Showing posts with label நகரத்தார் பண்பாடு. Show all posts
Showing posts with label நகரத்தார் பண்பாடு. Show all posts

Wednesday, 25 December 2019

நினைந்தூட்டும் தாயின் அக்கறை

பிள்ளையார் நோன்பு வந்து விட்டது(31.12.2019)

       கோலம், தடுக்கு, சங்கு ஊதுதல் என இந்து மதத்திற்கு பொதுவான பழக்கங்களில் கூட நகரத்தார்கள் ஒரு தனித்துவ அடையாளத்தை முன்னோர்கள் உருவாக்கி வைத்துகிறார்கள்.  நகரத்தார்களுக்குரிய மிக அழுத்தமான தனித்துவ அடையாளம் பிள்ளையார் நோன்பு தான்.



       பிள்ளையார் நோன்பு  சவால்கள் மிக்க கொண்ட்டாடமான விழா தான்.  அதற்கு விதவிதமாகப் பலகாரங்கள் செய்வது பாடுமிக்க வேலை தான். எனினும் பல பெண்கள், அது,  தங்கள் திறமையைக் காட்டுவதற்கான சவாலாகக் கருதி வரவேற்கிறார்கள்.  அடுத்து இழையைச் சுடரோடு விழுங்வதாக என்பது எல்லோருக்கும் பொதுவான சவால்.  புது மாப்பிள்ளைகளுக்கு ஒரு கெளரவப் பிரச்சனையும் கூட !

          கூடவே எங்கே இழை எடுத்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், பல ஊர்களில் நகரவிடுதிகள்  இருப்பதாலும்  எல்லா ஊரிலும் சங்கங்கள் இருப்பதாலுமும், அவற்றின் முக்கிய பணிகளுள் பிள்ளையார் நோன்பும் ஒன்றாகயிருப்பதாலும்,  நம்முடைய பாரம்பரிய 76 ஊர்களிலும் பொது இடங்களில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டதாலும் ஒவ்வொருவருக்கும் இரண்டு அமைப்புகளிலிருந்தாவது அழைப்பு வந்திருக்கிறது.

        பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்வதற்காகப் பொது இடத்தில் கூடுவது ஒரு சமூக நிகழ்ச்சியாகவும் பரிணமித்துள்ளது, பெரிதும் வரவேற்கப்படுகிறது.

        எங்கே இழை எடுத்துக் கொள்வது வீட்டிலா? பொது இடத்திலா? இந்த விவாதத்திற்கே இடம் கொடுக்காமல் இரண்டு இடங்களிலும் எடுத்துக் கொள்பவர்கள் தான் இன்று அதிகமாகவுள்ளனர். பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளுவதற்கு ஆண்டிற்கு ஆண்டு வரவேற்பும் அதிகரிக்கிறது, இந்த வேகம் தொடர்ந்தால் வீட்டில் இழை எடுப்பது அருகிவிடுமோ என்று கூடத் தோன்றுகிறது.  அப்படி ஒருபோதும் ஆகாது எனச் சிலர் ஆறுதல் சொல்வார்கள்.  வேறு சிலர்  அதனால் என்ன? என மறித்தும் கேள்வி கேட்பார்கள்.  

       பிள்ளையார் நோன்பிற்கு தேவைப்படும் முதன்மைப் பொருளான இழை மாவு மற்றும் சில வகைப் பொரிகள் வெளியூர்களில் கிடைப்பது உள்ள சிரமமும்  பலகாரங்கள் செய்வதற்கு உரிய வசதி மற்றும் நேரக் குறைவினாலும் வெளியூர்களில் வசிப்பவர்களும்  பிள்ளையார் நோன்பைக் கூட்டாகக் கொண்டாடும் நிலை ஏற்பட்டது.  பல ஊர்களில் ஆரம்ப காலத்தில் சங்கம், விடுதி இருந்தாலும் இல்லாவிடினும் யாரேனும் ஒருவர் வீட்டில் கூடி எல்லோரும் இழை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் வசதிக் குறைவான சூழலிலும் நமது மரபைக் கடைபிடித்த நற்செயலாகும். எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு என்ற கூடுதல் பரிசும் இதில் கிடைத்தது.  பிறகு சங்கத்தில் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடுவது பழக்கத்தில் வந்தது.  சங்கங்களின் மிக முக்கிய செயல்பாடாக முக்கியத்துவம் பெற்றது.

             இந்து மத பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.  அதைத் தான் கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்றார்.  ஆனால் அந்தக் காரண காரியத்தை நாம் உணர்ந்து கடைபிடிக்கவிட்டால் அது வெற்றுச் சடங்காகிவிடும்.  காலப் போக்கில் நீர்த்துப் போகும்.
                      
