Friday 9 March 2018

திருவண்ணாமலை ஆட்சியருக்கு பாரத் ரத்னா வழங்கப்படுமா?




    ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்மாலை 3 மணி அளவில்  தேவகோட்டை நகராட்சி வாசலிருந்து  ஒரு ஊர்வலம் தொடங்கியது.  அந்தச் சுட்டெறிக்கும் முன்மாலைப் பொழுதில்  அந்த ஊர்வலத்தை தேவகோட்டை  நகராட்சி நடத்தியது.   நடந்து வதங்கியது என்னவோ பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் தான்.  அது விழிப்புணர்வு ஊர்வலமாம்.  திறந்த வெளியில் மலம் 
கழிக்கக் கூடாது என்பதை பற்றி 
விழிப்புணர்வு ஊர்வலமாம். 

           தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு  எதிரில் கைக்கு எட்டும் தொலைவில் தான் பேருந்து நிலையம் இருக்கிறது.  அந்த பள்ளி மாணவர்களை வதக்கி நடத்திய விழிப்புணர்வு ஊர்வலத்தின் போதும் பேருந்து நிலையத்தினுள் இருந்த இலவசக் கழிப்பிறை சகிக்க முடியாதளவு அருவருப்பாக இருந்தது.  கட்டணக் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் எந்த யோக குருவிடமும் பயிலாமலேயே மூச்சுப் பயிற்சியில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள்.  அந்த விழிப்புணர்வு நற்பணி நடந்து ஓரிரு ஆண்டுகளாகிவிட்ட பிறகு ஒரு "முன்னேற்றம்"  ஏற்பட்டுள்ளது.  இப்போது சும்மா பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலே  மூச்சுப் பயிற்சியில் வல்லவர்களாகிவிடுவீர்கள், அந்தளவு பேருந்து நிலைய வாசலில் உள்ள கழிவு நீர் சாக்கடை அடைபட்டு துர்நாற்றம் குடலைப் பிரட்டி எடுக்கிறது.  நிற்க இது தேவகோட்டையின் தனிச் சிறப்பு.  

              பொதுவாகவே  பேருந்து நிலைய கழிப்பறைகள் குறைந்தபட்ச அளவு கூட தூய்மையாக இருப்பதில்லை, கட்டணக் கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை விட கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. பொது நிலவரமே இப்படி என்றால் உலகெங்கிலிருந்தும் பக்தர்கள் கூடும்  திருவண்ணாமலையின் நிலை எப்படி இருக்கும்? 
                     
                திருவண்ணாமலையில்  இன்னொரு அத்துமீறல் சர்வ சாதாரணமாக நடக்கிறது, பெளர்ணமி கிரிவல நாளில் கட்டணம் வசூலிக் கூடாது என்ற தடை இருக்கின்ற போதிலும் பத்து ருபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது மக்களாகி நாம் ஒன்று அடாவடி கட்டணங்களை கொடுத்துவிடுகிறோம் அல்லது ஓரம்சாரம் சந்து பொந்துகளைத் தேடிப் போகிறோம் அல்லது இயற்கை உந்துதலை அடக்கிக் கொள்கிறோம். 

                பொது சுகாரத்தை பாதிக்கும் இந்த முறைகேடுகளில் கடமை தவறுதல் சேவைக்குறைபாடு ஊழல் எல்லாம் சரிசமாகக் கலந்திருக்கிறது, ஏனோ பெரும்பாலான அதிகாரிகள் இவற்றைக் கண்டும் காணமல் இருந்துவிடுகிறார்கள் 

               திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியால் எல்லோரையும் போல பார்த்தும் பாராதது போல இருக்க முடியவில்லை.  அவரே களத்தில் இறங்கிவிட்டார்.  கிரவலத்தில் பக்தர்களோடு பக்தராக அவரே நான்கு பொதுக் கழிப்பறைக்குச் சென்றார், அவரிடமும் பத்து ருபாய் வசூலித்திருக்கிறார்கள்.  மறுநாள் சம்பந்தப்பட்ட நான்கு ஊராட்சி செயலர்களை இடை நீக்கம் செய்திருக்கிறார்.  வசூல் வேட்டையில் ஈடுபட்டோர் மீது காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுத்தன் விளைவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இரண்டு பேர்களை காவல் துறை தேடி வருகிறது.  வசூல் வேட்டையர்களைக் காவல் துறை தேடுவது இருக்கட்டும், ஆட்சியர் கந்தசாமியை தேடி உயரிய விருதுகள் வரவேண்டாமா?

              உயரிய விருதுகள் என்றால்?
                                      

               இந்திய அரசு நடிகர் ரஜினிகாந்த்திற்கு  2016 ல் ஒரு உயரிய விருது கொடுத்திருக்கிறது. அது பத்ம விபூஷண் விருது எனும் இரண்டாவது உயரிய விருதாகும்.  அவ்விருது ரஜினிகாந்த் இந்தியத் திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது.  இந்திய திரைப்படத் துறையை விட பொதுசுகாதாரத் துறை இன்றையமையாத துறை என்பதையும் அதற்கு ஆட்சியர் கந்தசாமியின் பங்களிப்பு ரஜினிகாந்த் திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு விடக் கூடுதலானது என்பதையும் எவரும் மறுக்கப் போவதில்லை.  ஆகவே ஆட்சியர் கந்தசாமிக்கு  பத்ம விபூஷண் விருதிற்குக் குறையாத விருது வழங்கப்பட வேண்டும்.  பத்ம விபூஷணுக்கு குறையாத விருது என்றால் அது பாரத் ரத்னா தான்.  




  தூய்மை பாரதத் திட்டம் தான்  பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் விருப்பமான திட்டம் என்பது உண்மை என்றால் திருவண்ணாமலை ஆட்சியருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும்.





1 comment:

  1. தேவக்கோட்டையில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான். ஆட்சியர் பாராட்டத்க்கவர்.

    ReplyDelete