Monday 20 June 2022

பெரியோரைப் போற்றும் பெரிய குடும்பம்


 
பெரியோரைப் போற்றும் 

பெரிய குடும்பம்!

-------------------------------------------


                 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

                 என்புதோல் போர்த்த உடம்பு. (திருக்குறள் 80)

                

               அது ஒரு  1008 பிறை கண்ட பெருமைக்குரியவரின்  விழா அழைப்பு

 

                மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்து வரும் இந்நாளில் 1008 பிறை கண்டவர்களைக் காண்பது அரிதல்ல எனினும் அந்த அழைப்பு  சாதாரண அழைப்பு அல்ல சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அழைப்பு.

 

                 அந்தக் குடும்பத்தின் பாசப் பிணைப்பை சகோதர சகோதரி குடும்பங்களுக்கு இடையிலான பாசப் பிணைப்பைப் பறைசாற்றும் அழைப்பு.


 

                  விஷயத்திற்கே வராமல் நான் பீடிகையே போட்டுக் கொண்டிருப்பதாகக் கூட சில வாசகர்கள் நினைக்கூடும்உள்ளபடியே இப்பதிவில் ஒரு அணு அளவும் மிகையில்லை என்பதோடு பீடிகைப் படலத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து அந்த வரலாற்று

                
சிறப்பு மிக்க விழாவிற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன்.

 

                தேவகாேட்டையில்  பிள்ளையார்பட்டி கோவிலைச் சேர்ந்த சி. குடும்பத்தில்  மு.மெ.   முத்தையா செட்டியார் மகள் திருமதி மு. சரஸ்வதி ஆச்சியின் 83 வது பிறந்த நாள் விழா எதிர்வரும் வெள்ளிக் கிழமை  23.06.2022 தேவகோட்டையில் கொண்டாடப்படுகிறது.

 

               அந்த அழைப்பில் விழா நாயகி சரஸ்வதி ஆச்சியை அவரது அப்பச்சியை வைத்துத் தான் அடையாளம் சொல்லப்பட்டிருக்கிறது.   கணவர் பெயர் குறிப்பிடப்படவில்லைஏன்?   வேறென்ன? விழா நாயகி, , மாமியார் வீட்டார் மருமகள் மீது எல்லையில்லா ஆதிக்கம் செலுத்திய காலத்தில் பிறந்தவர், திருமணம்  செய்யப்பட்டவர், என்பதை அவருடைய வயதைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்

 

               சரஸ்வதி ஆச்சியும், அந்தக் காலகட்ட பெண்கள் பலர் கண்ட பல இன்னல்களை  எதிர்கொண்டார். இவரது கணவர் இவரை வைத்து விட்டு இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்சரஸ்வதி ஆச்சியும்   நீதிமன்றப் படிகட்டுகளில் ஏறினார்ஒரு 350 (முந்நூற்றி ஐம்பது) ரூபாய் ஜீவனாம்சம் உத்தரவானது, அதுவும் சில மாதங்கள் தான் கிடைத்தது அவருக்குக் கிடைத்தது

 

               கேள்விக்குறியான சரஸ்வதி ஆச்சியின் வாழ்க்கையில் ஆச்சரியக் குறியாக ஆத்தாள் வீடு வழி வழியாக  துணை நிற்கிறதுஆம் வழி வழியாக துணை நிற்கிறதுசரஸ்வதி ஆச்சி உடன் பிறந்தவர்கள் மூன்று ஆச்சிகள் ஒரு அண்ணன்இன்று அவர்களில் எவரும் இல்லை என்ற நிலையிலும் ஆச்சி  அண்ணன் மக்களும்  மருமக்களும்  சரஸ்வதி ஆச்சியின் 83 வது பிறந்த நாளையொட்டி ஒரு பெரிய விழா எடுக்கிறார்கள்.

 

              இந்த நல்ல விழாவின் அழைப்பு கடித முறைப்படியும்  மங்கல விழா அழைப்பு வடிவத்திலும்  ஒரு சேர அமைந்துள்ளது..

 

             நகரத்தார் கடித முறைப்படியே   சரஸ்வதி ஆச்சியின் ஆத்தாள் வீட்டு விலாசத்தோடு தொடங்கப்பட்டிருக்கிறதுகடிதம் எழுதப்படும் தேதியும் மரபுப்படி தமிழ் ஆங்கிலத் தேதிகளைக் குறிப்பிடுகிறதுகடிதத்தை அண்ணனின் இளைய மகன் ஏகப்பன் எழுதிக் கொண்டதாக  மரபுவழுவாமல் குறிப்பிடுகிறது.  

 

               பொதுவான கடிதங்களில் எழுதுபவரின் பெயரும் கையெழுத்தும் கடித்தின் முத்தாய்ப்பாக அமையும்நகரத்தார் கடிதங்களில் குடும்ப விலாசம் தான் முக்கியம் அது தலைப்பில் இடம்பெறும்  கடிதத்தின் முத்தாய்ப்பாக இஷ்ட தெய்வத்தின் துணை என முடிக்கப்படும்இந்த அழைப்பு ஸ்ரீ அழகிய மெய்ய அய்யனார் துணை என்று முடிகிறது.

 

                 இந்தக் கடித அமைப்பிற்கு கீழ் மங்கல விழா அழைப்புப் போல இந்த விழாவிற்கு அழைப்பவர்களின் பெயர்களாக சரஸ்வதி ஆச்சியின் அண்ணனின் மூத்த மருமகளும் இளைய மகனும் மருமகளும் அழைப்பதாக அமைந்துள்ளது.  