         
       
   பிள்ளையார் நோன்பு பொது இடங்களில் கொண்டாடப்படும் காலகட்டத்திற்கு  முன்னர் வெளியூர்களில் வசிக்கும் திருமணமாகாத இளைஞர்களை அந்த ஊரில் வசிக்கும்  தந்தை நிலையில் அண்ணன் நிலையில் உள்ளவர்கள் இழை எடுத்துக்க வீட்டுக்கு வா என உரிமையோடு கட்டளையிடுவார்கள்.   இன்றும் மகபேறு உண்டாகியிருக்கும் பெண்களுக்கு இரண்டு இழை எடுத்துக் கொடுப்பதும் பிள்ளையார் நோன்பின் மிக மிக முக்கியமான மகத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றன.  அது தான் வம்ச விருத்தி.  பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்சவிருத்தி எனில் வீட்டில் இழை எடுத்துக் கொள்வது அவசியமாகும். கூடுதலாக பொது இடங்களிலும் இழை எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் பொது இடங்களில் இழை எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்பட்டுவிட்டதால் வீட்டில் இழை எடுத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்துவிடக் கூடாது.

         பிள்ளையார் நோன்பின் நோக்கம் வம்ச விருத்தி என்று உணர்ந்தோடு பிள்ளையார் நோன்பை வீட்டில் கொண்டாடும் மரபை மீட்டெடுக்க வேண்டும் எனக் கருதிய தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு எம். தண்ணீர்மலை அவர்கள் அந்த நல்ல எண்ணத்திற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்.  அதன்படி பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகியவைகளை பாக்கெட் போட்டு இலவசமாக 2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு வழங்கிவருகிறார்கள். மரபை இந்த நற்பணியில் திரு  எம். தண்ணீர்மலை அவர்களுக்கு மூன்று இளைஞர்கள் துணை நிற்கிறார்கள்.  

                  S.S.S.SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra ---  S.S.S  வீடு, தேவேகாட்டை)

                  V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)

                  K. சீதாராமன்    (Swathi Agencies & Skandha Guru Chit funds  ---  உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)  

     இவர்கள் இந்த பிள்ளையார் நோன்புப் பொருட்களை சென்னை வாழ் நகரத்தார்களுக்கு இலவசமாக 2015 முதல் வழங்கிவருகிறார்கள்.

            2015 ஆம் ஆண்டில் 40 குடும்பங்களுக்கும், 2016 ஆம் ஆண்டில் 90 குடும்பங்களுக்கும்,2017 ஆம் ஆண்டில் 110 குடும்பங்களுக்கும், 2018 ஆம் ஆண்டில் 300 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கியுள்ளார்கள். நடப்பு 2019 ஆம் ஆண்டில் 500 குடும்பங்களுக்கும் பிள்ளையார் நோன்புப் பொருள்கள் வழங்கவுள்ளார்கள்.

வம்ச விருத்திக்குரிய பிள்ளையார் நோன்பின் மகிமையை உணர்ந்து அப்பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டுவதற்கு வழிவகை செய்யும் இந்த சேவை உள்ளபடியே நினைந்தூட்டும் தாயின் அக்கறை போன்றது தான். ஆகச் சிறந்த இ்நதப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மேற்சொன்ன நால்வரோடு கடந்த ஆண்டிலிருந்து (2018) கீழ்க்கண்ட இருவரும் சேர்ந்து தோள்கொடுக்கிறார்கள்.

                  கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)

                  ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)

   
         பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற விரும்புவோர் இவர்கள் குறித்த பதிவுக் காலத்தில் கீழ்க்கண்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

              1. பெயர்
              2. சொந்த ஊர்
              3. கோயில்
              4. சென்னையில் இருக்குமிடம்
              5. தொலைபேசி எண்

பொதுவாக பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு வாரங்களுக்கு இரண்டு வாரம் முன்பு தொடங்கி ஒரு வாரம் பெயர் பதிவு நேரிலோ தொலைபேசி அல்லது வாட்ஸ் ஆப் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.  பிள்ளையார் நோன்பிற்கு இரண்டு நாட்கள் முன்னர் இவர்கள் குறிப்பிடும் இடங்களில் இந்தப் பிள்ளையார் நோன்புப் பொருளைப் பெற்றுக் கெள்ளலாம்.   இந்த ஆண்டு 13.12.2019 முதல் 20.12.2019 வரை பெயர்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு 28.12.2019  29.12.2019 தேதிகளில் விநியோகம் நடைபெறுகிறது.

            பிள்ளையார் நோன்பின் மகத்துவமான வம்ச விருத்தியை உணர்ந்து அந்த நல்ல மரபை மீட்கும் நல்லவர்களை நெஞ்சார வாழ்த்துவோம்.

நலந்தா செம்புலிங்கம்
அலைபேசி 9361410349
25.12.2019