற்கு வருக! வருக!!   






1 comment:

  1. ஆய்வு நிலையில் இவ்வாறான பல நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளேன் ஐயா. என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் எதிர்மறைக்கருத்துகள்தான் அதிகமாக இருந்ததே தவிர, முயற்சிக்கு ஊக்கம் தந்தவர்கள் மிகச்சிலரே. மன உறுதியும் நன்முயற்சியும் என்றும் பலன் தரும். தொடருங்கள் ஐயா. வாழ்த்துகள்.

    ReplyDelete