 

           அவர்கள் பெயரைத் தொடர்ந்து நல்வரவை விரும்புபவர்கள் என சரஸ்வதி ஆச்சி இரண்டு ஆ்ச்சிகளின் மகன்கள் மகள்கள் அண்ணனின் மகள்கள் பெயர்களும் அவர்களின் துணைவர்களின் பெயர்களும் உள்ளன. இவர்களைத் தொடர்ந்து பேரன் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள் கொள்ளுப் பேத்திகள்  தனிப்பெயர்களைக் குறிப்படாமல் பொதுவாகக் குறிப்பிட்டு்ளளார்கள்.  

  

                சரஸ்வதி ஆச்சியின்மூன்றாவது ஆச்சி சாரதா ஆச்சிக்கும் இதே நிலை தான் அவருடைய கணவரும் அவரை வைத்து விட்டு இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.

             

                இவ்வளவு இடர்களைச் சந்தித்த சகோதரிகளுக்கு  இறைவன் ஆறுதலுக்காகவாவது  பிள்ளைப் பேற்றை  நல்கி இருக்கலாம்இந்த விஷயத்தில் இறைவன் சரஸ்வதி ஆச்சிக்கும் சாரதா ஆச்சிக்கும் கடை கண்ணைத் திறக்கவில்லைஆனால் இதையெல்லாம் ஈடு செய்வதற்காகவோ என்னவோ ஒரு ஈடு இணையில்லாத அண்ணனைக்  கொடுத்திருந்தார்.


                 

         கையறு நிலையில் இருந்த சரஸ்வதி ஆச்சியையும்  சாரதா ஆச்சியையும் அவரது  இரண்டு ஆச்சிமார்களும்  அயித்தான்களும்  அண்ணன் மு. சுந்தரேசன் செட்டியாரும்  அவரது  மனைவி சிவகாமி ஆச்சியும்  கைகொடுத்தார்கள்வாழ்நாள் முழுவதும் கைகொடுத்தார்கள், தங்கள் காலத்திற்குப் பின்னும் தங்கள் தங்கையைப் போற்றிக் காக்க வேண்டும் என தத்தம் மக்களுக்கும் மருமக்களுக்கும் சொல்லி வைத்தார்கள்.

 

          அப்படிச் சொல்லி வைத்த சரஸ்வதி ஆச்சியின் அண்ணனும் ஆச்சிகளும் அவர்களின்  துணைவர்கள் எவரும் இன்று இல்லை, எல்லோரும் காலமாகிவிட்டார்கள்ஆனால் அவர்களுடைய சொல்லைக் காப்பாற்றும் வண்ணம் அவர்களுடைய மக்களும் மருமக்களும் சரஸ்வதி ஆச்சியைப் போற்றிக் காத்துவருகிறார்கள்.  

 

          இந்த அன்பும்  அரவணைப்பும் இரு தரப்பிலும் பரஸ்பரம் கொண்டாடப்பட்டுவருகிறது. சரஸ்வதி ஆச்சி தன்னுடைய ஆச்சி மகள்களில் திருமணங்களில் 5 (ஐந்து) பவுன் கொடுத்திருக்கிறார்.

 

  சிவசேகரி ஆச்சி மகன் சுவாமிநாதனுக்கு வேலை கிடைக்க சாரதா ஆச்சி பெருமுயற்சி எடுத்திருக்கிறார்அவர் முயற்சியால் தான் என் வாழ்க்கை நன்கு அமைந்துள்ளது என்கிறார் அண்மையில் தமிழ்நாடு கிராம வங்கியில் கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் தேவகோட்டை நகரச் சிவன் கோவில் மேனாள் நிர்வாக அறங்காவலர் சோம. சுவாமிநாதன்

 

                  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எழுத்தராகப் பணியில் சேரந்து     மண்டல மேலாளராக உச்சம் தொட்டு பணி நிறைவு பெற்ற  தங்கள் அம்மான் மு. சுந்தரேசன் செட்டியார் நெறியாக வாழ்ந்து எங்களையெல்லாம் நல்வழிப்படுத்தியவர்கள் என்கிறார்.  மேலும் எங்கள் அம்மான்  மு. சுந்தரேசன் செட்டியார் பணியில் சிறந்து விளங்கினார்கள், சொந்தங்களை நன்கு வளர்த்துவிட்டார்கள் சேமிப்பு சிக்கனம் முதலீடு என எல்லாவற்றிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனும் சோம. சுவாமிநாதன் கந்தர் சஷ்டி விழாவின் தலைவாரக இருந்த பொழுது தனது தலைமையுரை தன் அம்மானின் சிறப்புகளைப் பதிவு செய்தார்.

 

                          சரஸ்வதி ஆச்சியின் பால் அவருடைய அண்ணன் ஆச்சிகளின் பிள்ளைகள் கொண்டுள்ள பேரன்பின் வெளிப்பாடாக சரஸ்வதி ஆச்சியின் 83 வது பிறந்த நாளை உறவைக் கூட்டி ஊறைக் கூட்டி பெருவிழாவாக 23.06.2022 எடுக்கிறார்கள்.

           

             விழா நாயகி சரஸ்வதி ஆச்சியின் அப்பச்சி விலாசத்தோடு தொடங்கும் அழைப்பிதழ் அவருடைய ஐந்தாம் தலைமுறை வாரிசுகள் வரை நீள்கிறது. இவ்விழா தேவகோட்டைக்கே நீண்ட மெய்ப் புகழைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

 

நலந்தா செம்புலிங்கம்

19.06.2022

No comments:

Post a Comment